24 எனக்குக் கவிதையெழுத வேண்டாம்

எனக்குக்
கவிதை எழுதவேண்டாம்
பற்றியெரிந்து நெற்றி வெடித்துப்போன
ஈழக்கொடுந்துயர் பற்றி எனக்கு
ஒரு கவிதையும் எழுதவேண்டாம்

அரை நூற்றாண்டு மூச்சுத் தவமாய்
இதோ ஈழம் என்று
நடு உயிரில் கனவுகண்டு
ஏக்க உணர்வில் வாழ்ந்துவந்த
அப்பாவி உயிர்களின்
அடிப்படை உரிமைகளும்
துரோகத் தீயினில் பொசுங்கிப்போன
யுகதுக்கத்தை எனக்கு
கவிதையாய் எழுதவேண்டாம்

கள்ள நரியொருபக்கம்
மூர்க்க நாயொருபக்கம்
வானங்கொள்ளா வெறி பிடித்த
ஓநாயொருபக்கமென்று
குதறிக்குதறி வேட்டையாட

சோறு வேண்டாம் எங்களுக்கு
தாய்மண் தின்றால் போதுமென்று
பெற்றெடுத்த மண்மீது
அடங்கா காதல் கொண்ட
மானினம் மடிந்த அவலத்தை
எனக்குக் கவிதையாய் எழுதவேண்டாம்

பௌத்தத்தின் பொருள்
அன்பென்று சொன்னார்கள்
உயிர்களின் மீதா
உயிர்களைத் தின்னவா
என்று சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்

புத்தகங்களும் மக்கள்தாம்
உணர்வுகளோடு வாழும்
பல நூற்றாண்டுகளின் உயிர்க் கொத்துக்கள்
அன்றே அவற்றைத் தீக்குள் சமாதிவைத்த
சுடுகாட்டுக் கரங்கள்
வேறெதைத்தான் இன்று செய்துவிடும்

தீவிரவாதம் அழிப்பதாயொரு
பௌத்தப் படுதா கட்டிக்கொண்டு
எந்த யுகமும் காணா
உச்சத் தீவிரவாதம் காட்டிய
தந்திரமா வெற்றி

நச்சுக் கத்திகளுக்கு ஒத்திகை
கர்ப்பிணியரின் கருவசையும் வயிறுகளா

துஷ்ட துப்பாக்கி ரவைகள்தாம்
சோற்றுக்குச் சாவோரின் வாயிலூட்டும்
ஈர ரத்தப் பருக்கைகளா

ராணுவமென்றால் என்னடா
துரத்தித் துரத்தி
பத்துவயதுகளின் கற்பையும்
பேய்த்தனமாய்ச் சூறையாடும்
காட்டுவெறித்தனமா

உங்கள் இனவெறிப் பசிக்கு
உரிமை கேட்போரின்
உயிர்களையே கொத்துக் கொத்தாய்க்
கொடுத்தாகிவிட்டது

நேற்று விழித்த பிஞ்சையும் சேர்த்து
இன்று இந்த உலமே தெரிந்துகொண்டது
தமிழரென்றால் யாரென்று
ஆனால் அதற்குக் கொடுத்த விலைதான்
அதிகமோ அதிகம்

ஊசலாடும் அரையுயிர்ப் பிணங்களின்
ரத்தச் சொதசொதப்பில்
கனரக ஆயுதச் சக்கரங்களாவது
ரத்தக் கண்ணீர் சிந்தின
நீங்களோ சிவப்புக் கம்பளம் என்று
குதூகலித்தீர்கள்

அலறித் துடித்த அத்தனை உயிர்களின்
கடைசிப்பொழுது சாபங்களும்
சும்மா இருக்காதடா
பெரும் சுனாமிகளாய் எழும்

குள்ளநரி அரசியல் கூத்துகட்டி
நீங்கள் ஆடியதல்ல வெற்றி
அறம்காத்து வருவதொன்றே
நிரந்தர வெற்றி

உரிமை கேட்பது அறம்
தரமறுப்பது அரக்கம்

போராடுவது அறம்
புதைத்துப்போடுவது அரக்கம்

இனியொரு தமிழ்த் தீபாவளி வரும்
அன்று நரகாசுரம்
தன்னைத்தானே எரித்துக்கொள்ளும்

கொஞ்சம் பொறு
உலகத் தமிழினம் ஒற்றுமைச் சிறகுகளை
ஒன்றனுக்குள் ஒன்றாக
அறத்தறியில் நெய்துகொண்டிருக்கிறது

துரோகத் துருப்பிடித்த அச்சாணியோடு
அதுவரைக்கும் இரு

8 comments:

தமிழ்மன்றம் செல்வா said...

அறத்தறியில் நெய்துகொண்டிருக்கும் போராட்ட எதிர்பார்ப்புடன்
செய்த உங்கள் கவிதை நன்று கவிஞரே

அன்புடன்
செல்வா

நா. கணேசன் said...

நானும் உடம்படுகிறேன். தமிழ்க் கவிகளின் சொற்கள் வலிமையுடையவை,
உரைநடை மழைக் காளான் போல - கவிதையோ காலத்தை வெல்லும்.
நன்றி!

புகாரி - தமிழ்மணம் கருவிப்பட்டையில் “அனுப்பு” என்ற பொத்தானைச்
சொடுக்கிவிடுங்கள். பின்னர் http://tamilmanam.net காட்டும்.
மேலும் இதற்கு மறுமொழி வருமாயின், அதை “ம” திரட்டி
தானாய்த் திரட்டும். இப்போது ஒரு நாளைக்கு 13-14,000 பேர்
அத் தளத்தைப் படிப்பதால் கவிதைகள் சிலர் மனத்தையாவது தைக்கும்.

அன்பிணை,
நா. கணேசன்

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

பார்ராட்ட வார்த்தைகளின்று கண்ணீருடன் தத்தளிக்கிறேன்.

அன்பான நன்றிகள்

அன்புடன்
சக்தி

ஓளியவன் said...

நல்ல உணர்வின் வெளிப்பாடு.

வேல் said...

நெஞ்சிலிருக்கும் சோகத்தையும் கோபத்தையும் அருமையா கவிதையில் சொல்லிருக்கீங்க புகாரி..! ஈழம் பற்றிய இன்றைய நிலையும் அப்படியே கவிதைகளில் இருக்கு... மனசு இப்பவும் கனக்கிறது... வேதனைகளில்..!

ஈழத்தை பற்றி நல்ல கவிதைக்கு நன்றி புகாரி..!

பூங்குழலி said...

ஊசலாடும் அரையுயிர்ப் பிணங்களின்
ரத்தச் சொதசொதப்பில்
கனரக ஆயுதச் சக்கரங்களாவது
ரத்தக் கண்ணீர் சிந்தன
நீங்களோ
சிவப்புக் கம்பளம் என்று
குதூகலித்தீர்கள்

என்ன வென்று சொல்ல என்றறியாமல் தவிக்கிறேன் ....அருமை

காமேஷ் said...

அரை நூற்றாண்டு மூச்சுத் தவமாய்
இதோ ஈழம் என்று
நடு உயிரில் கனவுகண்டு
ஏக்க உணர்வில் வாழ்ந்துவந்த
அப்பாவி உயிர்களின்
அடிப்படை உரிமைகளும்
துரோகத் தீயினில் பொசுங்கிப்போன
யுகதுக்கத்தை எனக்கு
கவிதையாய் எழுதவேண்டாம்

நச்சுக் கத்திகளுக்கு ஒத்திகை
கர்ப்பிணியரின் கருவசையும் வயிறுகளா
துஷ்ட துப்பாக்கி ரவைகள்தாம்
சோற்றுக்குச் சாவோரின் வாயிலூட்டும்
ஈர ரத்தப் பருக்கைகளா

உண்மை

அ.முத்துலிங்கம் said...

அடிமனதைப் போய் கீறுகிறது கவிதை. எல்லாவற்றையும் மறக்கவே முயற்சிசெய்கிறேன். உங்கள் கவிதை கிளறிவிட்டது.
விதியைதான் நினைக்கவேண்டியிருக்கிறது.
நன்றி
அ.மு