தஞ்சாவூர்


என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கிவிடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டிவைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?

இப்படி ஒரு முன்னுரையுடன்தான் நான் இக்கவிதையை பச்சைமிளகாய் இளவரசி என்ற என் நான்காவது கவிதை நூலில் வெளியிட்டேன். இந்தத் தலைப்பில் நான் ஏராளமாய் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆம் நம் ஊரைப் பற்றி நாம் பேசவோ எழுதவோ ஒரு நாள் ஒரு இரவு போதுமா?

முதலில் தஞ்சாவூர் என்ற தலைப்பிட்ட இக்கவிதைக்கு மூலமாய் இருந்தது என் நண்பனின் திருமண வாழ்த்தில் நான் எழுதிய ஒரு கவிதைதான். அந்தக் கவிதையில்

வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் உரந்தையில்

என்று ஒரு பத்தி வரும். உரந்தை என்றால் ஒரத்தநாடு. நான் பிறந்த என் பொன்னூர், என் மணியூர், பொழுதும் இனிய நினைவுகளைத் தரும் என் கண்ணூர்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

நெஞ்சிலும் தோளிலும் உரம் மிகுந்தவர்களின் நாடு உரத்தநாடு என்று சொல்வார்கள். சரபோஜி மகாராஜாதான் ஒரத்தநாட்டை ஆண்ட மன்னர். ஒரத்தநாட்டின் ராணி முத்தம்பாள் தன் உயிரைத் தந்து ஒரு புதையல் எடுத்ததாகவும், அதைக்கொண்டு 40 அன்ன சந்திரங்களை மன்னர் நிறுவியதாகவும் சொல்வார்கள்.

அதனால் ஒரத்தநாட்டிற்கு முத்தம்பாள் சத்திரம் என்றும் பெயருண்டு. அந்தக் காலத்தில் ஒரத்தநாட்டுச் சத்திரத்தில் வந்தோருக்கெல்லாம் இலவச உணவு உண்டு. தற்போது அது ஏழை மாணவர்கள் படிப்பதற்கென்று மாற்றப்பட்டுவிட்டது. அதாவது எந்த செலவுமே இல்லாமல் பள்ளிப்படிப்பை ஏழை மாணவர்கள் இங்கே முடிக்கலாம்

சரபோஜி மகாராஜாவின் அரண்மனையில்தான் நான் என் பள்ளிப்படைப்பை முடித்தேன். அரண்மனையின் சுவர் முழுவதும் நிறைத்த மகாராஜாவின் படம் இப்போதும் கம்பீரமாக அங்கே இருக்கிறது. அது பதினோராம் வகுப்புக்கான வகுப்பறையும்கூட. போர் வீரர்கள் பயிற்சிபெற்ற இடம்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம். அரண்மனைக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். மகாராணி நீராடிய இடம்.

ஊரின் இருபக்கமும் இரண்டு பெரும் அரசுத் தோட்டங்கள். கீழத்தோட்டம் மேலத்தோட்டம் என்பார்கள். கீழத்தோட்டத்தில் மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை என்று சில பண்ணைகள் உண்டு. எனவே விலங்கினங்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு முழுவதும் எங்கள் ஊரில்தான்.

பல ஊர்களிலிருந்தும் பாலும் முட்டையும் கோழியும் வாங்க ஒரத்தநாடு வருவோர் பலருண்டு. மேலத்தோட்டம் என்பது அருமையான இடம். உயரமாக புற்கள் முதல் பெரும் மரங்கள்வரை வளர்க்கப்படும்.

ஊருக்குச் சற்று வெளியே ஓடுவது கல்யாண ஓடை காவிரியிலிருந்து பிரிந்து பிரிந்து வந்து ஓடும் சிற்றாறு. ஒரத்தநாட்டைச்சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. ஒரத்நாடு தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர்கள்தான்.

அப்படி நான் என் ஊரைப்பற்றி என் நண்பனின் திருமண வாழ்த்தில் எழுதிய நான்கு வரிகளையே முதல் பத்தியாய் வைத்து தஞ்சாவூர் என்று எங்கள் ஊரின் மாவட்டத்தின் மீதப் புகழையும் பாடினேன். அதை என் நான்காம் கவிதைத் தொகுப்பில் அச்சேற்றினேன்.

அந்நூலுக்கு அணிந்துரை தந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம்  இக்கவிதையை வெகுவாக ரசித்தார். இதன் முதல் அடியையே தன் அணிந்துரைக்குத் தலைப்பாகவும் இட்டார். கூடவே இப்படியும் பாராட்டினார்.

இன்னும் சில இடங்களில் கவிஞரின் வார்த்தைகள் சிறு காற்றில் சலசலத்து ஓடும் சிற்றோடைபோல இனிமையாகக் காதிலே வந்து விழுகின்றன.

          வானூறி மழை பொழியும்
          வயலூறிக் கதிர் விளையும்
          தேனூறிப் பூவசையும்
          தினம்பாடி வண்டாடும்

இப்படி நுட்பமான வெளிப்பாடுகள், உணர்ச்சி விளிம்புகளில் உறையும் கவிஞர்களுக்கு எப்போதோ ஓர் அபூர்வமான தருணத்தில் மட்டுமே கிட்டுபவை.”

இனி உங்களிடம் நான் என்ன கேட்கப்போகிறேன். தஞ்சாவூர் அன்று பரந்து விரிந்த ஒரு மாவட்டம். இன்று துண்டுதுண்டுகளாய்ப் பிரிந்துவிட்டாலும் தஞ்சாவூர் என்றாலே அது சோழ நாடு. அந்தச் சோழநாட்டு மக்கள்தான் தஞ்சாவூர் என்னும் எல்லையும் தாண்டி பரந்து விரிந்து வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள். அவர்கள் மட்டுமின்று தங்கள் தங்கள் ஊரோடு ஒப்பிடும் அனைவரும் உங்களின் கருத்துக்களை அள்ளி வழங்குங்கள்.

நாம் நம் ஊர் நினைவுகளில் உல்லாசமாய் இருப்போம்:




வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் தஞ்சாவூர்

o

தேரோடித் தெருமிளிரும்
திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
பொன்னோடும் தஞ்சாவூர்

o

சேறோடி நெல்விளைத்து
ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
கண்ணோடிக் கறிசமைத்து


நீரோடி வளர்வாழை
நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
விண்ணோடும் தஞ்சாவூர்

o

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
தரம்மணக்கும் தஞ்சாவூர்

o

தலையாட்டும் பொம்மைக்கும்
அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
எழில்காட்டும் தஞ்சாவூர்

*  (ஜூலை 2004)

ன்புடன் புகாரி

#பச்சைமிளகாய்இளவரசி
#கவிஞர்புகாரி
#கவிதை

No comments: