நியூயார்க் நியூயார்க்

நான் பயணங்களில் அதீத விருப்பம் உள்ளவன். ஊர் உலகம் காடு மேடு சுற்றும் வாலிபனாக இருக்கவேண்டும் என்பது என் இதயத் துடிப்புகளுள் ஒன்று. அப்படி ஊர் சுற்றும்போதெல்லாம், நான் சென்ற இடங்களின் அழகை புத்தம் புதுக் காதலியின் எழிலை வர்ணிப்பதைப் போல உணர்வு பொங்க வர்ணிப்பேன். பெரும்பாலான இடங்களின் நிறைகளை மட்டுமே வர்ணிப்பேன்.

ஆனால் நியூயார்க் எனக்குப் புதிய அனுபவத்தைத் தந்தது. ஆகவே நான் கண்ட நியூயார்க்கின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இயன்றவரை இக்கவிதையில் சொல்லி இருக்கிறேன். நியூயார்க் சென்று வந்தவர்கள் என்னோடு ஒத்துப் போவார்கள் என்று நம்புகின்றேன். இதுவரை நியூயார்க்கைக் காணாதவர்களுக்கு இது ஒரு தூண்டுகோளாய் அமையலாம்.

இது என் நான்காவது கவிதை நூலான பச்சைமிளகாய் இளவரசியில் வெளியான கவிதை.  அக்கவிதை நூலுக்கு நட்புரை வழங்கிய கவிநண்பர் சேவியர் இப்படி எழுதிப் பாராட்டினார். ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனிடமிருந்து பாராட்டுப் பெறும்போது அடையும் இன்பம் மேகங்களுக்கு வானத்திற்கும் இடையில் கண்களை மூடி சிறகுகள் இல்லாமல் பறந்து உலவக்கூடியது. இதோ கவிஞர் சேவியரின் நட்புரையிலிருந்து ஒரு பகுதி:

நண்பர் புகாரியின் கவிதைகளை நான் நேசிப்பதற்கு முக்கியமான காரணம், கண்டு, கேட்டு, உண்டு , உயிர்த்து , உற்றறியும் ஐம் புலன்களுக்குள்ளும் அற்புதமாய்க் கிளர்ந்து வரும் அவரின் கவிதைகளை அதனதன் கனத்துடனும், கலைந்து விடாத கவனத்துடனும் கவிதைக் களத்தில் மிக சாமர்த்தியமாக அவர் எடுத்துக் கொடுக்கும் நேர்த்திதான்.

சமுதாயத்தில் நிகழும் ஏதேனும் ஒன்றைப்பற்றிய அதீத பாதிப்பு அவருடைய கவிதைகள் பலவற்றில் முகமூடி இல்லாமல் முன்நிறுத்தப் படுகிறது. தான் எழுதிய கவிதை சரியானதே என்று வாதிடுவதற்குரிய அத்தனை தளங்களையும் யோசித்துப் பார்த்துக் கவிதை எழுதும் அவருடைய ஈடுபாடு என்னைப் பல வேளைகளில் சிலிர்க்க வைத்ததுண்டு.


நீர்க்குடங்கள் கொட்டும்
நயாகராவின் கரைகளிலிருந்து
கட்டிடங்கள் கொட்டிக்கிடக்கும்
நியூயார்க் சென்றுவந்தேன்

உலகம் சுழல்வது ஒருபுறம் இருக்க
நியூயார்க் மட்டும்
தனியே சுற்றுகிறதோ
என்ற ஐயம் வந்தது

கடுகாய்த் தொலைந்துபோய்
கற்சிலையாய் மீண்டுவந்தேன்

o

திரும்பும் திசையெல்லாம்
திமிர்பிடித்தக் கட்டிடங்கள்
வானத்தை ஏளனம் செய்ய
மேகத்தை மறிக்க
மின்னலைத் தடுக்க
இடிகளைப் பிடிக்க
அடடா... நின்று நோக்க
பிரமிப்பாய்த்தான் இருக்கிறது

கட்டிடங்களல்ல அவை
எழுந்து நிற்கும் வீதிகள்

உலகின் அதி உயர
கட்டிடம் எழுப்பும்
நீயா நானா போட்டியில்
பில்லியன்களை
சிரபுஞ்சி மழையாய்க்
கொட்டிக்கொட்டி
ரொட்டிக்கு அலையும்
பட்டினிகள்
உலகெங்கிலும் செத்துமடிய
வானுடைக்கும் கோபுரங்களை
எழுப்பிவிட்டுக்
காலியாய் வைத்திருக்கும்
தர்ம தண்டம் உலக மகா நட்டம்

o

கோடையின் கொடையாய்க்
குவிந்த மக்கள் தம் முகங்களில்
மத்தாப்பு வெளிச்சங்களோடு
அலைவதைக் காண
முடிந்துபோகாத திருவிழா
முகத்தைக் காட்டுகிறது

o

கூட்டக் கூட்டக் குமியும் குப்பை
கொட்டக் கொட்ட அள்ளும் சேவை
நியூயார்க் அதிசயங்களில் ஒன்று

o

கண்களைப்
பிடித்துத் தள்ளிக்கொண்டு
இரவில் ஒளிப் புயல் வீசுகிறது

கட்டிடங்கள் அத்தனையும்
நட்சத்திரங்களைக்
குவித்துவைத்தக் குவியல்கள் ஆக
வானத்தைச் சுருக்கிக் காட்டும்
கண்ணாடியானது பூமி

o

உலகின் மிகச்சிறந்த ரொட்டி
இங்குதான் கிடைக்கும்
என்ற கடையோர வாசகத்தால்
கிச்சுக்கிச்சு மூட்டப்பட்டு
வெடித்துச் சிரித்தேன்

ஏய்ப்பும் திருட்டும்
நான்தான் என்ற ஜம்பமும்
இங்கே சுவாசங்களல்லவா

o

எதைத் தொட்டாலும்
எதனுள் நுழைந்தாலும்
பேய்க்காற்றில் வாழையாய்ப்
பெரிய டாலர்கள் கிழிய...

வீதியில் அலைந்தவர்களை
ஊடுறுவிப் பார்த்தால்
முகங்கள் அல்ல
டாலர்களே தெரிகின்றன

o

இரு தினங்கள்
சுற்றித்திரிந்ததும்
இனி என்ன செய்ய்வதென்ற
கேள்வி வாளெடுத்தது

ஆம்
இம்மாதிரி வியப்பின் ஆயுள்
இரு தினங்கள்தானே

o

நடப்பதறியா நடையும்
ஓடுவதறியா ஓட்டமும்
சுறுசுறுப்பு நியூயார்க்கின்
சுகங்கள்

முகம் பார்க்கவும் அவகாசமின்றி
இப்படி ஓடும் மக்கள்
எப்படித்தான் வாழ்க்கையைப்
பார்ப்பார்களோ
.

மஞ்சள்நிற வாடகை வாகனமா
வெள்ளைநிறக் காவலர் வாகனமா
எது அதிகம் என்று
முடிவுசெய்ய முடியவில்லை சாமி

o

உலகின் தலைநகரம் என்றார்கள்
உலகின் மிகப் பெரிய
வணிக அங்காடி என்றார்கள்
வியப்பாகத்தான் இருந்தது

உலகின்
அமைதிகாக்கும் கருணைக் கோட்டம்
இங்குதானா என்று கேட்டுவிட்டால்
வியப்பு அவர்கள் முகத்தில் சூழுமோ
அல்லது.... வீராப்பாய் ஓர்
அமெரிக்கப் பொய்வந்து வீழுமோ!

* (ஆகஸ்ட் 2004)

No comments: