கஜா புயல்

கஜா என்றால் யானையாம்
இலங்கை சூட்டியப் பெயராம்

அந்தமானருகே
குட்டியாய்  ஜனித்த
கஜா

நாகையை மிதித்து
வேதாரண்யம் வளைத்து
பேயாட்டம் போட்டுக்
கதிகலக்கிய
கஜா

அதிரை பட்டுக்கோட்டை
தஞ்சை புதுக்கோட்டை
சுற்று வட்டாரக் கூட்டை
வட்டங்கட்டி வட்டங்கட்டி
கொடுஞ்சின ஜல்லிக்கட்டாடிய
கஜா

திண்டுக்கல்லில்
மேகங்களை உருட்டி
மழைத் தேங்காய் உடைத்துத்
தெறிக்கவிட்ட
கஜா

கடலில் பதுங்கியதும்
கரையில் மதங்கொண்டதும்
ஏனென்பது
கஜாவுக்கே தெரிந்த
கதை

சென்னயைக் கடந்தால்தான்
அது புயல்
நாகையைக் கடந்தால்
அது வெறும் முயல்
என்ற
எழுதப்படாத விதி
இந்தப் புயலிலாவது
மாறுமா?

கடலோர மாவட்டங்களில்
தென்னம்பிள்ளைகள்தாம்
சொந்தப் பிள்ளைகள்

இன்று
அத்தனை பிள்ளைகளும்
ஆணிவேர் பிடுங்கப்பட்டு
செத்துக் கிடக்கின்றன

இனி
எத்தனைக் காலத்தில்
அங்கே வாழ்வாதாரங்கள்
மீட்டெடுக்கப்பட்டு
பட்டிணிகள் நிறுத்தப்படுமோ
தெரியவில்லை

குனிந்து குனிந்து
தமிழ்நாட்டையே
அடிமை நாடாக்கிய அடிவறுடிகள்
கவுரவமில்லாக் கோமாளிகள்
யானைப் புயல் அழிவுக்கு
சேனை திரட்டி
முன்னேற்பாடு செய்தது
பெரிதல்ல

கஜாவால்
வாழ்வாதரம் பறிக்கப்பட்ட
ஏழைக் குடியானவர்களுக்கு
வாழ்வளிக்க
நிவாரணம் வழங்குவதுதான்
உண்மையான
பாராட்டுக்குரியது

கஜாவின்
தும்பிக்கையைப்
பிடித்துக்கொண்டாவது
தமிழகத்திற்கு
நம்பிக்கையைத் தருவோம் என்று
தொடர்ந்தும் அரசு
களப்பணி செய்யுமா?

இவற்றையெல்லாம் விட
மிக முக்கியமான
ஓர் உண்மையை  அறிந்து
அரசு
சிந்தித்துச் செயலாற்றுவது
மிக அவசியம்

புயல்கள் இனியும்
வரும் வரும்
பல்கிப் பெருகி
வாரம் ஒன்றாகக் கூட
வரும் வரும்

ஏன்

இயற்கை அழிவுகளே
புயல்களின் ஊற்றுக்கண்

தமிழகத்தில்

நிலத்தின் வளங்கள்
சுரண்டப்படுகின்றன

நீர்வளங்கள் தடுக்கப்பட்டு
விளைநிலங்கள்
சுடுகாடுகளாக்கப்படுகின்றன

மலைகள்
உடைத்தெறியப்படுகின்றன

மண்ணும் பறிபோக
வாழ் நிலங்கள்
மடலாகிக் கதறுகின்றன

வருகின்ற புயல்களுக்கு
நிவரணங்கள் தேவையா
அல்லது
புயலே வராதிருக்க
தடுப்புகள் தேவையா

அரசே அரசே
தமிழ்மன்ணை அழிக்கத் துடிக்கும்
நடுவனரசை வீழ்த்த
உன் ஆண்மைக்கு இதோ
ஒரு சவால்

கவிஞர் புகாரி
நவ் 18

No comments: