தமிழர் வானில் ஜிம் கரிஜியானிஸ்


கனடா டொராண்டோவில் ஜிம் கரிஜியானிஸ் என்ற அமைச்சர் தமிழர்களின்பால் மரியாதை கொண்டிருந்தார். தமிழனின் ஆதரவை அவர் நாடினார். அவரின் ஆதரவைத் தமிழன் நாடினான். இருவரும் கைகுலுக்கிக்கொண்டதன் விளைவாக அவருக்கு ஒரு விழா எடுத்த ஓர் தமிழ்மாலைப் பொழுதில் அவருக்கு நான் சூட்டிய நன்றி மாலை


நம் தமிழர்வானில் ஜிம் கரிஜியானிஸ்

தேர் கேட்டா
புறப்பட்டான் தமிழன்
ஊர் விட்டான்
நீரும் வேரும் அற்று
உயிர் வாடும்
முல்லைக் கொடியானான்

வம்பால் விரட்டப்பட்டு
ஒரு கொம்புக்காய்த்தான்
துடி துடித்தான்
அடடா
தேரல்லவா தந்தது நம் கனடா

தேம்பியழும் விழிகளில்
ஒரு பழைய போர்வையைத்தான்
கேட்டான் தமிழன்

மாளிகையின் மத்தியில்
ஓராயிரம்
தங்க நாற்காலிகளையல்லவா
போட்டுத்தந்தது நம் கனடா

உயிர் துறப்பான் தமிழன்
ஆனால் தன் மொழி துறப்பானா
மொழி துறந்தால் அவன் ஒரு
தமிழன்தானா

மொழியின் மேடைகளில்தானே
தமிழனின் கர்வம்
விண்ணளந்து நிற்கிறது
அவன் பண்பாடு
தலைநிமிர்ந்து வாழ்கிறது

ஊர்விட்டால் என்ன
மொழிவிடாத வரை
தமிழன் என்றென்றும்
ராஜ சிம்மாசனத்தில்தான்

O

நம் தமிழர்வானில் - திரு
ஜிம் கரிஜியானிஸ்

இந்தப் பெயரை உச்சரிக்கும் போதே
நமக்குள் நன்றியின் நாளங்கள் நிமிர்கின்றன

யார் இவர்?

கற்றையாய் ஒரு கறுப்பு மீசை வைத்துவிட்டால்
இவர் நம் கட்டபொம்மன் ஆகிவிடுவாரோ
என்றுகூட நான் ஐயப்படுகிறேன்

இவர் இன்று தமிழனுக்குச் செய்யும் தொண்டு
சரித்திரத்தில் சில கோடுகளையாவது
கிழித்துவிடும் என்பதில்
எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது

தமிழன்கூட மறந்துபோகிறான்
ஒரு தமிழ் விழாவுக்கு வருவதற்கு
இந்தத் தமிழ் நேசனோ
ஒருபோதும் மறப்பதில்லை

இந்த வெள்ளையர் மனதின்
உள்ளுக்குள்ளும் வெள்ளை

இவர் ஓரிரு வார்த்தைகளை
மழலைத் தமிழில் மொழியும்போது
தமிழ் ஒரு தங்கப் பட்டாம் பூச்சியாய்
சிறகடித்து மின்னுவதையும்
பூரித்துச் சிரிப்பதையும்
தமிழரின் கண்களும் காதுகளும்
பார்க்கவும் கேட்கவும் தவறுவதில்லை

ஆம்
தமிழ் அப்படித்தான்
அறியாதவன் பேசும்போதும்
அழகோடு அவன் நாவினில்
நர்த்தனம் ஆடி செங்கோல் ஊன்றும்
கேட்போரின் செவிகளில்
தேன் வாரி இறைக்கும்

வண்ணம் வேறானாலும்
தமிழன் முன்னேற்றத்தில் கொண்ட
எண்ணம் உயர்வான ஜிம் கரிஜியானிஸ்

நம் தமிழர் வானில் - திரு
ஜிம் கரிஜி யானிஸ்
விண் வளரும் நட்பால் - தமிழ்
இன் அகமும் தேனில்
கண் விரியும் தொண்டு - தினம்
என் மனமும் கண்டு
நல் இதயம் வாழ - பசும்
பொன் இனிய வாழ்த்து

நான் இக்கவிதையின்
ஒரு வார்த்தையைக் கூட
உன் மொழிக்கு மாற்றப் போவதில்லை

ஏன் தெரியுமா?

கவிதை என்பது
உணர்வுகளின் உற்சவம்
நீயதை
இந்நேரம் உணர்ந்திருப்பாய்
உணர்வுகளுக்கு ஏது மொழி

பிறகு
நான் ஏன் மொழிமாற்றவேண்டும்
வாழ்க தமிழ் வளர்க தமிழர்
உயர்ந்தோங்குக தமிழர்களின்
நன்றி உணர்வுகள்

No comments: