புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்

புலம்பெயர்வு என்றதும், தமிழர்கள் நாடுவிட்டு நாடு புலம்பெயர்வதைப் பற்றியே பெரும்பாலும் நாம் நினைக்கின்றோம். நம் தமிழன்னை அவள் பிறந்த காலம் தொட்டு இன்றுவரை புலம்பெயர்ந்த வண்ணம் இருக்கிறாளே அதை மறந்துவிடுகின்றோம். தமிழன்னையின் புலம்பெயர்வும் தமிழனின் புலம்பெயர்வும் சில காலகட்டங்களில் இணைந்தே நிகழும் ஒன்றாகவும் இருக்கிறது.

ஓசைகளாய் மட்டுமே இருந்த தமிழன்னை இன்று கணினிக்குள் பெயர்ந்து மின்னடனம் போடுகிறாளே அதுதான் எத்தனை உயர்வானது? இன்று இணையத்தில் வெகு அதிகமாக புழங்கப்படும் சில மொழிகளுள் தமிழும் ஒன்று என்பது நமக்கெல்லாம் எத்தனை பெருமையானது?

தமிழன்னை பழைய ஓலைச் சுவடுகளோடுமட்டுமே முடங்கிக் கிடப்பவளல்லள். ஆற்றல்மிக தமிழர்களால் எக்காலத்திற்கும் ஏற்றவளாய்ப் புதுமைக்குள் புலம்பெயர்ந்த வண்ணமாய்த்தான் இருக்கின்றாள்.

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல் மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகு தமிழ் அமுதத் தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்





No comments: