மௌனம்...

வரவழைத்த மௌனம்.... ஒரு பழைய கவிதை
காணாமல் போன என் பதின்ம வயதுக் கவிதைகளுள் சில கவிதைகளே சிக்கின என்று எழுதி இருந்தேன். அப்படிச் சிக்கிய கவிதைகளுள் இதுவும் ஒன்று.
ஆனால் ’புதுச்செருப்பு’ என்ற கவிதையைப் போல இது எனக்கு அத்தனை பிடித்தமானதாய் இல்லை. ’புதுச்செருப்பு’ கவியநயம் அதிகம் கொண்டதாய் இருந்தது. கற்பனையும் போதிய அளவு இருந்தது. ஆனால், இது ஒரு அனுபவக்கவிதையாய் இருக்கிறது. அனுபவம் என்றால் ஒரு துக்கத்தைப் பகிரும் அனுபவம்.
நான் என் பழைய கவிதைகளை மீண்டும் எடுத்துப் பார்க்கும்போது, நம்பிக்கையைத் தட்டி எழுப்பாத கவிதைகளை கவிதைகளாய் ஏற்பதில்லை. இக்கவிதையும் நம்பிக்கை தரும் கவிதையாய் இல்லை என்பதால் கிழித்தெறிவது என்ற முடிவுக்குத்தான் வந்தேன்.
இருந்தாலும், இப்போதைக்கு இதை என் முகநூலில் மட்டும் இடலாம் என்று இடுகிறேன்.
இழப்பும் அதற்கான துக்கமும் மனித வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பக்கங்கள்தாம். அதனுள்ளேயே மூழ்கிவிடுவதும் மனதுக்குப் பிடித்த செயல்தான். ஆனால் அதிலிரிந்து வெளிவந்துவிடுவதுதான் அறிவுடைமை. அந்த அறிவின் தேடலுக்கு மனதைப் பழக்கவேண்டும். காலம் அதற்குத் தன் ஆயிரம் பல்லாயிரம் கைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
சென்ற தென்றல் திரும்பாதா என்று அழுவதைவிட புதுத்தென்றல் வீசாதா என்று காத்திருப்பதே சிறப்பு.
உங்கள் பாடல்களுள் மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய பாடல்கள் எவை என்று கேட்டபோது, கண்ணதாசன் சொன்னார், வாழ்க்கையின் தத்துவங்களை, சோகங்களை எடுத்துச் சொல்லும் பாடல்களையே பலரும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள் என்றார்.
அப்படிப் பார்த்தால், இந்தக் கவிதையும் காயம்பட்ட இதயங்களின் மயிலிறகாய் ஆகலாம்தான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
மௌனம்....
உள்ளுக்குள்
ஒரு தேடல்....
மிக நிரந்தரமாய்....
எப்போதோ வந்து
எங்கேயோ தொலைந்த
வசந்த காற்றின்
வாசனை
இன்னமும் மிச்சமிருந்து
என்
நிம்மதிப் பொக்கிசத்தை
மிச்சமின்றிச்
சுரண்டிவிட்டது....
எப்பவும்
ஆடிக் கொண்டிருந்த
கால்களும் மனமும்
இப்போதெல்லாம்
மேகங்கள் கருக்காதா
சென்ற தென்றல் திரும்பாதா
என்றே
மடக்கிய தோகைகளுடன்
தவமிருக்கின்றன...
நிலைக்கத் தெம்பில்லாத
கானலைத் தேடியே
இந்த
நெஞ்சம் அலைவது
ஒரு
விசித்திரம்....
மனதுக்கும் மூளைக்கும்
மதிப்பிடமுடியாத
தூரம் இருப்பது
இப்போதுதானே தெரிகிறது....
தெரிந்தும்....
தூரத்தைத் தகர்த்து
கண்ணீர்க் கண்களை
அடைக்க
என்
பிஞ்சு விரல்களின்
பிரயத்தனங்களெல்லாம்
வெறும்
வீண் என்றானபோது
நான்
மௌனத்துக்குள்
புதைந்துபோனேன்.

No comments: