தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்

ஆழ்கடல் விழுந்து
உப்புநீர் விழுங்கி
மூச்சுமுட்டி

தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்

கை கொடுத்துக்
காப்பாற்ற
ஒற்றைத் தமிழனும்
இங்கில்லையாம்

தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்

கரையோரக் கூடத்தில்
தங்க இருக்கை ஒன்று
அவசர அவசரமாய்த்
தயாராகிறதாம்

தாயவளோ
தத்தளித்துத் தவிக்கிறாள்
நடுக்கடலில்

மஞ்சள் பூசிக்
குங்குமம் இட்டு
மாலைகள் சூடி
மலர்கள் தூவி
பறை மேளம் கொட்டி
மேற்கத்தியக் குத்தாட்டம்
ஆடிக் களிக்க

கரையோரக் கூடத்தில்
தங்க இருக்கை ஒன்று
அவசர அவசரமாய்த்
தயாராகிறதாம்

தாயவளோ
தத்தளித்துத் தவிக்கிறாள்
நடுக்கடலில்

கை கொடுத்துக்
காப்பாற்ற
ஒற்றைத் தமிழனும்
இங்கில்லையாம்

அன்புடன் புகாரி

No comments: