காவியம் இதுதானோ

சந்தனப் பேழை
சிந்தியதாலோ
வந்தது மாலை

அந்தச் செந்தேன் மலரில்
வண்டின் தழுவல்
தந்ததோ ராத்திரி

மன்மதக் கருவண்டு
தேனுண்டதாலோ
வெளுத்தது வானம்

அவள் நாணத்தை மொழியும்
தோழிகள்தாமோ
வைகறைப் பூவிதழ்கள்


பன்னீர்ப் பனியில்
பொன்முகம் நாணக்
குளிப்பவள் நிலவாளோ

அவள் பருவ மலர்தழுவி
மணக்கும் தென்றலில்
கூந்தல் உலர்வாளோ

மழைத்துளி மணிகளை
வழியெங்கும் தூவியே
முகிலவன் வருவானோ

அவன் மார்பினில் துயிலும்
மோகத்தில் நிலவாள்
மெல்லத் தவழ்ந்தாளோ

இது இந்திரன் நந்தவனம்
என்றும் இளமை மணங்கமழும்
பல யுகங்கள் கழிந்தாலும்
உயர் காதல் உயிர்வாழும்

மலைமான் இடையில்
அருவிகள் நழுவுது
காவியம் இதுதானோ

குமரி ரோசாப்பு நாணம்
இலைகளில் வழியுது
காதலன் வந்தானோ

கரைகளில் ஓவியம்
வரைந்திடும் அலைகள்
நதிகளின் தூரிகையோ

தினம் ஒரு கவிதை
பாடிடும் குயில்கள்
தேவனின் தூதுவரோ

என் இதயம் குளிர்காயும்
இந்த இயற்கை உயிர்காக்கும்
பெரும் சோகத்தில் தள்ளாடும்
எந்த நெஞ்சும் இளைப்பாறும்

No comments: