இ. விமரிசனம் - சேவியர் - வெளிச்ச அழைப்புகள்


கனடாவில் வாழும் தமிழ்க் கவிஞர் புகாரியின் முதல் கவிதைத் தொகுப்பு இது!

தமிழகத்தைவிட்டு வெளியே இருக்கும் அத்தனை பேருக்கும் தமிழ்மீது தீவிர காதல் இருக்கும்போல!

இங்கே
ஒரு தமிழனைச் சந்தித்து
தமிழில் உரையடும்போதுமட்டுமே
நான் பேரானந்தம் அடைகிறேன்


என்னும் முன்னுரையோடு ஆரம்பிக்கிறார் கவிஞர்.

மொத்தம் முப்பது கவிதைகள், கவிதையின் அத்தனை வடிவங்களையும் கொஞ்சமேனும் தொட்டுவிடவேண்டும் என்னும் கவிஞரின் வேகம் இத்தொகுப்பில் புரிகிறது. கிராமியக் கவிதை, நகர்ப்புறக் கவிதை, இசைக் கவிதை, ஆராய்ச்சிக் கவிதை, தனி நபர்க் கவிதை, நிகழ்ச்சிக் கவிதை என்று பட்டியல் இன்னும் நீள்கிறது.

கவிஞன்
தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்
கவிதை


என்னும் முதல் கவிதையிலேயே கவிதைமீதும், கவிஞர்மீதும் நமக்கு ஓர் ஈடுபாடு வந்துவிடுகிறது.

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை


என்னும் வரிகளில் வாழ்வின் எதார்த்தம் வழிகிறது. கவிதைகள் எதுவும் அவலச்சுவையோடு முடியவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி.

'இலவசம்' மற்றும் 'குளிர்' ஆகிய கவிதைகளை அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் வாசகர்களே அதிகம் ரசிக்க முடியும். இலவசம் கவிதையில் கவிஞரின் நகைச்சுவை நடை கவிதை உடையோடு அவைக்கு வந்து நடனம் ஆடுகிறது.

தாலி வாங்கினால்
பொண்டாட்டி இலவசம்
என்று
கடைதிறக்காததுதான்
மிச்சம்


எனவும்

ஒன்றுக்கு மூன்று இலவசம்
என்று அறிவித்துவிட்டாலோ
செத்த பிணங்களும்
விற்றுத் தீரும் அவலம்


என்றும் கவிஞர் அடுக்கிக்கொண்டேபோகும்போதும் நிலைமையின் வீரியம் மனச்சுவர்களில் பட்டென்று ஒட்டிக்கொள்கிறது

'குளிர்' - இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று. அத்தனை வரிகளையும் செதுக்கிச் செதுக்கி உறையவைத்திருக்கிறார் புகாரி. எழுதும்போது பனியில் புரண்டுகொண்டே எழுதினாரோ என்று தோன்றுமளவுக்கு ஒரு சில்லிடும் குளிர் கவிதை வரிகளில் பாய்ந்து கிடக்கிறது. இன்னொரு கசிறப்பான கவிதை 'இருட்டு பேசுகிறது' - ஓஷோவின் இருட்டு பற்றிய சிந்தனைகளும், புகாரியின் கவிதையும் சில இடங்களில் ஒத்துப்போவது இனிய ஆச்சரியம்!

'தாமதம்', 'நிறுத்தி வைக்கப்பட்ட நதிகள்', 'இன்னும் விடியாமல்' போன்ற கவிதைகள் மனித சமூகத்தைக் குறிவைத்து எழுதப்பட்டவை. கவிதை என்பது கவிதை மட்டுமே, அதற்கும் சமூகத்துக்கும் சம்பந்தமில்லை என்று சந்திகளில் சந்தித்துப் பேசிக்கொள்ளும் இலக்கியச் சிந்தனைகள் புகாரியின் கவிதைகளில் இல்லை, கவிதை என்பது சமூகத்தைச் சேரவேண்டும். படிக்கும் மக்கள் ஒரு கணமேனும் கவிதையின் தாக்கத்தை மனசுக்குள் வாங்கவேண்டும் அந்தத் தாக்கம் சமுதாயத்தில் சிறு துரும்பையேனும் நகர்த்த வேண்டும் என்னும் உன்னத ஆசையேஇவர் கவிதைகளில் நிறைய. உதாரணமாய் -

நம்
அரசியல் வயல்களில்
அழுகிய
விதைகளுக்கே
அமோக விளைச்சல்


இன்றைய அரசியல் நிலமையை இப்படிப் 'பளிச்' என்று சமீபத்தில் எந்தக் கவிதையும் சொன்னதாக நினைவில்லை!

'செப்டம்பர் 11' கவிதையும், நடிகர் திலகம் பற்றிய கவிதையும் கவிஞரின் ஆழமான வேதனையின் அழுத்தமான, அழகிய வெளிப்பாடு! கவிதையின் ஒவ்வோர் வரியின் முடிவிலும் சோகத்தின் அடர்த்தி. கவிஞர்கள் சோகமாவது நல்லதுதான் போலிருக்கிறது, சாமானியன் கண்ணீரால் அழும்போது, கவிஞன் கவிதைகளால் அழுகிறான்! கண்ணீரைக் காலம் துடைத்து விடுகிறது, கவிதையோ அடிக்கடி கண்ணீர் அணையை உடைத்து விடுகிறது!

கவிதையின் நீளம் குறைவாக இருந்திருக்கலாம் என்பதுமட்டுமே குறையாக் காண்கிறேன். ஏழெட்டு பக்கங்கள் நீளும் கவிதைகள் கவியரங்கங்களில் கைதட்டல் பெறும் அளவிற்கு புத்தகங்களில் ரசிக்க்பபடுவதில்லை. இரண்டாவது பக்கம் போரடித்தால் வாசகன், மூன்றாவது பக்கம் செல்வதற்குப் பதிலாக அடுத்த கவிதைக்கு விமானமேறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது! சில கவிதைகள் ஒரே விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் தொடர்ந்து சொல்வது சற்றே சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. தலைப்புக் கவிதையான 'வெளிச்ச அழைப்புகள்' அவ்வளவாக திருப்திப்படுத்தவில்லை. புகாரியின் இரண்டாவது தொகுப்பு இவற்றைச் சரிசெய்துவிடும் என்பது எனது அழுத்தமான நம்பிக்கை.

முழுமையான தொகுப்பாகப் பார்க்கும்போது இந்த சின்னச் சின்னக் குறைகள் எல்லாம் காணாமல் போய்விடுகின்றன. முன்னுரையில் கவியரசர் வைரமுத்து சொல்வதுபோல, 'இந்தத் தொகுப்பு கவியுலகில், புகாரி அவர்களுக்கு பிரகாசமான இடத்தைத் தரும்'

1 comment:

Anonymous said...

திரும்பிப் பார்த்தல் சுவாரஸ்யமானது :)