நகைச்சுவையாளர்கள்

தேகத்
திசுக்களுக்குப்
பட்டாம்பூச்சி சிறகு பூட்டி

ரத்த நாளச்
சிற்றோடைகளில்
வளர் ஆயுள் அலைகள் கூட்டி

நெஞ்சக்
கூட்டுக்குள் ஒட்டும்
ஒட்டடைகளைத் தட்டி

தளரும்
மூச்சுக் காற்றைத்
தாங்கிப் பிடித்து
உயிர் ஊட்டி

மொட்டுகளாகிப் பின் மலராமல்
ஒட்டுமொத்த அணுக்களிலும்
பட்டுப்பட்டென்று
பூக்களாகவே
வெடித்துக் குலுங்கும்
சிரிப்பென்னும்
நாட்டிய நந்தவனம்

பூத்தவிடத்திலேயே
முடங்கிவிடாமல்
புவி முழுதும் நிறைக்கும்
அற்புதம்

வீடுகளெங்கும்
மன விரிசல்கள்
நெருஞ்சி முட்களாய்
மண்டிக்கிடக்க

வீதிகளெங்கும் வேதனைகள்
கொடும் விசம்போல
கொட்டிக்கிடக்க

நகைச்சுவை ஒளிப்பூக்களை
நகக் காம்புகளிலும்
மத்தாப்பின் வண்ண வண்ண
மின்னல் தெறிக்க ஏற்றி

பகைக்கின்ற இதயங்களிலும்
தித்திப்புத் தேனூட்டி

நாட்களின் நரம்புகளிலும்
பொழுதுகளின் செல்களிலும்
குதித்தோடும்
சந்தோச நிறங்கள் ஏற்றி

தாயின்
உயிர்ப் பாலாய்
காதலின்
பொன்மடியாய்
உயிர்கள் அனைத்திற்கும்
வாழ்வளிக்கும்
நகைச்சுவையாளர்களே

உங்களுக்கெல்லாம்
என் உயிரின் முத்தங்களை
என்றென்றும்
உறுதி செய்கிறேன்

No comments: