என்னை ஏன் இப்படி
உடைந்தழிய வைக்கிறாய்?

காயங்களை
ஆற்றும் மயிலிறகு
காயம்பட்டே செத்துப்போவதா?

என் செவிக்குள்
உன் உதட்டுச் சிறகுகளை அசை
உன் துயரங்களிலிருந்து
பறந்து பறந்து வெளியேறுவாய்

அரவணைக்க வரும் உயிரை
நிராகரித்தல் தற்கொலை

உன் மன அமைதியாய்
என் பெயர் மாறினால்
என் உயிர் இருப்பின்
பொருள் விளங்கும் எனக்கு

கட்டுக்கடங்காத கண்ணீரை
உன் கட்டளைக்குள்
கட்டிவைத்திருக்கிறாயே

உனக்கே
நீ ஏன்
எதிரியானாய்

ஒரு கனவு விரிகிறது
என் மடியில் நீ
நான் பாடுகிறேன்

கங்கை
நீர் வீழ்ச்சியாய் விழுவதைப்போல்
என் கண்கள்

வார்த்தைகள் அழுகைக்குள்
அமிழ்ந்து அமிழ்ந்து
சிதைந்து போகாத அர்த்தங்களுடன்
வெளிவருகின்றன

அது எனக்கு
உயிர் வாழ்க்கை

உன்னால்மட்டுமே
அதைத் தரமுடியும்

வேறு எவர் தந்தாலும்
ஏற்றுக்கொள்ளும் உள்ளம்
இல்லை என்னிடம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: