சிந்தனைச் செல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்து


சிந்தனைச் செல்வரே சிந்தனைச் செல்வரே
செந்தமிழ்த் தேன்மலரே - உங்கள்
சிந்தனைப் பூக்களின் அற்புத வாசனை
சுத்துது தேசங்களை

சந்தமும் மயங்கச் சிந்துகள் பாடும்
சந்தனச் சங்கீதமே - உங்கள்
சுந்தர இசையில் சொக்கிடும் சொக்கிடும்
சோலையின் பூங்குயிலே

நெஞ்சினில் பொன்னும் நாவினில் முத்தும்
நிறைந்தச் செல்வந்தரே - விண்ணை
மிஞ்சிடும் ஞாபகப் பேரொளி கண்களில்
மிதக்கும் வல்லவரே

தஞ்சமும் பெற்று வந்தஇந் நாட்டில்
தமிழாய் வாழ்பவரே - வந்து
கொஞ்சிடும் சொல்லை மேடைகள் தோறும்
கொடுக்கும் வான்மழையே

கண்டதும் கேட்டதும் கருத்தினை வென்றதும்
கருவென உருவாக - சிந்தை
கொண்டவர் மத்தியில் கூறி மகிழ்வதில்
குழந்தை மனதாக

வண்டுகள் தேனைத் தேடித் திரியும்
வெற்றி வெறியோடு - தகவல்
மண்டலம் புகுந்து மாமலை பெயர்க்கும்
மாவரம் பெற்றவரே

புரிந்தநல் அறமும் பொன்மனச் சுடரும்
பூமியில் வாழ்வளிக்கும் - உள்ளம்
திறந்தநல் வாழ்த்தினை அகவையில் சிறியவன்
திசைகளில் ஏற்றுகின்றேன்

அறிந்ததை அள்ளி அருந்தமிழ்க் கவியில்
அன்புடன் வழங்குகின்றேன் - என்றும்
அறிவினில் அன்பினில் குறைவிலா உங்களின்
ஆயுளை வேண்டுகின்றேன்

அறுபது வயதைப் போற்றுந் திருவிழா
அமர்க்களம் போடுதிங்கே - அகவை
அறுபது என்ன அறுபது மேலும்
அடைந்திட வாழ்த்துகின்றேன்

சிறப்புச் செழித்துச் சிறுகுறை கூட
சிதறித் தெறித்தோட - இன்பம்
பிறந்த இந்நாள் இன்னும் இனிதாய்ப்
பிறந்திட வாழ்த்துகின்றேன்

2 comments:

சேதுக்கரசி said...

யார் இந்த சிந்தனைச் செல்வர்??

Unknown said...

கனடாவில் வாழும் ஓர் இனிய தமிழர்