11

முகிலுக்கும் பரிதிக்கும்
வானவில் பிறக்கும் அதிசயம்போல்
மௌனத்தால்
மெலிதாகக் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்

பிரபஞ்ச வெளிகளில்
பிளக்கப்படாத அணுக்களின் பேரடர்வாய்
மௌனத்தால்
மௌனமாகவே இருப்பாள்
விருப்பில்லாப் பெண்

பெண்ணின் மௌனம்
பிழையில்லாச் சம்மதமென்று
எவன் சொன்னது

அது
சுயநலச் சூட்டில் கொதித்து
பெண்ணை
வசதியாய் வளைக்கும்
அபிலாசையில்
மூர்க்கர்கள் சொல்வது

புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுள்ளம்

இவையாவும் அவளின்
ஆசீர்வதிக்கப்பட்ட இயல்புகளல்லவா

அவகாசம் கேட்கும் விண்ணப்பங்களாய்ச்
சட்டுச் சட்டென்று மொட்டாகும்
பெண்ணின் மௌனப் பூக்கள்

சரியான சாவிதேடி
அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அவசரப்படுத்தாமல்
அமைதி காப்பதே ஆணுக்கழகு

மௌனம் கலைத்து அவள் உனக்குச்
சம்மதமகுடம் சூட்டியபின்னும்
இன்னொரு மௌனத்தை
உடுத்திக்கொண்டுவிட்டால்

அடடா
அது நிகழ்ந்தே விட்டது
ஆம்
உன் நம்பிக்கை மரம்மீது
கூர் கோடரி ஒன்று
உறுதி செய்யப்பட்டுவிட்டது

விடை பெற்றுக்கொள்
விரைந்து வேற்றிடம் பார்
வெதும்பிச் சாகாதே

பெண்ணின்
விருப்பத்தின் திருப்பத்தை
வாழ்த்திப் பாட
வாயற்றுப் போனாலும்
அவள்
வாழும் வழிவிட்டுப்போ

இன்னொரு பெண்மனம்
உனக்காக எங்கோ
மௌனம் கலைக்கக்
காத்திருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

mohamedali jinnah said...

அருமை

mohamedali jinnah said...

பதிவுக்கு ஒரு தலைப்பு கொடுங்கள்