பிரிக்கவும் சேர்க்கவும் பழகவும்

மகிழ்ச்சியையும் முத்தத்தையும்
பகிர்ந்தால் மட்டுமே
இன்பத்தைச் சுவைக்க முடியும்

கோபத்தையும் ரகசியத்தையும்
பகிராவிட்டால் மட்டுமே
நிம்மதியைக் காக்க முடியும்


உதடுகளையும் உள்ளத்தையும்
ஒட்டவைத்தால் மட்டுமே
சத்தியத்தில் நனைய முடியும்

துக்கத்தையும் தூக்கத்தையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
நெடுந்தூரம் கடக்க முடியும்


கண்களையும் காட்சிகளையும்
பிணைத்துவைத்தால் மட்டுமே
உலகத்தை ரசிக்க முடியும்

கனவுகளையும் யதார்த்தங்களையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
வாழ்க்கையை ருசிக்க முடியும்


சிந்திப்பையும் சிரிப்பையும்
பிண்ணிவைத்தால் மட்டுமே
செவிகளை ஆள முடியும்

கருத்தையும் கட்டளையையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
ஏற்பினை எட்ட முடியும்


உயிரையும் உணர்வையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
அன்பை வளர்க்க முடியும்

புகழையும் பேச்சையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
சுயத்தைக் காக்க முடியும்


நட்பையும் நம்பிக்கையையும்
இணைத்து வைத்தால் மட்டுமே
மெய்யாக நகைக்க முடியும்

காதலையும் கபடத்தையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
உறவுகள் தழைக்க முடியும்


காயங்களையும் கருணையையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
எவரையும் மன்னிக்க முடியும்

வார்த்தைகளையும் வக்கிரங்களையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
வன்முறையைக் கொன்றழிக்க முடியும்


இறைவனையும் நம்பிக்கையையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
இறைவனிடம் கையேந்த முடியும்

நன்மையையும் தீமையையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
இன்னல்களை எடுத்தெறிய முடியும்



No comments: