நீர்



உலகின் முதல் இணைய நூல் வெளியீட்டின் போது திசைகள் மாலன் கூறியது:

அடையாரில் ஒரு பெண்கள் கல்லூரி. எம்.ஜி.ஆர்-ஜானகி பெயரில் அமைந்தது. ஒருநாள் என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள். அரங்க மேடையில் அய்யா (வா.செ.) குழந்தைசாமி, அருமைத் தங்கை கனிமொழி, அப்புறம் யார் யாரோ பேராசிரியர்கள். அகில இந்தியக் கருத்தரங்கம் என்று அறிவித்திருந்ததால் அனைத்துக் கல்லூரியும் ஆஜராகி இருந்தது.

என்னைப் பேச அழைத்த போது மின்னல் போல் நெஞ்சில் ஒர் எண்ணம். நெடிது தொடரும் சிந்தனை மரபில் சிறிது காட்டலாம் என்று நினைத்தேன்.

நீர் இன்றி அமையாது யாக்கைக்கு என்று சொன்ன சங்ககாலத்து குடபுலவியனாரை எடுத்துச் சொல்லி ஆரம்பித்தேன்.

அடுத்து நான் புகாரியின் இந்த வரிகளைத் தொடுத்துச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது கரங்களின் ஒலியால்:

சமைப்பதுவும்
உண்பதுவும்
உணடதனைச் செரிப்பதுவும்
செரித்ததெல்லாம்
ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும்
தண்ணீர்தான்
கருணை கூடத் தண்ணீரே
ஈரமில்லா
உள்ளத்தை
இதயதமென்று யார் உரைப்பார்?

அந்தக் கரவெலிகள் எனக்கா? புகாரிக்கா?

இருவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை. அந்த விரலொலிகள் அத்தனையும் எங்கள் தமிழுக்கு. இதை எனக்குச் சொன்னதும் இந்த புகாரிதான்:

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து- தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்!



நீர்

தாகத்தைக் கொண்டுவிட்டுத்
தண்ணீரைக் கண்டோமா
தண்ணீரைக் கண்டுவிட்டுத்
தாகத்தைக் கொண்டோமா

கடலோடும் நதியோடும்
மழையோடும் அருவியோடும்
சலிப்பின்றி விழிபேச
அலுப்பேனோ வருவதில்லையே

சுற்றுகின்ற உலகமிதில்
சூழ்ந்ததெலாம் தண்ணீரே
சூரியனும் விழுங்கிடாமல்
காப்பதுவும் தண்ணீரே

சமைப்பதுவும் உண்பதுவும்
உண்டதனைச் செரிப்பதுவும்
செரித்ததெலாம் ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும் தண்ணீர்தான்
கருணைகூடத் தண்ணீரே
ஈரமில்லா உள்ளத்தை
இதயமென்று யாருரைப்பார்

மொழிபேசும் நாவுகளோ
சுழல்வதுவும் நீரில்தான்
கண்ணின்கரு மணிகூட
ஆடுவதும் நீரில்தான்

பிறந்தபோது உடைந்துவந்த
பனிக்குடமும் தண்ணீர்தான்
தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்

தேகத்துள் ஓடிநின்று
மோகத்தில் ஊறிவந்து
கருவாகி உருவாகி
உயிர்ப்பதுவும் தண்ணீர்தான்

தண்ணீரால் ஆனதினால்
தண்ணீரைக் கேட்டோமா
தாய்த்தண்ணீர் வேண்டித்தான்
சேய்த்தண்ணீர் தவிக்கிறதா

தண்ணீரின் கூறுகளாய்
உலகெங்கும் உயிரினங்கள்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்

8 comments:

cheena (சீனா) said...

நீரினைப் பற்றிய ஒரு சிந்தனைச் சிதறல். நீருக்கு இவ்வளவு பெருமைகளா ??

//கடலோடும் நதியோடும்
மழையோடும் அருவியோடும்
சலிப்பின்றி விழிபேச
அலுப்பேனோ வருவதில்லையே// - உண்மை உண்மை

//சமைப்பதுவும் உண்பதுவும்
உண்டதனைச் செரிப்பதுவும்
செரித்ததெலாம் ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே//

அருமையான புதுமையான சிந்தனை. வைர வரிகள். வள்ளுவனை நினைக்கச் செய்யும் வரிகள்.

உண்டது செரித்தபின், உண்மையில் பசித்தபின்
கண்டதை உண்ணாமை உணவு.

//பிறந்தபோது உடைந்துவந்த
பனிக்குடமும் தண்ணீர்தான்
தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்

தேகத்துள் ஓடிநின்று
மோகத்தில் ஊறிவந்து
கருவாகி உருவாகி
உயிர்ப்பதுவும் தண்ணீர்தான்//

பனிக்குடமும் தண்ணீர்தான் - இறக்கும் போது தெளிப்பதுவும் தண்ணீர்தான்.

நல்லதொரு கவிதை - பாராட்டுகள் - நல் வாழ்த்துகள்.

கரவொலி கேள்விப் பட்டிருக்கிறேன். விரலொலி வித்தியாசமான சிந்தனையில் சிதறிய ஒலி.

//விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து- தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்!//

விரலுக்கு மரியாதை தரும் மாண்பு பாராட்டத்தக்கது.

அதிரை சித்திக் said...

அன்பு கவி புகாரி ..தண்ணீரை பற்றி கவிதை அற்புதம் ..

கண்ணீரும் தண்ணீர்தான் ..ஈரமில்லா இதயம் ..

அர்த்தமுள்ள வார்த்தைகள் அறிவி போல்

கவியாய் வந்து விழும் அற்புதம் அன்பு கவி புகாரி அவர்களிடம் கண்டேன்

எழுத்து சுதந்திரம் ..எதுவரை ..

கவியால் பதில் தாருங்களேன் ..

அன்புடன் புகாரி said...

அன்பின் அதிரை சித்திக்,

எழுத்து என்றாலே அதற்குப் பொருள் சுதந்திரம்தான். சுதந்திரம் இல்லாதது எழுத்தல்ல, இழுக்கு!

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...
This comment has been removed by the author.
Anonymous said...

எப்போது படித்தாலும் மங்காத சுவாரஸ்யம் - இன்று உங்கள் தளத்தில் கொஞ்சம் நடக்க வாய்ப்பு வாய்த்ததில் மகிழ்ச்சி - சேவியர்

அன்புடன் புகாரி said...

மகிழ்ச்சி சேவியர்

crown said...

தாகத்தைக் கொண்டுவிட்டுத்
தண்ணீரைக் கண்டோமா
தண்ணீரைக் கண்டுவிட்டுத்
தாகத்தைக் கொண்டோமா.
-----------------------------
தாகம் கொண்டோம் அதனால் தண்ணீர் கண்டோம்.
இன்று விரதம் ( நோன்பு) தாகம் இருந்தாலும், கருனையின் நீரினால் தாகம் தணித்திருக்கிறோம். பின் தாகத்துக்கு நீர் ஆகாரம் அதுவும் நீரே ஆகும் ஆதலால் தாகத்துக்கு தண்ணீர் கொண்டோம் எல்லாம் வல்ல இறையிடத்தில்.

crown said...

தண்ணீரின் கூறுகளாய்
உலகெங்கும் உயிரினங்கள்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள் .
-------------------------------------
அருமை,அருமை!!! தண்ணீர் இன்றி எல்லாமே வெற்றிடம்,ஆனால் வெற்றிடமே இல்லாமல் வெற்றி இடம் தந்திடும் கவித்தண்ணீர் பெற்றிடுமே பேறிடம்.கவிதை தாகத்தால் வந்த தண்ணீர் கவிதையிலே இன்னும் தாகம் தீர்ந்தும் சுவை நாக்கில் ஈரமாய் ஒட்டிக்கொண்டிருக்கு. வாழ்த்துக்கள்.