மலிந்துபோன கற்பழிப்புகளும் கண்டனக்குரல்களும்

வளர்ந்த
வண்ணமாய்த்தான்
இருக்கிறது

சின்னஞ்சிறு பெண்களை
நாசப்படுத்தும்
வன்புணர்ச்சி
பலாத்காரம்
கற்பழிப்பு...

அறம் துறந்தவர்களே
அதிகரிக்கிறார்கள்
நாளுக்கு நாள் நம்மூரில்

அபலைப் பெண்களைக் காக்க
சட்ட ஒழுங்கு
ஒழுங்காய் இருக்க வேண்டும்

திருத்தப்பட வேண்டியவர்கள்
காவல் துறையினர்

தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
அறந்துறக்கும் வக்கிரக்காரர்கள்

நேர்மையும் பொறுப்பும்
காவல் துறையினரிடம்
முழுமையாக வந்துவிட்டால்
அறம்பிறழ்வோர் அஞ்சுவர்

அஞ்சுதலை மிஞ்சுவோர்
அழிக்கப்படுவர்

வெறும் காவல் துறையைக்
குறைகூறினால் தீர்ந்ததா
அவர்களை ஆட்டுவிக்கும் ஆட்சியாளர்கள்
அறம் மிதிப்பவர்களாய் இருக்கும்போது

என்றால் அரசியல் வாதிகளே
இதற்கு முழுப்பொறுப்பு

இல்லை இல்லை
அந்த அரசியல்வாதிகளை ஏற்றி
சிம்மாசனத்தில் அமர வைக்கும்
நாமல்லவா குற்றவாளிகள்

அரசியல்வாதிகளின்
ஊழலை ஆதரிக்கிறோம்
அவர்களிடமிருந்து நம் செல்வத்தையே
பிச்சையாய்ப் பெற காத்துக்கிடக்கிறோம்

அவர்களின் உண்மையான கைக்கூலிகளாய்
நாம்தான் இருக்கிறோம்

அரசியல்வாதிகள் அறம்பிறழும்போது
அடித்து நொறுக்கி அறமற்றவனே வெளியேறு
என்று பதவி நீக்கம் செய்ய நாம் என்ன செய்கிறோம்

ஆகவே மக்களே
மக்களாகிய நாம்தான் இப்படிச்
சின்னஞ்சிறு கண்மணிகளைக் கொடூரமாய்
வன்புணர்ந்து வன்புணர்ந்து வீதியில் எறிகிறோம்.

நாம்தான் மக்களே நாமேதான்

No comments: