கஜா புயலும் தென்னம் பிள்ளைகளும்

காவிரிக் கழிமுகப் பகுதியில் இவ்வளவு தென்னந்தோப்புகள் எப்போதிலிருந்து இருக்கின்றன என்ற கேள்வியை முகநூலில் கண்டேன்.

அலுவலகம் செல்ல நேரம் ஆகிறது என்றாலும் இக்காலை இதை எழுதுகிறேன். பின் மேலும் தகவல்களை எழுதுவேன்.

நிறைய நெற்பயிர் நிலங்களும் இடையிடையே தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், வாழைத் தோப்புகள், புளியந்தோப்புகள் என்றுதான் அந்தக் காலம் முதலே இருந்தன.

பின் காவிரி நீர் வராததால், நீருக்கு ஏங்கிய நிலங்கள் தென்னைக்கு மாறின.

தென்னையில் ஓரளவு வருமானம் உண்டு. நெல்லுக்கு அடுத்ததாக என்று சொல்லலாம்.

இதுபோன்ற புயல் 50, 60 வருடங்களுக்கு முன்புதான் வந்தது என்பதாலும் அப்படியான புயல்கூட நாகையை மட்டுமே தாக்கும் என்பதாலும் பேராவூரணி போன்ற ஊர்களில் தென்னை மரங்கள் நடுவதை யாரும் பாதுகாப்பற்றது என்று நினைக்கவில்லை.

இனியும் தென்னை நடுவது கூடாது என்று எண்ணுவது தவறு. பாதுகாக்க உரிய ஏற்பாடுகளைச் செய்வதுதான் சரி.

இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு அரசே பொறுப்பேற்று ஆவன செய்ய வேண்டும். அரசுதான் இதுபோன்ற விவசாயிகளுக்கான காப்புறுதி.

தென்னை மரத்திலிருந்தும் பனை மரத்திலிருந்தும்தான் கள், பதநீர், இளநீர் போன்ற இயற்கை பானங்களும் கிடைக்கும்.

தென்னை மரங்கள் தென்னிந்தியா முழுவதும் அதிக அளவில் இருக்கின்றன. இலங்கையிலும் தென்னை மரங்கள் அதிகம்.

தென்னையைப் பிள்ளை என்பார்கள்

சொந்தப்
பிள்ளையைவிட
வச்ச பிள்ளை
காக்கும்
கைகொடுக்கும்

என்பது கிராமத்து வழக்கு.

தென்னையைப் பெத்தா
இளநீரு
பிள்ளையைப் பெத்தா
கண்ணீரு

என்பது கண்ணதாசன் பாட்டு.

இப்போது தென்னம்பிள்ளைகளைப் பறிகொடுத்து நிற்கும் டெல்டா பகுதி மக்களின் கண்ணீர் பதில் சொல்ல முடியாத அளவிற்கு ரத்தம் கொட்டுவதாக இருக்கிறது.

ஒரு பதினைந்து வருடங்களுக்குத் தங்கள் வாழ்வை பூஜ்யத்திலிருந்து தொடங்கி மீட்டெடுக்க வேண்டும்.

இன்று பூஜ்யம் கூட இல்லை. தென்னை வளர்ப்பிற்காகவும் தென்னையை நம்பி பிள்ளை வளர்ப்பு திருமணம் போன்ற இதர காரியங்களுக்காகவும் கடன்கள் வாங்கி அடைக்கமுடியாமல் மைனசில் அதாவது பூஜ்யத்திற்கும் கீழ் இருக்கிறார்கள்

அரசு வாய் பேசுகிறதே ஒழிய செயலாற்றவே இல்லை.

அரசு அறிவிக்கும் நிவாரணம் அந்த விவசாயிகளைக் கேவலப்படுத்துவதாகவே இருக்கிறது.

மத்திய அரசிடமிருந்து ஒரு வார்த்தையும் இன்னும் வரவில்லை.

விழுந்துகிடக்கும் தென்னையை அகற்ற வழியில்லை. குடிக்க நீர் இல்லை. உண்ண உணவில்லை உடுத்த உடையில்லை. மின்சாரம் இல்லை. பிள்ளைகள் படிப்பும் பறிக்கப்பட்டுள்ளது.

நான் தொலைந்துபோன இவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே பார்க்கவில்லை.

டெல்டா பகுதி மண் மீத்தேனெடுக்க குறிவைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப் படுகிறது. இந்தப் புயலைவைத்து அது தீவிரப்படுத்தப்படும் என்று நம்புகின்றேன்.

தஞ்சை பொட்டல் காடாய் ஆவதை காண எனக்குக் கண்கள் இல்லை.

இப்போதே காவிரியற்ற தஞ்சை என் நெஞ்சை மிதிக்கிறது. உயிரில் நெருப்பாய் எரிகிறது.

ஆகவே எனக்கு என் மண்ணை மீட்டெடுக்க வேண்டும். அதன் வாழ்வாதரத்தை மீண்டும் செழுமையாக்க வேண்டும். அதே பச்சைப் பசேல் தஞ்சையில் நிலவவேண்டும்.

அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து வருகிறேன். ஊரில் என்ன நடக்கிறது என்று கவனித்து வருகிறேன்.

பத்துலட்சம் தென்னங்கன்றுகள் நடப்பட வேண்டும்.

காவிரி நீர் பிரச்சினை கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

அதற்காக தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் உலகுக்கே சோறுபோட்ட, சோழநாடு சோறுடைத்து என்று புகழப்பட்ட தஞ்சை நெற்களஞ்சியம் மீட்டெடுக்கப் படவேண்டும்.

நேற்று மூதாதையர் இருந்தனர், இன்று நாமிருப்போம், நாளை இளையவர்கள் வருவார்கள் ஆனால் என்றென்றும் தஞ்சை நிலம் தரமான பச்சை நிலமாகவே விளைநிலமாகவே இருக்க வேண்டும்.

கவிஞர் புகாரி

No comments: