ஓடுடைத்தாள்

பார்வை நொறுக்கும் விழியோடு
பழி வென்று முடிக்கும் நடையோடு

காட்டுத் தீயாய் எழுகின்றாள்
பழங் கட்டுகள் எரித்து நிமிர்கின்றாள்

விகிதம் கேட்டா அழுகின்றாள்
வெறும் கருணை மனுவா தருகின்றாள்

உரிமை மீட்டே எடுக்கின்றாள்
புதுக் கற்பின் பொருளே அதுவென்றாள்

மலரின் மென்மை விரல் கொண்டாள்
யுக நெருப்பின் வன்மை வேர்கொண்டாள்

நிலவின் எழிலாய் வருகின்றாள்
பல நெற்றிக் கண்கள் வெடிக்கின்றாள்

கருணை அன்பு மனங் கொண்டாள்
உயர் காதல் நட்பு உயிரென்றாள்

தாய்மை தூய்மை தானானாள்
வளர் அறிவின் தெறிப்பில் ஓடுடைத்தாள்

No comments: