புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த்தாய்


2005ல் கனடாவின் டொரோண்டோ மாநகரில் 'புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த்தாய்' என்ற தலைப்பில் பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்களைத் தலைவராய்க்கொண்டு ஒரு கவியரங்கம் நடந்தது. அதில் நான் கலந்துகொண்டு வாசித்த கவிதை இது. இந்தத் தலைப்புக்காக நான் புதிதாக ஏதும் கவிதை எழுதவில்லை, இதன் முதல் பாடலை மட்டும் சிரமப்பட்டு எழுதினேன் :) மற்றவையெல்லாம் நான் முன்பே நம் தமிழன்னைக்காக எழுதியவைதாம்.


புதுமைக் கவிப்புலத்தில் பொன்மகுடம் சூடும்
மதுகைக்கப் பாவடிக்கும் மாட்சி - எதுகைக்கே
ஏங்காக் கவிஏறு ஓங்கு புகாரி!பாப்
பூங்காவந் தேபாடும் பூத்து!



என்று வெண்பா மாலை சூடி என்னை வரவேற்றார் தலைவர் பெருங்கவிக்கோ. நான் மேடைக்கு வந்தேன். வந்தவன் ஏதும் சொல்லாமல் அவையைச் சில நொடிகள் மௌனத்தில் இருக்க வைத்துவிட்டு பின் உரத்த குரலில் இந்தப் பாடலைப் பாடத் தொடங்கினேன். அப்படியே அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்கள் டொராண்டோ தமிழர்கள். என்னிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்திருக்க முடியாத அந்தப் பாடலை நான் பாடினேன்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த்தாய்க்கு என் வாழ்த்து

டாமில் வால்க டாமில் வால்க
டாமில் வால்கவே
டாமில் பேசும் டாமில்ஸ் எல்லாம்
ஃபைனாய் வால்கவே

கமான் பீபுள் கமான் பீபுள்
கமான் கமான்யா
கேசட் போட்டு பாய்ஸ் பாத்து
கமான் கமான்யா

டோண்ட் கிரை மம்மி டோண்ட் கிரை மம்மி
நோ நோ டாமில் மம்மி
டாமில் வலத்து சீயென் டவரில்
இடுவோம் டாமில் மம்மி

வாக்கிங் போனா டாக்கிங் உண்டு
டாக்கிங் ஃபுல்லா
டாமில் பேசி டாமில் பேசி
விவில் சேவ்யூ டாமில் மம்மி


இப்படித்தான் தமிழ் காக்கப்போகிறோமா? புலம்பெயர் தமிழ்த்தாய் இதைத்தான் புரிந்துகொள்கிறாளா? புலம்பெயர்ந்தாலும் தாய் தாய்தான். ஆனால் இன்று தமிழ் அறியாதவன்தான் தமிழன் என்று ஆகிவிட்டான். அவனுக்குத் தமிழின் பெருமையைக் கொஞ்சம் நான் கூறத்தான் வேண்டும்.



தமிழைப் பிறந்த மண்ணில் மறந்தாலும் புகுந்த மண்ணில் முத்தமிட்டுக் காப்பது இன்று இணையம்தான் என்று உறுதியாகச் சொல்வேன்.....


இணையம்
தமிழ் வளர்க்கும்
நவீன தமிழ்ச்சங்கம்

இன்றைய தெருக்களில்
குப்பைத் தொட்டியில்
எறியப்பட்ட
தொப்புள் கொடி உலராத
அனாதைக் குழந்தையாய்த்
தமிழ்

அதன் கைகளில்
சில்லறையே விழாத
பிச்சைப் பாத்திரம்

ஆங்கிலக்
குட்டைப் பாவாடையை
அங்கும் இங்கும்
கிழித்துக் கட்டிக்கொண்டு
தமிழரின் தனிமைச்
சந்திப்புகளிலும்
நாவழுக்கும்
அந்நியச் சொல்லாட்டங்கள்

சோத்துக்காகப்
போடப்படும் இந்தத்
தெருக்கூத்துத் தாளம்
இந்த நூற்றாண்டிலும்
நீடிக்கும் தமிழ் அவலம்

இந்நிலையில்தான்
கணித்தமிழ் என்னும்
புதுத்தமிழ்
இணையத்தில் எழுந்த
ஓர் இனிப்புப் புயல்

ஆலமரத்தடி அரசமரத்தடி,
தேனீர்க்கடை ஆத்துப் பாலம்
எல்லாம் அந்தக்
கிராமத்துக்கு மட்டுமே மேடை

ஆனால்
இணையம் என்பதோ
உலகின் ஒற்றை மகா
மின்மரம்

தமிழோடும்
நல்ல தமிழர்களோடும்
புது உறவோடு
இணையவைத்தக்
கணினிக்கும் இணையத்திற்கும்
என் உயிர் முத்தங்கள்




1 comment:

Anonymous said...

புகாரி,

தமிழுக்கு இதயம் சொந்தம் தானே
மூச்சின்றி இயங்குமா பேச்சு
முளைக்கின்ற செடி எல்லாம் பூக்கும்
முன்னினித்த தமிழிங்கே சுவைக்கும்!
அயலகத்தில் தமிழுண்டு
தாயகத்தில் தான் தவிக்கின்றது
கடலுக்குள் கரை சேர்க்க
கலங்கரை விளக்கு வேண்டும்

அன்புடன் ..... செல்வி ஷங்கர்