ஆகாயம்

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

நீரும் நிலமும் காற்றும் நெருப்பும்
வானம் இட்ட தேவப் பிச்சை
ஐம்பெரும் பூதம் என்பதும் தவறு
அனைத்தும் ஈன்ற வானம் வேறு

வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே

விதையும் விதையின் உள்ளும் இருட்டு
வெளிச்சம் வாழும் வெளியும் இருட்டு
நிம்மதி கூட்டும் நித்திரை இருட்டு
ஆறுதல் சொல்லும் அமைதியும் இருட்டு

இயற்கை எல்லாம் இருட்டின் பிள்ளை
இருட்டே இன்றி வாழ்க்கை இல்லை
பிறப்பும் இருட்டு இறப்பும் இருட்டு
உயிர்கள் யாவும் இருட்டின் திரட்டு

கோள்கள் யாவும் இருட்டில் துகள்கள்
விண்மீன் கூட்டம் இருட்டின் கனிகள்
இருட்டில் இருந்தே எல்லாம் பிறப்பு
இருட்டே இன்றி எதுவும் இல்லை

நீண்டு விரிந்த மாபெரும் வெளியில்
பூமிப் பந்தும் ஒற்றைத் தூசு
ஒற்றைத் தூசின் உள்ளுக் குள்ளே
தூசுத் துகளாய் மனிதப் பிறப்பு

மனிதன் வாழும் ஆயுட் காலம்
இருட்டின் வயதில் பொருட்டே இல்லை
இருட்டே நிச்சயம் இருட்டே நிரந்தரம்
இருட்டே சத்தியம் இருட்டே பூரணம்

2 comments:

cheena (சீனா) said...

வானத்தைப் பாட வந்துவிட்டு, இருட்டைப் பற்றி பாடிய கவிஞனின் நோக்கம் என்ன ?

//அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்//

ம்ம்ம்ம் -

இது வரை வானத்தையும் மற்ற பூதங்களுடன் தான் சேர்த்துப் பேசி இருக்கிறார்கள். இது தான் முதல் முறை. வானத்தை, மற்ற பூதங்களைப் பிச்சையாக இட்ட தேவனாக உருவகப் படுத்துவது. இது தான் முதல் முறை.
மாறு பட்ட சிந்தனை.

நல் வாழ்த்துகள்.

கவிநாயகர் கந்தவனம் said...

பஞ்சபூதங்கள் பற்றிய கவிதைகள் உலகத்து உயர்ந்த கவிதைகளோடு வைத்துப் போற்றப்பட வேண்டியவை.