சொர்க்கம்

உதட்டில்
மௌனம்
குடியிருக்கும்போது
உள்ளத்தில்
சொர்க்கம்
கட்டப்பட்டுக்
கொண்டிருக்கிறது

புடலங்காய்ப் பந்தல்

காலில் கல்கட்டி
சுமையோடு தொங்கும்
புடலங்காய்கள்

நிமிர்த்தி
வளர்த்தால்தான்
நல்ல விலைக்குப்
போகும் சந்தையில்

இயல்போடு
வளர
புடலங்காய்களுக்கு
வழியே இல்லை

சுமைகள்
நீங்கும்போதும்
சாம்பாருக்குள்
செத்துவிடுகின்றன

மனிதர்கள்தாம்
இப்போது அதிகம்
தொங்குகிறார்கள்
புடலங்காய்ப் பந்தல்களில்

32 யாழ்நிலக் கவிதைகள்


இன வெறுப்பின்
நச்சு விரல்கள் கிளறக் கிளற
நெடிது பொங்கும்
எரிமலைக் குழம்புகளின்
ஊற்றுப் பதிவுகள்

சூழலின் முதலைப் பற்களால்
கடிபடும் மனக்குதிரைகள்
வெறிகொண்டமட்டும்
அழுந்தி அழுந்தி பதிக்கும்
ரணத் தடங்களின்
ரத்த மலர்கள்

37

தமிழச்சி

ஆயிற்று
இருபத்தியோராம் நூற்றாண்டு

இதுவரை இல்லாத் துணிச்சலுடன்
எழுந்து நிமிர்ந்து வீறுநடக்கின்றாள்
தமிழச்சி

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
பழைய ஒட்டடைகள் ஏதேனும்
கவ்விப் பிடித்துக்
கவிழ்த்துவிடாமலா போய்விடும்
என்ற அவலாசையில்
வழமை ஆயுதச்
சொல்வண்டுக் கூட்டங்கள்
சூழ்ந்து சுற்றி
நாரகாசமாய் ரீங்கரிக்கின்றன

ஆனாலும்
ஒற்றைச் சுண்டு நகத்தால்
கிள்ளியெறிந்து நடக்கும்
தமிழச்சியின் திண்மை நடை
அழகாய்க் காட்சிப்படுத்துகிறது
வெகுதூரத்திலில்லை
என்றெண்ணியிருந்த அந்த நாள்
இன்றே புலர்ந்த பெருமிதத்தை

அன்புடன் புகாரி

38 பனிக்கரடி முழுக்கு


அஞ்சு...

டொராண்டோ, கனடா
ஜனவரி 1, 2008 செய்வாய்
உயிரை உறையவைக்கும்
கடுங்குளிர்


நாலு....

ஒண்டாரியோ ஏரி
பனிக்கட்டிகள் மிதக்கும்
சிலீர் நீர்


மூணு....

ஆவிபறக்கும் சுடுநீர் மழையில்
குளித்துவிட்டு வெளிவந்தாலே
போர்வை தேடும் நாட்கள்


ரெண்டு...

கையில் சுடச்சுட சூப்பும்
உடலைச் சுற்றிய
துவாலை ஆடையுமாய்
ஏரியின் கரைகளில்
பலநூறு நீச்சல் வீரர்கள்


ஒண்ணு...

பத்துவயது முதல்
பாதிகிழம்வரை
ஆணும் பெண்ணுமாய்
இதோ இதோ என்று
துடித்துக்கொண்டு


ஓடு....குதி...

துவாலையைத்
தூர எறிகிறார்கள்
சரசரவென்று
ஏரிக்குள் விழுகிறார்கள்

உயிர்
துடியாய்த் துடிக்கிறது

வீல் வீல்
என்ற அலறல்கள்

முங்கு முங்கு
என்ற கூச்சல்கள்

சிலர் முங்க
சிலர் பின்வாங்க
அம்மாடியோவ்...

கரையில்
பல்லாயிரம் டாலர்கள்
வசூல்

உலகில்
சுகாதார நீருக்கு ஏங்கும்
ஏழை நாடுகளுக்கு
இந்த நன்கொடை...

நீர் நன்கொடை

இவ்வாண்டின் பெரும்பகுதி
சூடானின்
நீர்ச் சுகாதாரத்திற்கு...

வாங்க வாங்க கனடாவுக்கு
நாமும் முங்குவோம்...
இது பனிக்கரடி முழுக்கு

http://www.thestar.com/News/article/290378 http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20080101/Polar_dip_080101/20080101?hub=TorontoHome

ஒவ்வொன்றாய் ஊதியணைத்துக்கொண்டு


ஏணிப் பொழுதுகளில்
இதயம் ஏற்றிவைத்த
பல்லாயிரம் கோடி தீபங்களை
ஒவ்வொன்றாய்
ஊதி அணைத்துக்கொண்டு
இருளின்
கறுத்த உதடுகள்

ஆளுமை அதிகரிப்பில்
இருளுக்கு இணை இருளே

ஒளியை
ஊதி அணைத்துப்
பூரித்துப் போவதில்
எப்போதும் அது ஓர்
பிறந்தநாள் பிள்ளை

இருள் நஞ்சில்
இதயம்
எத்தனைதான்
புதைந்துபோனாலும்
விழிகளென்னவோ
வெளியேறத் துடிக்கும்
வெறியோடுதான்

அணைய மறுத்து
அல்லாடும்
அந்த ஒற்றைத் தீபமே
போதும் உயிருக்கு

மீண்டும்
அத்தனை தீபங்களையும்
ஏற்றிவிடலாம் என்ற
விடாப்பிடி நம்பிக்கையோடு
சாகாமல் கிடக்கும்
தன் உயிர்த் தேடல்களை
உணர்வுகளில் பூட்டிக்கொண்டு

கயிறெடுத்தான் உயிரெடுக்க


உயிரின்
முடிச்சவிழ்க்க
கயிறில்
முடிச்சிட்டான்

சாவைத் தேர்வு செய்ய
வாழ்வே விரட்டுகிறது

தேர்வுதானே
வாழ்க்கை

சாவென்பதும்
வாழ்வென்ற அறிதலோடுதான்
கயிறெடுத்தான் உயிரெடுக்க

இவனைத் தடுக்கும்
மார்க்கமுண்டா உங்களிடம்

பாவச் செயல்
கோழையின் வழி
அவசர முடிவு
சட்டப்படி குற்றம்
நம்பிக்கை வேண்டும்
என்றெல்லாம்
அளந்துகொண்டே போகாதீர்கள்

இதோ கரமென்று
உயிர் காக்காத பூமியில்
இதோ வாழ்க்கை என்று
கயிறு சொல்வதில் தவறில்லை

இருப்பினும்
கயிறெடுத்தவனிடம் கேட்க
என்னிடம் இருக்கிறது
ஒரே ஒரு கேள்வி

நிலம் மாற்றி நட்டாயா
உன் நாற்றுகளை?

பச்சை நிறக் கண்கள்


தம் நிழல்களை
இமைகளாய்க் கொண்ட
பச்சை நிறக் கண்கள்
மனிதநல மேன்மைதனைப்
பொழுதுக்கும்
பார்வையிட்டுக்கொண்டே
காடுகளாய்

தம் சுயநலமே
தாகமாய்க் கொண்ட
குருதிக் கரங்கள்
பச்சை விழி வேரறுக்க
பொழுதுக்கும்
சுற்றியலைந்துகொண்டே
மனிதர்களாய்

21 உயிர்ப்பு


முட்டைக்குள்
கண்மூடிக்கிடக்கும்
குஞ்சு

விதைக்குள்
இலையொட்டிவாழும்
தளிர்

நூலுக்குள்
சிறகு மடித்துறங்கும்
பம்பரம்

மொட்டுக்குள்
இதழ்பூட்டித் துயிலும்
மலர்

காகிதத்தில் எழுத்துப்பெறாமல்
மூச்சுவிடும்
கவிதை

கிழக்கில் வெளிச்சம்மடித்து
மல்லாந்திருக்கும்
சூரியன்

முழுமையற்ற இவையாவும்
வாழ்வெளியில்
அடுத்த கட்டம் தொடாமல்
அடையாளமற்றவைதான்

என்றாலும்...

ஆயுள் முழுவதும்
நினைத்து நினைத்து மீண்டும் புக
இதயத்தைத் துடிக்க வைக்கும்
அற்புத நிலைகள்தாம்
ஐயமே இல்லை

ஆயினும்
முயற்சியும்
முளைவிடும் வலியும்
அதில்வரும் வெற்றியும்தான்
உயிர்ப்பு உயிர்ப்பு உயிர்ப்பு

22 உயிரோடிருக்கலாம்



காதலி மடியில்
அரசியல் வனத்தில்
பக்திக் கடலில்
இலக்கிய வெளியில்
என்று
ஏதோ ஒன்றில்
எல்லாம் அழிய
செத்துப்போ

நாற்பதுக்குப்
பின்னும்
நீ
உயிரோடிருக்கலாம்

39 ஐநாவுக்கும் நைனா


ஐநா அல்ல
ஐயாயிரம் நா சுழன்றாலும்
வல்லரசின்
செவிகளுக்குள்
அழுகுரல்கள்
செல்லவே செல்லாது

ஐநான்னா
அமெரிக்காவுக்கு
அரையணாதான்

அமெரிக்காதான்
ஐநாவுக்கும்
நைனா

43 குடியரசு


இந்தியப் பொய்கையில்
அரசியல் எருமைகள்
நீராடுகின்றன
உரசிக்கொள்கின்றன
முட்டிக்கொள்கின்றன
வீழ்கின்றன எழுகின்றன
இடம்மாறுகின்றன
பாவம்
மக்கள் மீன்களோ
சகதியைச் சுவாசிக்கின்றன

40 என்னோடு பேசாதே


என்னோடு கொஞ்சம்
பேசாமலிருக்க மாட்டாயா?

நான் இந்தத்
தத்துவஞானியின்
உரையைக் கேட்க வேண்டும்
தயவுசெய்து தொல்லை செய்யாதே
அப்படி ஓர் ஓரமாய் ஒதுங்கி நில்

நீ சொல்வதைத்தான்
நான் எப்போதும்
கேட்டுக்கொண்டே இருக்கிறேனே

முக்கியத்தர்களோடு நான்
மூச்சுமுட்ட உரையாடும்போதும்
நரைமுடியைப்போல் நீ
நடுவில் வந்து நிற்கவேண்டுமா

ஏன் அவ்வப்போது
என்னை வேரோடு திருடிக்கொண்டு
நான் சபையில் நிற்கையிலும்
அசிங்கப்படுத்திவிடுகிறாய்

நீ யார்
என் மனதின் நிழலா
அல்லது
மனது ஒளித்துவைத்திருக்கும்
மந்திர மனதா

அவசரத் தேவையில்
நான் அல்லாடும்போது
ஒருநாளும் நீ உடனடி முடிவோடு
என்னிடம் வருவதில்லை

ஆனால்
நான் செய்த தவறை
சகல சாட்சியங்களோடும்
சொல்லிச் சொல்லி என் தலையில்
கொள்ளிவைக்க மட்டும்
முழுச் சக்தியோடு வந்து
நெற்றிப் பொட்டு மேடையில்
சம்மணமிட்டு உட்கார்ந்துவிடுகிறாய்

ஏன் என்னோடு பல நேரங்களில்
பாரபட்சமே இல்லாமல்
முரண்படுகிறாய்

நடந்து முடிந்ததற்கு
நமக்குள் ஒரு வழக்கு தேவையா

என்னைக் குற்றவாளியாக்கி
கூனிக்குறுகச் செய்து
நீ சாதிப்பதுதான் என்ன?

இன்னொரு குரலால்
மறுபரிசீலனைச்
சிந்தனை தொடுக்கும்
நீ என் பலமா

தொட்டதை முடிக்கவிடாமல்
முடித்ததில் திருப்தி தராமல்
அலைக்கழிக்கும் நீ என்
பலகீனமா

என் வெற்றியும் நீ
தோல்வியும் நீதானா?

உள்ளுக்குள் உட்கார்ந்து
நிரந்தர ஆட்சி செய்யும்
என் அதிசயமே

உன்னால்தான்
நான் தனிமைப் பட்டாலும்
அந்தத் தனிமையைச் சுமக்கத் தெம்பற்று
செத்துச் சுடுகாடாகிப்போய்விடாமல்
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

புலம்பல் ஓர் புண்ணிய நதி


தானே
தனக்காக இசைக்கும்
கண்ணீர்த் தாலாட்டு

மாண்ட மனத்தை
மடியில் கிடத்திக்கொண்டு
மிச்ச மனம்
உதட்டு வாத்தியத்தில்
உயிரைப் பிழிந்து வைக்கும்
ஒப்பாரி

ஆயினும்
புலம்பல் ஓர்
புண்ணிய நதி

அதில் நீராடும்போது
பரிதவித்துப் படபடக்கும்
உயிர்ச் சருகையும்
தீண்ட வழியற்று
கரைகளில்தான்
காத்துக்கிடக்கிறது
மரணத் தீப்பந்தம்

முரண்பட்டுக்கொண்டே


பொன்னாடை போத்தி
கட்டித் தழுவுகின்றனர்
பொழுதுக்கும்

அவர்களோடு
முரண்பட்டுக்கொண்டே
இருக்கும்
எனக்கு

உப்புச் சிறகுகள்
படபடக்க
சங்கடத்தோடு
என் விழிகள்
உள்ளுக்குள்
முகம்பொத்தி
அடித்துக்கொள்கின்றன

என்றாலும்
முரண்படும் நிலைதானே
வெளிச்சவேர் பரப்பி
கிளைவிட்டுத் துளிர்க்கிறது
கவிதையாய்
புரட்சியாய்
வளர்ச்சியாய்...

மெய்ப்பொருள்


வாழ்க்கைக் கவிதைக்குப்
பொருள் விளங்காப்
பொழுதுகளில்
படித்துப்படித்துப்
பெருமகிழ்வு

பொருள் புரிந்த
பிற்பொழுதுகளில்
சுக்கல் சுக்கலாய்க்
கிழித்தெறிய
விழைவு

வாழ்வுக் குமிழைக்
கிழித்ததும்
விளைந்த பொருள்
கண்டு
அமைதியின் கர்ப்பத்தில்
தரிப்பு

வளைகுடா இருட்டில்...


இருட்டில்
உன் நிழல்தேடிக்
காணாமல் தவிக்கிறாய்

ஒவ்வொரு முறையும்
விழிகளில் அடர்த்தியாய்ப்
பூக்கும் கனவுகள்
வந்து சூழும் வரண்ட
பொழுதுகளால்
கருகிக் கருகி உதிர
மிச்சத்தையேனும்
காப்பாற்ற வேண்டுமே
என்ற அச்சத்தில்
அவசர அவசரமாய்
ஓடி வந்தாய்

அன்பும் பாசமும் கூட
விலைப்பட்டியலில்
இடம்பெற்றபின்
காசுதானே இந்தப் பிரபஞ்சம்
என்று உணர்ந்த பின்
அவசர அவசரமாய்
ஓடிவந்தாய்

இன்றோ
இந்த வளைகுடா இருட்டில்
எது இருந்தும்
எது இல்லாவிட்டாலும்
காலைச் சுற்றிக்கிடந்த
உன் நிழல் தேடிக்
காணாமல் தவிக்கிறாய்

33 யாரோ ஒருவன்


வானம் உடைக்கும் உளியோடு
இந்த வையம் பிளக்கும் வாளோடு
யாரோ ஒருவன் வருகின்றான்
அவன் எழுதும்போதே வாழ்கின்றான்

வாழ்த்த வயதில்லை


வாழ்த்துவதற்கு
வயது வேண்டாம்
நல்ல இதயம்தான்
வேண்டும்

பிஞ்சு மழலை
ஒரு முத்தமிட்டு
தன்
தாத்தாவை
வாழ்த்துகிறது

நேற்றே
முளைத்த புல்
தன் இதழ் விரித்து
மழையை
உயிராக வாழ்த்துகிறது

வாழிய நற்றமிழ் என்று
மழலைகள் பள்ளியில்
தமிழன்னையையே
வாழ்த்துகின்றன

வாழ்த்துவோம்
அதுதான்
நம் மனித மன
உச்சியில்
மகுடம் சூட்டி
நம்மை
மனிதராக்கி
உயர்த்துகிறது
எங்கள் ஊர்ப் பொங்கல்

ஞாபக இழைகளைச்
சிக்கெடுத்து
எங்களூர்ப் பொங்கலை
ஓர் நினைவுச் சடையாய்ப்
பின்னிப் பார்க்கிறேன்

அன்பைப் பெருக்கி கண்களில் சுருக்கி
ஆழ உயிர்க் குரலில்
அம்மா வென்ற கதறலோடு
சாம்பல் நிறப் பசுமாடு
திண்ணை மெழுகிப்போட
சாணம் இட்டு நிற்கும்
சுவரோர நிழலில்

எத்தனையோ முறை
கீறிக்கீறிக் காயப்படுத்தினாலும்
கொத்திக்கொத்திப் புண்ணாக்கினாலும்
அத்தனை முறையும்
சிரிக்கும் அன்புத் தாயாய்
அமுதள்ளி ஊட்டும் நிலம்

சோற்றுத் தட்டின்
ஓரங்களாய் ஈரம் மிளிர
நனைந்து கிடக்கும் வரப்புகளில்
நடப்பேன் நான் நாளெல்லாம்
கால்கள் நொந்ததில்லை

வேண்டும் என்று எண்ணி
வானம் பார்க்கும் போதெல்லாம்
என் வேண்டுகோளுக்காகவே
காத்திருக்கும் மழைத்தேவதை
நெஞ்சு நெகிழ வீழ்வாள்
மண்வாச மோகம் எழும்ப

வேட்டுச் சத்தம் கேட்டதோடு
வீரிட்டு ஓடும்
மாட்டுவண்டிக் கொண்டாட்டத்தை
விழிகளில் அச்சம் கிடுகிடுக்க
பதுங்கி நின்று வேடிக்கை பார்த்த
அந்தப் பழைய நாட்கள்

முகத்தை
வெட்டிவெட்டி நடக்கும்
குங்குமப் பொட்டுக் குமரிகள்
வட்டவட்டமாய் வந்து கும்மியிட்டு
'குடுடா காசு' என்று மதுச்சிரிப்போடு
மல்லுக்கு நிற்கும்போது
பருவ நெருப்புச் சிறகுகள் விரித்த
கல்வெட்டுப் பொற்பொழுதுகள்

இன்றெல்லாம்
நகர மறுக்கும் நகர வாழ்க்கை

தினந்தோறும்
நீள அகளத்தில் அறிவைக் கிழிப்பதும்
தையல் போடவும் வழியற்றுப்
பிதுங்குவதுமாய் நாட்கள்

பொங்குது பொங்குது பொங்கல்
என் கண்களில் பொங்குது
பொங்கல்