நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா
பெண்கள் உயிரும் பழரசம் ஆகிறதா
இச்சை உனக்கும் பொருளா ஆணவமா
இருட்டுக் குள்ளே வெளிச்சம் புதைபடுமா

ஓருயிர் அழிந்தால் உலகம் அழவேண்டும்
உன்னுயிர் போல்தான் அந்நியர் உயிராகும்
போரெனில் அழிவது பாமரத் தலைதானோ
பண்பைத் துறந்த உன்பெயர் அழியாதோ

பேச்சே இல்லாப் பண்டைக் காலத்தில்
பயத்தால் கொன்றான் பார்க்கும் மனிதர்களை
ஆச்சோ அப்படி ஆயிரம் மொழியிருந்தும்
அரசியல் தீர்வில் ஆயுதம் வரலாமோ

ஏழை வயிற்றின் கூழைப் பறித்தெடுத்தே
ஏவு கணைகள் ஆயிரம் செய்கின்றாய்
பாலை வனத்தின் எண்ணெய்க் கிணறுகளில்
தீயை மூட்டி நாசம் செய்கின்றாய்

அகிலம் யாவும் உயிரினச் சொத்தாகும்
அதனுள் என்றும் அன்பே மூச்சாகும்
முகிலைப் போலே உப்பை விலக்கிவிட்டு
மக்கள் மீதுன் நல்லதைப் பொழிந்துவிடு

கெடுப்பவன் என்றும் கெட்டே சாகின்றான்
கொடுப்பவன் தானே சரித்திரம் ஆகின்றான்
அடுப்பினை எரிக்க அவசரப் போர்வேண்டும்
அத்தனை மாந்தரும் உண்கிற நிலைவேண்டும்

உலகின் தலைவன் யாரோ அவன்யாரோ
உயிர்கள் காக்கும் கருணை வேந்தனன்றோ
சலவை செய்துன் அழுக்கைத் போக்கிவிடு
சகலரும் வாழ பூமியைப் பூக்கவிடு



உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

No comments: