யாதும் ஊரே யாவரும் கேளிர்

எல்லாமும் எங்கள் ஊரே
எல்லோரும் எங்கள் உறவே

தீயதும் நல்லதும்
பிறர் தந்து வருவதில்லை

வறுந்துதலும் தணிதலும்கூட
மற்றவரால் வருவதில்லை

சாதல் புதுமையில்லை
வாழ்தல் இன்பமென்று
மகிழ்வதும் இல்லை
வெறுத்து வாழ்வே துன்பமென
விலகியதுமில்லை

மின்னலோடு வானம்
குளிர்மழை பொழிய
கல் மண் புரட்டி இறங்கிப்
பெருகியோடும் ஆற்றின்
திசையிலேயே செல்லும்
சிறு படகினைப் போலே
ஆருயிர் வாழ்வும் செல்லுமென்று
பகுத்தறிவோர் ஊட்டிய
அறிவினால் தெளிந்தோம்

ஆகையினாலேயே
பெரியோரை வியந்து
போற்றுவதுமில்லை
அதைவிடச்
சிறியோரை இகழ்ந்து
தூற்றுவதுமில்லை

*

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ”மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப் படூஉம்என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

கணியன் பூங்குன்றன்
(புறம்: 192)


No comments: