உயிரைச் சுமக்கும் ஒரே உயிர்

பெண்ணே உலகின் ஆதாரம்
அவளற்ற ஆண் வெறும்
தளமற்ற கட்டிடம்

உள்ளத் தவிப்புக்கு மருந்தும்
உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்
பெண்ணே இன்றி
பெறுவதுதான் எப்படி

கலையா கணினியா
இலக்கியமா இராணுவமா
நாட்டுத் தலைமையா
விண்வெளிப் புரட்சியா
எங்கே இல்லை அவள்

சொல்லுங்களேன்
உயிரைச் சுமக்கும்
ஒரே உயிர்
உலகில் பெண்தானே

துவண்ட மனதுக்கு
மடிதந்து தலைகோத
ஒரு பெண்ணற்றுப் போயின்
மனித இனம் மொத்தமும்
சுடுகாட்டுப் பிணங்கள்தானே

எல்லாச் சுகங்களும்
எங்கும் கிடந்தாலும்
ஒரு பெண்ணில்லா பூமியில்
சிறு பொழுதேனும் நகருமா

அந்தப் பூமியும்
ஓர் அழகுப் பெண்ணல்லவா

நிலவா மலரா
கடலா காற்றா
காண்பதெல்லாம் 
பெண்ணல்லவா

சுகங்களின் இருப்பிடம் அவள்
சொர்க்கத்தின் பொருளும்
அவளேதான்

ஓராயிரம் ஓட்டைகளும்
உருப்படாத துடுப்புமாய்
நடுக்கடலில் விடப்பட்ட
ஆசை ஓடங்கள்தானே
மனித மனங்கள்

ஒரு பெண்ணின் துணையின்றி
வாழ்வெனும் கரைசேர
வாய்க்குமோ கனவிலும்

அவளின் அன்பின்றி
ஆயுள் ரேகைக்கு
ஆயுள்தான் ஏது

அழப்பிறவா
மனிதருண்டோ

ஓரெட்டில் அம்மா
ஈரெட்டில் தங்கை
மூவெட்டில் காதலி
நாலெட்டில் தாரம்
ஐயெட்டில் மகளென்று
சாவெட்டு வரும்வரை
நம் கண்ணீர் நிறுத்தி
அமைதியின் மடிகிடத்த
தம் கண்ணீர் பொழியும்
கருணை மேகங்களல்லவா
பெண்கள்

அறிவுரைக்கோ
ஆயிரம் நாவுகளுண்டு
ஆறுதலுக்கு
அவளன்றி வேறு வழியுண்டோ

பெண்கள்
உயிர்களைப் பிரசவிக்கும்போது
ஆண்கள்
அணுகுண்டுகளைத்தானே
பிரசவிக்கிறார்கள்

பெண்களே விதைகள்
இந்தப் பிரபஞ்சத்தின்
வேர்கள்

- அன்புடன் புகாரி

9 comments:

சாந்தி said...

:) பெருமைபடச்செய்தீர்கள்
அருமை.
பெண்களை பற்றி எழுதி புகழ் சேர்த்தீர்கள்.. ம். ஆண்கள் பற்றி எழுதும் பொறுப்பை தந்தீர்களே...?:)

பூங்குழலி said...

ஓரெட்டில் அம்மா
ஈரெட்டில் தங்கை
மூவெட்டில் காதலி
நாலெட்டில் தாரம்
ஐயெட்டில் மகளென்று
சாவெட்டு வரும்வரை

நம் கண்ணீர் நிறுத்தி
அமைதியின் மடிகிடத்த
தம் கண்ணீர் பொழியும்
கருணை மேகங்களல்லவா
பெண்கள்


தாரமாய் ,மகளாய் ஆணோடு வாழும் பெண்ணின் பெருமையை அழகாய் சொன்னீர்கள் புகாரி

சீனா said...

ஆணின்றி பெண்ணில்லை - பெண்ணின்றி ஆணில்லை
இருவரும் இணைந்தே இயங்குவது தான் இயல்பு
தாய்மை என்பது ஆண் பெண்ணுக்கு அளிக்கும் வரம்
தாய் என்பவள் பெற்ற மக்களுக்கு கடவுள்
உயிரைச் சுமக்கும் ஒரே உயிர் பெண்தான்
ஆனால் அப்பெண்ணினை சுமக்கும் காலத்தில் சுமப்பவனோ ஆண் தான்
எப்படியாயினும் இன்றைய உலகில் ஆணினைச் சார்ந்தே பெண் நிற்கிறாள்

கவிதை நன்று - நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

நட்புடன் ..... சீனா

தமிழ் said...

அருமை

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ந. நாகராஜன் said...

பெண்ணின் பெருமை சொல்லும் அருங்கவிக்கு நன்றி புகாரி.

பேணுந் தயவாம் பெண்ணும்
ஆளும் அறிவாம் ஆணும்
ஆதி மூல அன்பில் ஒன்றி
சோதி ரூபமாய் மண்ணில் எழட்டும்!

அன்புடன்
நான் நாகரா(ந. நாகராஜன்)

குருமூர்த்தி தேவேந்தன் said...

பெண்ணே உலகின் ஆதாரம்
அவளற்ற ஆண் வெறும்
தளமற்ற கட்டிடம்

ஆதாரமாயிருக்கும் ஆயிழையீரவர்தமது
பாதாரவிந்தத்தைப் பத்தியுடன் வணங்குகிறேன்
சேதாரமாய்ப் பேசும் செருக்குள்ளேனல்லேன்
தீதான பழங்கருத்தைத் தீண்டிடவும் விரும்புகிலேன்

உளமற்ற பெண்டிருமேயுள்ளார்கள் இப்புவியில்
வளமுற்று வாழ்கின்றார் வாழ்த்திடுவோம் அவரையுமே
களமுற்ற வெங்கரியைக் கண்ணாலே மாய்ப்பவரால்
தளமற்ற ஆண்களுக்கோர் தக்கபதில் எவரளிப்பார்?


உள்ளத் தவிப்புக்கு மருந்தும்
உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்
பெண்ணே இன்றி
பெறுவதுதான் எப்படி

பொருந்தாக் காதலென்னும் போர்வாளைக் கண்ணுறுத்தி
வருந்தாமனத்துடனே வழிதனிலே விட்டுவிட்டு
இருந்தாலென் அன்றி இறந்தாலென்னவென்போர்
மருந்தாம் மானிடர்க்கு மனம்பொறுத்தலெங்கனமோ?

நடிக்கும் நயனவிழி நாவில் பொய்யின்மொழி
வெடிக்கும் மலைக்குழம்பார் விரைந்திழுப்பார் தமதுவழி
கொடிக்கொம்பன்று கொத்தும் கோரப்புந்நாகமன்னார்
துடிக்கும் உயிர்க்கயிற்றைத் துண்டிப்பாரேயன்றோ?


கலையா கணினியா
இலக்கியமா இராணுவமா
நாட்டுத் தலைமையா
விண்வெளிப் புரட்சியா
எங்கே இல்லை அவள்

எங்கும் நிறைந்திருக்கும் இறையும் ஈசலும்தான்
அங்கந்தனில் உதிரம் அமிலம் கலந்து விட்டால்
பங்கம்தான் பயக்கும் பாவையரும் அப்படித்தான்
இங்கும் நிறைந்திருந்தே இன்னல் விளைப்பாரே

சொல்லுங்களேன்
உயிரைச் சுமக்கும்
ஒரே உயிர்
உலகில் பெண்தானே

மரமுஞ்செடிகொடியும் மற்றிங்குபலவுயிரும்
வரமாய் வளமளிக்கும் வயலின்கதிரினமும்
அரவுதொடங்கிபெரும் ஆனைவரையினிலும்
தரவே தாங்குடுமே தனக்குள் ஓருயிரை!


துவண்ட மனதுக்கு
மடிதந்து தலைகோத
ஒரு பெண்ணற்றுப் போயின்
மனித இனம் மொத்தமும்
சுடுகாட்டுப் பிணங்கள்தானே

நாட்டு நடைபிணங்கள் நங்கையரால் மிகுதியுற்று
வாட்டம் மிகுந்துநிதம் வாதையுற்றிருக்கையிலே
காட்டில் எரிவதன் முன் காரிகையால் எரிந்தவர்க்கு
கோட்டை கொத்தளமும் கொள்ளியெரி சுடுகாடே!
குருமூர்த்தி

Unknown said...

குருமூர்த்தி தேவேந்தன்,


பெண்ணே உலகின் ஆதாரம்

அவளற்ற ஆண் வெறும்
தளமற்ற கட்டிடம்

ஆதாரமாயிருக்கும் ஆயிழையீரவர்தமது
பாதாரவிந்தத்தைப் பத்தியுடன் வணங்குகிறேன்
சேதாரமாய்ப் பேசும் செருக்குள்ளேனல்லேன்
தீதான பழங்கருத்தைத் தீண்டிடவும் விரும்புகிலேன்

உளமற்ற பெண்டிருமேயுள்ளார்கள் இப்புவியில்
வளமுற்று வாழ்கின்றார் வாழ்த்திடுவோம் அவரையுமே
களமுற்ற வெங்கரியைக் கண்ணாலே மாய்ப்பவரால்
தளமற்ற ஆண்களுக்கோர் தக்கபதில் எவரளிப்பார்?

பெண்கள் எல்லோரும் 100 விகிதம் சரியானவர்கள் அல்ல. ஆண்களிலும் அப்படித்தான். ஆயினும் ஆணைவிட பெண்ணின் சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது நற்குணங்களில்.

ஆண் பெண் இருவரும் சேராமல் வாழ்க்கை இல்லை. இருவருக்கும் இடையில் அன்பு பாசம் கருணை நட்பு சார்பு என்று எல்லாம் வேண்டும். இல்லாமல் போனால் வாழ்க்கை நரகம்தான்




உள்ளத் தவிப்புக்கு மருந்தும்
உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்
பெண்ணே இன்றி
பெறுவதுதான் எப்படி

பொருந்தாக் காதலென்னும் போர்வாளைக் கண்ணுறுத்தி
வருந்தாமனத்துடனே வழிதனிலே விட்டுவிட்டு
இருந்தாலென் அன்றி இறந்தாலென்னவென்போர்
மருந்தாம் மானிடர்க்கு மனம்பொறுத்தலெங்கனமோ?

நடிக்கும் நயனவிழி நாவில் பொய்யின்மொழி
வெடிக்கும் மலைக்குழம்பார் விரைந்திழுப்பார் தமதுவழி
கொடிக்கொம்பன்று கொத்தும் கோரப்புந்நாகமன்னார்
துடிக்கும் உயிர்க்கயிற்றைத் துண்டிப்பாரேயன்றோ?

கண்ணதாசன் சொல்வார்

பெண்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் பெண்களை வஞ்சி என்றார்கள்
மனம் தைக்கப்பட்டவர்கள் தையல் என்றார்கள்
இப்படியாய் சொல்லிக்கொண்டு போவார் (மறந்துவிட்டேன்)

சித்தர்களில் சிலர் பெண்களை மிகக் கேவலமாகத் திட்டித் தீர்ப்பார்கள்

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலே
பொல பொலனெ கலகலன புதல்வர்களைப் பெறுவீர்
காக்கவும் அறியீர் கைவிடவும் மாட்டீர்...

இப்படிச்செல்லும் பாடலைக் கேட்டிருக்கிறீர்கள்.

துன்பம் சில காலம். அது பெண்களாலும் வரலாம். நம்மால் நமக்கு வருவதையே பெண்களால்தான் வருகிறது என்று நம்பிக்கொண்டும் இருக்கலாம்.

விழிதிறப்பதொன்றே சரியான வழி



கலையா கணினியா
இலக்கியமா இராணுவமா
நாட்டுத் தலைமையா
விண்வெளிப் புரட்சியா
எங்கே இல்லை அவள்

எங்கும் நிறைந்திருக்கும் இறையும் ஈசலும்தான்
அங்கந்தனில் உதிரம் அமிலம் கலந்து விட்டால்
பங்கம்தான் பயக்கும் பாவையரும் அப்படித்தான்
இங்கும் நிறைந்திருந்தே இன்னல் விளைப்பாரே

:))))

உங்களை ஈன்ற பெண் உங்களுக்கு இழைத்த இன்னல் என்ன? இந்தப் பிறவி என்று புலம்பப் போகிறீர்களா?


சொல்லுங்களேன்
உயிரைச் சுமக்கும்
ஒரே உயிர்
உலகில் பெண்தானே

மரமுஞ்செடிகொடியும் மற்றிங்குபலவுயிரும்
வரமாய் வளமளிக்கும் வயலின்கதிரினமும்
அரவுதொடங்கிபெரும் ஆனைவரையினிலும்
தரவே தாங்குடுமே தனக்குள் ஓருயிரை!

ஆம் அவைகளையும் சேர்த்துத்தான் சொன்னேன். ஆண் பெண் தாவரம் விலங்குகளுக்கும் உண்டு.




துவண்ட மனதுக்கு
மடிதந்து தலைகோத
ஒரு பெண்ணற்றுப் போயின்
மனித இனம் மொத்தமும்
சுடுகாட்டுப் பிணங்கள்தானே

நாட்டு நடைபிணங்கள் நங்கையரால் மிகுதியுற்று
வாட்டம் மிகுந்துநிதம் வாதையுற்றிருக்கையிலே
காட்டில் எரிவதன் முன் காரிகையால் எரிந்தவர்க்கு
கோட்டை கொத்தளமும் கொள்ளியெரி சுடுகாடே!

ஆண்க்ளால் பிணங்களாய் குவியும் பெண்களின் எண்ணிக்கை அறிவீர்களா இந்த உலகில்?

ஒன்ற் புரிந்துகொண்டேன் நண்பரே, நீங்கள் பெண்களை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள். ஆனால் உங்கள் எதிர்ப்பார்ர்பில் ஏமாற்றம் வந்தால் திட்டித் தீர்க்க்கிறீர்கள். மீண்டும் ஒரு தேவதை கிடைத்துவிட்டால், இங்கே எழுத வரமாட்டீர்களோ என்ற ஐயமுண்டு எனக்கு :)))

நான் நாகரா(ந. நாகராஜன்) said...

> பெண்கள் எல்லோரும் 100 விகிதம் சரியானவர்கள் அல்ல. ஆண்களிலும் அப்படித்தான்.
> ஆயினும் ஆணைவிட பெண்ணின் சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது நற்குணங்களில்.
>
> ஆண் பெண் இருவரும் சேராமல் வாழ்க்கை இல்லை. இருவருக்கும் இடையில் அன்பு பாசம்
> கருணை நட்பு சார்பு என்று எல்லாம் வேண்டும். இல்லாமல் போனால் வாழ்க்கை
> நரகம்தான்


சமரசக் கண்ணோட்டம் வலியுறுத்தும் அருமையான கருத்துக்கள்


> துன்பம் சில காலம். அது பெண்களாலும் வரலாம். நம்மால் நமக்கு வருவதையே
> பெண்களால்தான் வருகிறது என்று நம்பிக்கொண்டும் இருக்கலாம்.
>
> விழிதிறப்பதொன்றே சரியான வழி


"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
என்ற பூங்குன்றன் நோக்கத்துக்கு
விழி திறக்க வைக்கும் வரிகள்

அருமையான கருத்துப் பகிர்வுக்கு நன்றி புகாரி

அன்புடன்
நான் நாகரா(ந. நாகராஜன்)