அவன் பெயர் போர் வீரன்

காட்டுமிராண்டித் தனம்
அநாகரிகத்தின் உச்சம் 

மனிதன்
பரிணாம வளர்ச்சியே 
பெறவில்லை
என்ற அறிவிப்பு 

போர்

0

கண்காணாத
தேசத்தில் விளைந்த
ஆப்பிள்
என் ரத்தமாகிறது

என் காலடி
மண்ணில் விளைந்த
நெல்
எங்கோ ஒரு
தூர தேசத்தவனுக்கு
ரத்தமாகிறது

இதில் என் மண் என்பது
எது

0

சுயநலத்தால்
அறுபட்ட நரம்புகளாய்
உலகில்
எல்லைக் கோடுகள்

தாய்மண் என்பது
போரெனத் திரிந்தால் 
அது மயானம்

தாய்
புதைக்கப்பட்டுவிடுகிறாள்

இரத்தம் தந்து 
வளர்த்தெடுத்த தாய்மண்
ரத்தம் கேட்கும்
பிசாசாகிவிடுகிறது

0

மனிதன் மிருகமானால்
அவன் பெயர் போர்வீரன்

0

அமைதி காக்கப்
போரிட வந்தவனுக்குப்
பெண் வெறி 
எங்கிருந்து வந்தது

நாடு காக்கப்
போரிடும் அவனுக்கு
சதைத்  தின்ன 
எப்படித் தோன்றிற்று

வாழும்போது
எவையெலாம் ஒழுக்கமோ
அவையே 
முதலில் கொல்லப்படுகின்றன
போரிடும்போது

0

அநீதிகளில்
விளையும் நீதியும்
அநீதிதான்

ஒவ்வொரு யுத்தத்திலும்
பெண்கள் ஏன்
பிழிந்தெடுக்கப் படுகிறார்கள்

0

போரை
வெறுப்போம்

போர் வீரனை
மறுப்போம்

0

மனிதனிலிருக்கும்
தெய்வத்தை
மனிதனில் இருக்கும்
மிருகம்
கொன்று தின்னும் காட்சிதான்
போர்வீரன்

மொழிவெறி மதவெறி
இனவெறி நிலவெறி
சாதிவெறி என்று
எதுவானாலும்
அது வெறிதான்

0

போர்
மறுப்போம்

போர் வீரனை
வெறுப்போம்

மனிதர்களாய்
வாழ்வோம்

No comments: