கவிநாயகர் வி கந்தவனம்


டொராண்டோ தமிழரங்கம் விழாவில் கவிநாயகர் கந்தவனம் அவர்களை அறிமுகம் செய்யும் பணி எனக்குத் தரப்பட்டது. அதை நான் இப்படிச் செய்தேன்


நீறு நீக்கி
நிலம் பெயர்ந்த நெஞ்சுக்குள்
அழகு தமிழ் நெருப்பு கூட்டி
அணையுடைத்த கன்னிக் காவிரிபோல்
கனடியத் தமிழ் மனக் கரைகளில்
இனிப்பாய்க் குதித்தோடும்
தமிழரங்கத்துக்கும்

போற்றிப் பாதுகாக்கும் பொக்கிசமாய்ப்
புலம்பெயர்ந்த மண்ணிலும் - கவி
வளம்பெயர்த்துக் கொண்டுவந்து
வற்றாது என்றென்றும் கொட்டும்
கவிநாயகர் கந்தவனம் அவர்களுக்கும்

ஏனைய தமிழ் நெஞ்சங்களுக்கும்
என் பிஞ்சு மாலை வணக்கங்கள்


கவிநாயகர் வி. கந்தவனம்

எழுபத்தோரு வயது இளைஞர்
ஈழமண் பெற்றெடுத்தக் கவிஞர்

சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரி
பலநூறு கவியரங்கங்களுக்குத் தலைமை ஏற்று
தாக இதயங்களில் தமிழ்த்தேன் இட்ட மாரி

ஆசிரியராய்த் துவங்கி அதிபராய் வளர்ந்தவர்
அயல்நாட்டுக் கூடங்களிலும் நற்கல்வி வழங்கியவர்

கவிதை நூல் கதை நூல்கள் மட்டுமல்ல்
பாடநூலும் பயிற்சி நூலும் வெளியிட்ட பெருமைக்குரியவர்

எண்பத்தெட்டில் கனடா வந்தபின் மட்டுமே இவர்
இருபதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளார்

கனடாவில் அதிகம் தமிழ்நூல் வெளியிட்ட
முதல் தமிழர் இவரே
இதனால் கனடியத் தமிழீழ
இலக்கியத் தந்தையென்றும்
கவியரங்குக்கோர் கந்தவனம் என்றும்
பாராட்டப்பட்டவர்

இதுவரை வெளியான நூல்களின் எண்ணிக்கையே
நாற்பதைத் தொடும்
நல்லூர் நாற்பது என்ற இவரின் பக்தி நூல்
பலர் வீடுகளில் ஓதப்படும்
இருந்தும் இவர் எளிமை ஒன்றையே தொட்டு வாழும்
இனிய பண்பாளர்.

வண்ண வண்ணமாய் உன் எண்ணஅருவி
வென்றுகுவித்த கவி கொஞ்சமல்லவே
மண்ணும் விண்ணும்பார் நீ மதுரகவி
மணிவிழாவும் கண்ட மகுடபதி

கன்னித் தமிழால் கவி நாயகமே
கனடாவின் தேச கீதமுமே
கண்டு கொடுத்தாய் புகழ் அள்ளியெடுத்தாய்
கன்னல் மொழியே நீ வாழியவே

ஆம், கனடிய தேசிய கீதத்தைத் தமிழில் அதன் இசை மாறாமல்
ஆக்கித்தந்த வித்தகர் இவர்தான்

பல இலக்கிய வட்டங்களை உருவாக்கித் தந்தவர்
வாழ்நாளெல்லாம் எதோ ஓர் அமைப்பின் தலைவராய்
சளைக்காமல் பணியாற்றிவருகிறார்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் இவர்
தற்போது மேற்குலக கவிஞர் கழகத்தை உருவாக்கி இருக்கிறார்

கலை, இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, சைவ சமயம்
ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாளர்

ஆங்கிலத்திலும் கவிதை கதைகளை
இவர் விட்டு வைக்கவில்லை
இவரின் கவிதை ஒன்றுக்கு
Editor's Award கிடைத்துள்ளது
இவரது ஆங்கிலக் கவிதைகளை
The National Library of Poetry வெளியிட்டுள்ளது

இவரது 12 short stories, Lasting Light- என்னும் இரு நூல்களை
உயர் வகுப்புகளில் உபபாடங்களாகப் பயன்படுத்தலாம் எனக்
கனடிய பாடவிதான சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவரது இலக்கிய சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள
உலகப் பல்கலைக் கழகம் 2001ல்
டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது


அருங்கலைகள் ஆயிரம் வளர்க்கும்
இவரே ஓர் பல்கலைக் கழகம்
கரும்பிற்கு இனிப்பு வழங்குவதாய்
மதுரகவிக்குக் கலாநிதி பட்டம்


இனி இந்தத் தேன்மழை நம்மீது பொழியட்டும்
தாகச் சிற்றோடையாய் அதை ஏந்திக்கொள்ள
நான் என் ஆவல் மணல்களோடு அமர்கிறேன்


தங்கரதமே தமிழ்ச் சங்கமணமே
சிங்கநடையே குளிர்த் திங்களகமே
சங்குநயமே புதுச் சந்தமொழியே
கங்குமலரே கவிக் கந்தவனமே


அன்புடன் வருக வருக
உங்கள் கவிதை அனுபவங்களால்
இந்தத் தமிழரங்க இதயங்கள்
நிறைக நிறைக

1 comment:

Anonymous said...

அன்பு நண்ப,

பாம்பின் காலைப் பாம்பறியும்.

உங்கள் பண்பு உயர்ந்தது. நன்றி என்ற சொல்லால் இதனை ஈடுசெய்ய முடியாது. என்றைக்கும் இதனை மறவேன்.

அன்புடன்,

வி.க.