தமிழ் ஆங்கிலம் இந்தி தமிழ்நாடு இந்தியா

கடந்த வருடம் நான் டொராண்டோ ’பாங்க் ஆஃப் மான்றியலில்’ ஒன்றரை ஆண்டு ஒப்பந்தப் பணி செய்தேன். அங்கே எனக்கு ஒரு நண்பன் வாய்த்தான். அவன் ’கனடியன் டயரில்’என்னோடு வேலை செய்தவன்தான். மான்றியல் வங்கியிலும் என்னோடு வேலை செய்தான்.

அவன் பெயர் வருண், பஞ்சாப்காரன். பழகுவதற்கு இனிமையானவன்.  நாங்கள் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வோம். ஒரு நாள் ‘நீ நல்லே இருக்கே’ என்றான். 'வருண், என்னாச்சு எப்படித்தெரியும் உனக்குத் தமிழ்' என்றேன். எனக்குத் தமிழ் தெரியாது. இந்த வரி மட்டும்தான் தெரியும், நான் தமிழ்நாட்டில் 5 வருடங்கள் வேலை செய்தேன் என்றான்.

5 வருடங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இரண்டு வருடங்கள் கொச்சின் - கேரளாவிலும் வேலை செய்திருக்கிறான். ஆனால் அவனுக்குத் தமிழும் தெரியாது மலையாளமும் தெரியாது. இந்தி தெரியும் ஆங்கிலம் தெரியும். அவ்வளவுதான்.

அவன் பஞ்சாபி என்றாலும் டெல்லிதான் அவனது வாழ்விடம்.

அவன் இன்னொரு தகவலையும் சொன்னான். நான் மட்டுமல்ல, ஏராளமான வட இந்தியர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெகுகாலம் பணி செய்கிறார்கள் என்றான். ஏன் என்றேன். கணினித் துறையில் தென் இந்தியாதானே கொடி கட்டிப் பறக்கிறது என்றான். எனக்குக் கிடைத்த முதல் வேலையே தமிழ்நாட்டில்தான் என்றான்.

இந்தியா மட்டும் நேற்று பிறந்த மொழியான இந்தியை விட்டுவிட்டு பழம்பெரும் மொழியான தமிழை, நாடு முழுவதும்  கல்வி மொழியாய் ஆக்கி இருந்தால், எத்தனை நன்றாக இருக்கும்?

செம்மொழியான தமிழ் மொழி இந்திய ஆட்சி மொழி என்றால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு எத்தனை உயர்ந்துவிடும்?

அடர்ந்தியான இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட சிந்து சமவெளி நாகரிகம் கண்ட ஒரு மொழியை ஏற்பதால் இந்தியாவின் பழம்பெரும் பண்பாடு கலாச்சார மெல்லாம் எப்படியெல்லாம் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கும்?

என்றெல்லாம் பட்டியல் இட்டு, நான் ஆதங்கப்படவில்லை பேராசை கொள்ளவில்லை.

ஒரு பெரிய உண்மையைச் சாட்சியோடு உணர்ந்தேன்.

ஆங்கிலம் எங்கள் கல்வி மொழி அதுவே எங்கள் அலுவல் மொழி எனும்போது வருணுக்கும் எனக்கும்தான் எத்தனை நெருக்கம்? நான் தமிழ் அவன் பஞ்சாபி என்பது மறந்துபோய், அதற்காக அடித்துக்கொள்ளாமல் இந்தியர்களாய்த் தோள்சேர்ந்து நிற்கிறோம்.

நான் என் பள்ளியில் இருமொழி படித்தேன். ஆங்கிலம் + தமிழ்.
வருண் அவன் பள்ளியில் இருமொழி படித்தான். ஆங்கிலம் + இந்தி. ஒரு மலையாளி அவன் பள்ளியில் இருமொழி படிக்கிறான். ஆங்கிலம் + மலையாளம். ஒரு தெலுங்கன் அவன் பள்ளியில் இருமொழி படிக்கிறான். ஆங்கிலம் + தெலுங்கு.

இந்தியா செழுமையான பாரம்பரியங்களைக் கொண்டது. அதன் செழுமையில் மிகப் பெரும் செழுமை அதன் மொழி வளம். ஒவ்வொரு மொழியுமே உயர்ந்த மொழி. எந்த மொழியின் மீதும் எந்த மொழியும் ஏறி மிதித்து அழிக்கப்பார்க்கும் கேடு இந்தியாவை அழித்துவிடும்.

ஐரோப்பாவைப் போல தமிழ்நாடு தனி நாடு, கேரளா தனிநாடு, ஆந்திரா தனிநாடு, பஞ்சாப் தனிநாடு, வங்காளம் தனி நாடு. என்று அத்தனையும் தனித்தனி நாடுகளாய் இருந்தால்தான் அவரவர் தாய் மொழியைக் காப்பாற்ற அவர்களால் முடியும், அல்லாமல் சேர்ந்து ஒற்றுமையாய் ஒரே நாடாக இருந்தால் நடுவண் அரசின் இந்தி மொழி மாநில மொழிகளை அழித்துவிடும் என்றால் அங்கே மிகப் பெரும் பிழை இருக்கிறது. பிழையல்ல குற்றம் இருக்கிறது  குற்றமும் அல்ல கொடுங்கோல் இருக்கிறது.

உலகில் ஏராளமான மொழிகள் உண்டு. எல்லோரும் தாராளமாகப் படிக்கலாம். யார் தடுத்தார்? ஆனால் இதைத்தான் படிக்க வேண்டும் என்று நடுவண் அரசு இந்தி மொழியைத் தூக்கிக்கொண்டு வந்தால் தீப்பொறிதான் பறக்கும், இரத்த ஆறுதான் ஓடும், நாடுகள் வெட்டுப்பட்டுத் துண்டுகளாகித்தான் போகும்.

வெறுப்புதான் எகிறும் ஒற்றுமைதான் சுக்குநூறாகும்.

இதற்கு மேல் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

மொழி வெறியைக் கைவிடு இந்திய நடுவண் அரசே!

அன்புடன் புகாரி

No comments: