தைமகளின் தமிழ்ப் புத்தாண்டு

தைமகளே
எழில் தமிழ்மகளே
தாய்மடியில் உன் தாலாட்டே

எத்தனையோ
தமிழ் மாதங்களும்
இன்னமுதத் தேன் அளந்தாலும்

முத்தொளிரும்
தமிழ்ப் புத்தாண்டில்
முரசொலித்தே உன் முகமெடுத்து

முத்தமிழர்
ஏன் முன்வைத்தார்
மொழிவாயே என் தைமகளே

அத்தைமகள்
விழி மார்கழியும்
அழகொளிரும் சுடர் சித்திரையும்

முத்தமிடும்
பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்

எத்தனையோ
இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்

சித்திரமாய்ப்
பண் பாடிவர
தைமகளே நீ ஏனடியோ

கத்தரியாய்த்
துயர் துண்டாடி
அமுதளக்கும் நிலத் தைமகளே

எத்தனையோ
துய்ர் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே

தைமகளே
தவப் பொற்கொடியே
ஏருலகம் உன் சொற்படியே

முத்தெடுக்கும்
நீள் மூச்சழகே
முறைதானே நீ தலைமகளே

முத்துரதம்
மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க

எத்திசையும்
வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட

புத்தாண்டின்
புது நல்வாழ்த்தாய்
புவியெங்கும் தமிழ்ச் சுரம்பாட

தைமகளே
நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்

No comments: