நீ
என்னைப்
புரிந்துகொள்ளும்
நாள் ஒன்று
நிச்சயமாய் வரும்
உறுதியாய் வரும்
சத்தியமாய் வரும்
என்று
மிகமிகத் திடமாய் நம்புகின்றேன்
நான்

ஆனால்
அந்த நாளை நினைத்தால்தான்
பாட்டி
பேய்க்கதைச் சொல்லிமுடித்த
நடு இரவில்
நூறு ரத்தக் காட்டேறிகளுக்கு
நடுவில் நிற்கும் சிறுவனைப்போல
என்
உயிரின் உள்ளும் புறமும்
நடுக்கமோ நடுக்கமாய்
நடுங்குகின்றன

இந்த
உலக அழிவைச்
சந்திக்கும் தைரியம்
எனக்குத்
துளியும் இல்லையே

ஆனாலும்
கடும் போராட்டத்திற்குப் பின்
நான்
அந்த நாளைச் சந்திக்க
மெல்ல மெல்லத்
தயாராகிவிட்டேன்

நீ
என்னைப்
புரிந்துகொள்ளும்
அந்த அரிய நிகழ்வு
ஒருநாள்
நிகழத்தானே வேண்டும்

இறைவா
அருள்வாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: