நீலாம்பல் பூவே

நீலாம்பல் பூவே
நீலாம்பல் பூவே
நீயெங்கு போனாய்
நீலாம்பல் பூவே

கோலாட்டம் போடும்
கொண்டாட்ட மனசு
ஏழெட்டு நாளாய்த்
தூங்காமல் கிடக்கு

காலற்ற மேகம்
வானேறிப் போகும்
காய்கின்ற நிலவும்
கண்மூடி நாணும்

நூலற்று வாடும்
காற்றாடி யானேன்
நீவந்து சேரு
நீலாம்பல் பூவே

ஆகாயம் நீலம்
ஆழ்கடல் நீலம்
ஆனாலும் உன்விழி
போலேது நீலம்

பாகாக்கி மூளும்
பனிப்போரே நாளும்
பாராத நாளில்
என்மொத்தம் நீலம்

வேகாத வெய்யில்
தாளாத தனிமை
விலகட்டும் இமைகள்
விரியட்டும் குடைகள்

சாகாத வரமாய்
உன்பார்வை போதும்
சாவென்ற சதியும்
குறிமாறிப் போகும்

தேரோடு வந்தேன்
தீர்மானம் தந்தேன்
ஊரோடு நீயோ
போராடும் செந்தேன்

யாரோடும் சேரா
ஏகாந்த கீதம்
உன்நெஞ்சில் ஓதும்
என்காதல் யாகம்

சேறோடு சரியும்
உன்னுள்ள தாகம்
என்மான உயிரின்
வேர்கொத்தும் காகம்

மாரோடு மங்களம்
மனத்தோடு குங்குமம்
மாறாகிப் போனால்
முற்றாக நடைப்பிணம்

நீலாம்பல் பூவே
நீலாம்பல் பூவே
நீயெங்கு போனாய்
நீலாம்பல் பூவே

No comments: