**36 காலமெல்லாம் காதல்

அவளும் அவனும் அன்பான கணவன் மனைவி. அவர்களுக்கு இடையில் இருக்கும் காதல் வானவில்லைப்போல பல வர்ணங்கள் கொண்டது. சூழல் காரணமாக திடீரென்று தாக்கிய ஒரு துரோக வியாதி அவளைப் படுக்கையில் சாய்த்தது. சில மாதங்களாகியும் அதிலிருந்து மீளாத அவள் இனி மீளவே மாட்டோ மோ, தன் அன்புக் கணவனுக்குத் தானொரு சுமைதானோ, என்று துடித்துத் துடித்து கண்களின் கரைகளில் உப்புக் காய்ச்ச்சுகிறாள். வெளிரிய முகத்துடன் வாடிக்கிடக்கும் அந்த ரோஜாவை தன் மடியில் அள்ளி அணைத்துக் கொண்டு அவன் பாடுகிறான் விட்ட சொல்லைத் தொட்டெடுத்துப் பாடும் அந்தாதிப் பாடலாக:


ஈரக் கண்ணை மூடிக்கொண்டு
வாடி நிற்கும் வாழை
தூரம் இல்லை ஓடி வரும்
நீ மலரும் காலை

காலை முதல் காலை வரை
காதல் சொல்லும் ராகம்
வேளை வரும் பூக்கள் பூக்கும்
தேறும் உந்தன் தேகம்

தேகம் எங்கும் தேனைச் சிந்தும்
தோகை மயில் பெண்ணே
மேகம் போலே நீரைச் சிந்தி
வாடும் எந்தன் கண்ணே

கண்ணுக்குள்ளே உன்னை வைத்து
காலமெல்லாம் காதல்
கண்ணின்மணி கண்ணீர் இனி
வேண்டுவதேன் வாழ்வில்

No comments: