சந்தோசமே உயிர் மூச்சு

அவளுக்கும் அவனுக்கும்
இந்த உலகத்தைப் போல
சந்தோசமே உயிர் மூச்சு

ஆனால் அதற்கு
வழிசொல்லும் வரைபடங்கள் மட்டும்
அவர்களிடம் வேறு வேறு என்றால்
அவர்களுக்குள் ஏது பேச்சு
எல்லாமே தூரமாய்ப் போச்சு

அவளின்
வரைபடம் பார்த்தான் அவன்
நிலைகுலைந்த புருவத்தில்
நெருப்புப் பற்றிக்கொண்டது

அவனின்
வரைபடம் பார்த்தாள் அவள்
எழில் வடித்த விழி நழுவி
எரி அமிலத்துள் விழுந்து
துடிதுடித்தது

அவர்களின் இதயங்களில்
வெறுப்புப் பயிர்கள்
வரப்பு மீறி வளர்ந்தன


முதலில்
மௌன மர நிழல்களில்தான்
ஒதுங்கினார்கள்

பின் ஒரு தரங்கெட்ட நாளில்
மௌனக் கூடுகள் உடைந்து
வார்த்தைக் கழுகுகள்
வாய்கிழியக் கூவி வட்டமிட்டன

உள்ளங்கள் ஒருமிக்காத இடத்தில்
உறவுப் பசை ஒட்டுமா ?

பொருந்தாததொன்றே
பொருத்தமென்றானபின்
நிலைக்கும் பிணைப்பென்று
ஒன்றுண்டா ?

கிழக்கும் மேற்கும்
கைகோர்க்கின்றன என்றால்
வியப்பு நிலவலாம்
நிம்மதி நிலவுமா ?

பொய்யும் உண்மையும்
ஒரு முட்டை ஓட்டுக்குள்
உயிர்க் கருவாய் வாழுமா ?

வாழ்க்கைக்குள்
முரண்பாட்டு இடிகள் இறங்கும்
முரண்பாட்டுக்குள்
வாழ்க்கை மழை பொழியுமா ?

அன்பற்ற பாறைக்குள்
ஈரம் தேடுவதும்
நேசமற்ற நெஞ்சில்
பாசமனு தொடுப்பதும்
சுயநல மனதுக்குள்
நியாயவொளி தேடுவதும்
விந்தைகள் என்று
இந்தப் பாழும் மனதிற்குப்
புரியவில்லையென்றால்
என்னதான் செய்வது என்று
அங்கலாய்த்தார்கள் இருவரும்

ஆயினும்
அவளுக்கும் அவனுக்கும்
இந்த உலகத்தைப் போல
சந்தோசமே உயிர் மூச்சு

அங்கேதான்
இருண்டு கிடந்த அவன் இதயத்துள்
ஓர் தீப்பொறி எழுந்தது

ஆம்
அவளுக்கும் அவனுக்கும்
ஒன்றுபோலவே
சந்தோசமே உயிர் மூச்சு
சந்தோசமே உயிர் மூச்சு

வேற்றுமைகளையே
விரல்விட்டு
எண்ணிக்கொண்டிருந்தபோது
வெறுமனே தேய்ந்தது
விரல்கள் மட்டுமல்ல
அவர்களின் நாட்களும்தானே

இலைகளும்
இதழ்விரித்துப் பூத்துக்குலுங்கிய
ஓர் மலர் நாளில்
அவள் கனவுகளைக் காண
அவன் கண்களைத் தந்தான்

மனம் நெகிழ்ந்த மறுநாள்
அவன் ஆசைகளின் திசையில்
அவள் தீபம் ஏற்றி வைத்தாள்

இன்றோ...
அவளுக்கும் அவனுக்கும்
இந்த உலகத்தையே மிஞ்சும்
சந்தோசமே வாழ்க்கை

சுபம்

No comments: