10

இந்தக் காலையும்
உன் நினைவுகளோடுதான்
எழுகிறேன்

இன்று உன்னைச்
சந்திக்க மாட்டோமா
என்ற ஏக்கம்
என்னைத் தேநீராய் எடுத்து
தன் நெருப்பு உதடுகளால்
உறிஞ்சுகிறது

நாளெல்லாம்
பொழுதெல்லாம்
உன்னோடு
ஆயிரம் ஆயிரம்
கதைகள் பேசவேண்டும்
என்ற தவிப்பு
வார்த்தைகளைக் குவித்து
அதனுள்
என்னைக் கவ்விக்கொண்டு
மூடிக்கொள்கிறது

நான்
இருந்துகொண்டே
இல்லாமல் போகிறேன்

நான் இல்லாமல்
போகும் பொழுதெல்லாம்
புரிந்துகொள்கிறேன்

உன்னிடம்தான்
ஓடிவந்திருப்பேன் என்று

நான்
இருக்கும் பொழுதுகளை
கிளறிப் பார்க்கிறேன்

நீ எங்கே
என்ற தேடலைத் தவிர
அதில்
வேறொன்றும் இல்லை

நான் உன்னை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்

உன்னை
நினைத்துக்கொண்டிருப்பதற்காகவே
நான் இருக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

mohamedali jinnah said...

நான் உங்களை நினைத்துக் கொண்டுதான் இருக்குறேன். கற்பனையும் காதலியும் தடுக்க முடியுமா

அன்புடன் மலிக்கா said...

/நான் இல்லாமல்
போகும் பொழுதெல்லாம்
புரிந்துகொள்கிறேன்
உன்னிடம்தான்
ஓடிவந்திருப்பேன் என்று

நான்
இருக்கும் பொழுதுகளை
கிளறிப்பார்க்கிறேன்
நீ எங்கே என்ற தேடலைத் தவிர
அதில் வேறொன்றும் இல்லை..//

அனுபவித்து எழுதிய வார்த்தைகள் மிக அழகு ஆசான் கவிதை ரொம்ப பிடித்திருக்கு...

Mugilan said...

அழகான வரிகள், உணர்வுகள்!