திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்

பிப்ரவரி 01, 2003: பதினாறு தினங்கள் விண்ணில் பறந்த கொலம்பியா விண்கலம் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியதில் இந்தியப் பெண்மணி கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.


ஆகாயக் கல்லறையில்
அழுக்கில்லா வெற்றிடத்தில்
அந்த ஏழு வீரர்களும்
அமைதியாக உறங்கட்டும்

மண்ணிலிருந்து வானத்தில்
விழுந்துவிட்ட நட்சத்திரங்கள்

திரும்பிய பயணத்தில்
திரும்பாத பட்டங்கள்

சாதனைக்கு மட்டுமின்றி
சாவுக்கும் சேர்த்தே
ஒரே பயணத்தில்
இருமுறை பறந்துவிட்ட
அவசரப் பறவைகள்

விண்ணில் பாய்ந்தபோது
மண்ணில் வாழ்த்தினர்
மண்ணுக்கு வரும்போது
விண்ணுக்கு அழைத்தது யார்

கொலம்பியா விண்கலம்
குழம்பிப் போனதா
கொடுப்பினை என்பதும்
தடுக்கிக் கொண்டதா

நாசாவின் கண்களில்
இன்னுமொரு முள்
சாகசக் களங்களில்
சாவுமோர் பிறப்பு

அரியானாப் பெண்ணின்
ஆகாய வெற்றி
இந்தியத் தலையில்
இன்னுமொரு மகுடம்

மகுடத்தின் கொடிகள்
அரைக்கம்பம் பறக்க
மறைந்தாயே தோழி
முக்காலும் வாழி

சாதனையற்றவன் சாவு
புறமுதுகு காட்டித்தான்
உங்களின் சாவோ
நெஞ்சிலே ஈட்டிதான்

ஆகாயக் கல்லறையில்
அழுக்கில்லா வெற்றிடத்தில்
அந்த ஏழு வீரர்களும்
அமைதியாக உறங்கட்டும்

No comments: