விஞ்ஞானமே நவீன கடவுள்


நாம் இன்று வாழ்வது விஞ்ஞான யுகத்தில். இன்றெல்லாம் விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஒளி வேகத்தில் செல்கிறது என்றுரைத்தாலும் அது குறைவோ என்ற ஐயம் வருகிறது.

உண்மையில் விஞ்ஞானத்தால் நாம் பயன் அடைகிறோமா அல்லது அமைதியை இழந்து உழைப்பை இழந்து வீரத்தை இழந்து இயற்கையை இழந்து உறவுகளை இழந்து பண்பாட்டை இழந்து பாரம்பரியத்தை இழந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

விஞ்ஞானத்தால் இன்று மனிதன் உச்சத்தில் வளர்ந்திருக்கிறான் என்பது நிச்சயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மைதான். ஆனால், விஞ்ஞானம் வளர வளர மனிதன் மூளையை மட்டுமே பயன்படுத்தினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டானல்லவா?

முன்பு இந்தியாவில் ஒரு சாதியினர் மட்டும் தங்களை கல்வி, அறிவு போன்றவற்றுக்கே ஆகுமானவர்கள் என்று ஆக்கிக்கொண்டார்கள். அவர்கள் வேறு எந்த உடல் உழைபில் ஈடுபட மாட்டார்கள். தம் அறிவைக்கொண்டு வரும் வருமானத்தில் மட்டுமே உயிர் வாழ்வார்கள்.

ஆனால் இன்று எப்படி? எல்லோருமே அதே நிலைக்கு வந்துவிட்டார்கள் அல்லவா? இனி வருங்காலத்தில் எவருமே உடல் உழைப்பைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை வந்துவிட்டதல்லவா?

விஞ்ஞானத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டால் பட்டியலே மூழ்கிப்போய்விடும் என்பது அப்படியே உண்மை. அவற்றுள் மிக முக்கியமானதாக மனிதனின் ஆயுளைச் சொல்வேன் நான். மனிதனின் ஆயுளை விஞ்ஞானம்தான் உயர்த்தி இருக்கிறது.

கடவுளிடம் கேட்கும் அந்த வரத்தை அருளியிருப்பது விஞ்ஞானம்தான்!

பேய் பிசாசுகளையெல்லாம் விஞ்ஞானம் ஓட்டோ ஒட்டென்று ஓட்டிவிட்டது. அந்தக் கால மனிதர்களை அது படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கடவுளிடம் கேட்ட இன்னொரு பெரிய பாதுகாப்பு இது.

இதை அருளியதும் விஞ்ஞானம்தான்!

இப்படி மனிதன் கடவுளிடம் எதையெல்லாம் கேட்டானோ அதையெல்லாம் அருள்வது இன்று விஞ்ஞானம்தான்... ஆக விஞ்ஞானமே நவீன கடவுள் என்றுகூடச் சொல்லலாம்.

ஆனால் மனிதன் அந்தக் காலம்முதல் இந்தக்காலம் வரை கடவுளிடம் நிம்மதியைத்தானே முதலில் கேட்டான். அதை மட்டும் விஞ்ஞானத்தால் அருளவே முடியவில்ல்லையே.

அது விஞ்ஞானத்தின் மிகப்பெரும் தோல்வியல்லவா?

நிம்மதி மட்டும் மனிதனின் மனதில்தானே இருக்கிறது. அதை அவனிடமே எடுத்துக்கொடுக்க என்ன வேண்டும்? நல்ல மெய்ஞானம் வேண்டும். மனித நேயம் ஒன்றையே போற்றி வாழும் உண்மையான மெய்ஞானம் வேண்டும்.

நாம் உண்மையில் பயப்படுவது கடகடவென்று வளரும் விஞ்ஞானத்திற்கு அல்ல. அதைத் தவறாய்ப் பயன்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்குத்தான்.

கடவுளிடம் இருந்த பயம்போய் இப்போது மூளை வலுப்பெற்ற கெட்டழியும் மனிதர்களுக்குப் பயப்படுகிறோம்.

விஞ்ஞானம் கெட்டவர்களை கொடூரமான சாத்தான்களாய் ஆக்கிவிட்டிருக்கிறது!

ஆக விஞ்ஞானத்தோடு நமக்குத் தேவை ஜாதி மதம் இனம் கடவுள் என்ற எதனோடும் சார்பில்லாத மெய்ஞானம். இது விஞ்ஞான யுகத்தின் தேவைமட்டுமல்ல. விஞ்ஞானமே இல்லாத அந்தக் காலத் தேவையும்தான்.

எந்த வளர்ச்சி எப்படி வந்தாலும் மனிதநேய உயர்வே மனித வாழ்வைச் சரியாக்கும்... அதற்குத்தான் மதங்கள் இனங்கள் கடந்த உண்மையான மெய்ஞானம் வேண்டும்.

அதோடு இந்த விஞ்ஞான விளையாட்டுகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு வருடத்தில் ஒரு மூன்று மாதங்களாவது எந்த விஞ்ஞான வசதிகளுமே இல்லாத கற்கால பூமிக்குச் சென்று நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

விஞ்ஞானம் நம்மை வளர்க்கும். மெய்ஞானம் நம்மை எளிமைப்படுத்தும். நம் வாழ்க்கை வளமானதாய் அமையும்.

வள்ளல் தமிழ்த்தாயே

கணினித் திரை நிறைத்து
கற்கண்டாய்க் குவிந்தாயே
இணைய வலை கிழித்துப்
பொற்பாதம் சுழன்றாயே

அழியும் மொழிகளுக்குள்
தமிழிருக்கும் என்றாரே
ஒளியாய் ஒளிப்பிழப்பாய்
உச்சத்தை வென்றாயே

துள்ளும் நடைபோட்டுத்
தொழில் நுட்பம் தாண்டுகின்றாய்
மெல்லச் சாவதினிச்
சொன்னவனின் மொழியென்றாய்

உள்ளம் உருகியோட
உனதுமடி தலைவைத்தேன்
வள்ளல் தமிழ்த்தாயே
வளரமுதம் ஊட்டுமம்மா

தேவதையிடம் பத்து வரங்கள் - தொடர்பதிவு


இன்று தேவதை உங்கள்முன் தோன்றி பத்து வரங்கள் தருவதாக் கூறினால் என்ன வரங்கள் கேட்பீர்கள். இப்படி ஒரு தொடர்பதிவில் கலந்துகொள்ள எனக்கு ஓர் அழைப்பு வந்தது.

என்னை அழைத்த கவிநட்புக்கு முதலில் என் நன்றி. தொடர்பதிவுகள் நட்பின் அடையாளங்களுள் ஒன்றுதான். ஆகவே அதை வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

ஒருவரின் ஆசைகளைக் கேட்டறிவது இன்னொருவருக்குச் சுவாரசியமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும் அந்த ஒருவர் தனக்குப் பிடித்தமானவர் என்றால் சொல்லவே வேண்டாம். அதைக் கேட்பதே இவரின் முதல் ஆசையாக இருக்கும்.

புத்தரிடம் பத்து ஆசைகள் என்னவென்று கேட்டால் அவர் தேவதையைப் பார்த்து, உயிர்களெல்லாம் ஆசைகளை அழித்து வாழவேண்டும் என்ற தன் ஆசையைப் பத்துமுறை சொல்வார். அதையே அவர் சித்தார்த்தனாக இருந்தபோது கேட்டிருந்தால் என்ன சொல்லி இருப்பார்? ஆசைகள் நிமிடங்கள் தோறும் நிறம் மாறக்கூடியவையே.

இன்றைய ஆசைகள் நாளைக்கு ஒன்றுமற்றவையாக ஆகலாம். நாளை நாம் கொள்ளப் போகும் ஆசை இன்று நம் விருப்பத்திலேயே இல்லாததாக இருக்கலாம். மனிதன் பிறந்த நாள்முதல் இறக்கும் நாள் வரை ஒரே ஆசையைக் கொண்டிருப்பதில்லை.

நம்மிடம் நம் உள் மனம் சொல்லும் ரகசிய ஆசைகள்தான் நம் கனவுகள். சில நேரம் கனவுகள் பயங்கரமானதாக இருக்கும். ஒரு சிங்கம் நம்மைத் துரத்த நாம் எதுவும் செய்யமுடியாமல் செயலற்று நிற்பதுபோல் கொடிய கனவு வரும். அது வேறொன்றுமில்லை. நம் ஆசைகள் நிறைவேறாதோ என்ற நம் உள் மனதின் பயம்தான் அது.

ஆடை இல்லாதவன் அரைமனிதன் என்பார்கள். ஆசை இல்லாதவன் மனிதனே இல்லை என்று சொல்லலாம். ஆசைகளே ஒருவனின் ரசனைகள். ரசனைகள் இல்லாவிட்டால் அவன் எதையுமே ரசிக்க முடியாது. எதையுமே ரசிக்காதவன் ஒரு ஜடம். அவனுக்கு வாழ்க்கையே இல்லை.

வாழ்வதற்காகத்தான் நாம் மண்ணில் பிறந்திருக்கிறோம். பின் ஆசையை ஒழி என்றால் என்ன பொருள். பேராசைப் படாதே என்றுதான் பொருள். கிட்டாதாயின் வெட்டென மற என்றும் பொருள். அது உன்னையும் பிறரையும் வாழவைக்கும் என்று பொருள்.

ஆதலாம் உயிர்களே நாம் ஆசைப்படுவோம். என் கவிதைமனம் சொல்லும் என் ஆசைகளை நான் இங்கே பட்டியல் இடப்போகிறேன். அவற்றை எந்த தேவதையும் வந்து நிறைவேற்றித் தரமாட்டாள்.
ஆனால் அவற்றை நானே நிறைவேற்றுவேன். என் எண்ணங்கள் நிறைவேற்றித் தரும். என் எழுத்துக்கள் நிறைவேற்றித்தரும்.

என்னை நேசிப்போர் என் ஆசைகளையும் நேசிப்பர். அவர்கள் நேசிக்கும் ஆசைகளாய் என் ஆசைகள் ஆகும்போது, நிறைவேறுவது நிக்ழக்கூடியதுதானே. ஊர் கூடித் தேரிழுத்தால் தேருக்கு வேறு வழியுண்டா?

இதோ என் ஆசைகள்:

1. எல்லைக் கோடுகள் அழிந்திடணும். அதையென் சின்னக் காலால் அழித்திடணும். உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்.

2. காற்றில் அலையும் பறவைகளாய் மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும் சிறுமை கட்டுகள் அறுந்து விழவேண்டும்.

3. அழியும் அகிலம் தொடவேண்டும். எங்கும் அன்புப் பயிர்கள் நடவேண்டும். வஞ்சம் அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்.

4. காலை எழுந்து பறந்திடணும். பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும். அந்தி கவிதை ஒன்று எழுதிடணும்.

5. காணும் உயிரைத் தழுவிடணும். அன்புக் கவியால் கைகள் குலுக்கிடணும். உள்ளக் கனவைக் கேட்டு களித்திடணும்.

6. மதங்கள் யாவும் இணைந்திடணும். செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும். தெய்வம் மனிதம் கண்டு தொழுதிடணும்

7. தமிழே பேரண்டத்தின் மொழியாக ஆக வேண்டும். ஒவ்வோர் உயிரும் இதய வாசம் சொட்டும் கவிதைகள் எழுதவேண்டும்.

8. புத்தம் புதிதாகப் பிறக்க வேண்டும் செத்த விலங்கோடும் அன்பு வேண்டும் யுத்தம் இல்லாத பூமி வேண்டும்

9. ஏக்கமும் துக்கமும் மனதின் இடுக்குகளிலிருந்தும் உடைந்து தூள் தூள் ஆகவேண்டும்

10. வரம் தரும் தேவதையே நீ என் தேவதையை என்னிடம் தரும் தேவதையாக வேண்டும்


என்று நான் எழுதினால் “வந்துட்டாய்ங்கய்யா வந்துட்டாய்ங்க” என்று வடிவேலு வந்துவிடுவார் என்பதால் என் தத்துப்பித்துப் பத்து ஆசைகள் கீழே.

தமிழர்கள் இரண்டு விசயங்களைத் தமிழ்த் திரைப்படங்களில் விரும்புவார்கள். ஒன்று கதையின் பிரதான பாத்திரத்தின் முக்கியமான கதைக் காட்சிகள் இன்னொன்று இடையிடையே வந்து லூட்டியடிக்கும் வடிவேலுத்தனங்கள். ஆகவே ஆசைகளும் இருவேறு பட்டியலில் பிரியவே செய்யும் என்பதால் இதோ என் இரண்டாம் பத்து ஆசைகள்:

1. எப்படியாவது ஒரு பத்து ஆசைகளை யோசிக்க வேண்டும்

2. யோசித்த பத்து ஆசைகளையும் மறக்காமல் எழுதிவிடவேண்டும்

3. எழுதிய பத்தும் வாசிப்பவர்களுக்குச் சுவையாக இருக்க வேண்டும்

4. எழுதி முடித்ததும் ஒரு நாலுபேரைக் கண்டுபிடிக்க வேண்டும்

5. அந்த நாலுபேரும் பத்துப் பத்து ஆசைகள் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்

6. அவர்களின் பத்துத்பத்து ஆசைகளையும் எழுத அவர்கள் சம்மதிக்க வேண்டும்

7. சம்மதித்தவர்கள் விடு ஜூட் சொல்லிவிடாமல் அக்கறையாய் அமர்ந்து எழுதவேண்டும்

8. எழுதி முடித்ததும் அவர்களும் நாலு நாலு பேர்களைக் கண்டு பிடிக்க வேண்டும்

9. கண்டுபிடித்தவர்கள் ஏற்கனவே மாட்டிக்கொண்டவர்களாய் இருக்கக்கூடாது

10. வெட்டியாய் ஆசைகளைக் கேட்டுவிட்டு ஒன்றுமே செய்யாத தேவதையே உன்னை ராஜபக்சேவிடம் பிடித்துக் கொடுத்துவிடவேண்டும்.

அடுத்தது நான் அழைக்கும் நால்வர்:

இந்த என் இடுகையை வாசித்துக் கருத்துச் சொல்லும் பதிவர் இதுவரை இந்தத் தொடர் பதிவில் சிக்காதவராய் இருந்தால் முதலில் கருத்துச் சொல்லும் நால்வர் மட்டும் என் அழைப்பினை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிலுவையில் அறைபட்ட இதயம்

சிலுவையில்
அறைபட்ட இதயம்
என் சிறகுகள்
தீபட்டுச் சிதையும்

அழுகையில்
கரைந்தே அழியும்
என் ஆயுளும்
முடிந்தால் தெளியும்

கழுவினில் ஏறிய உயிரிது
தினம் கனவினிலும்
எரிகிற பயிரிது

விழுவதும் எழுவதும்
இயற்கை
என் வீழ்ச்சிக்கு இல்லை
இறக்கை

அணிந்துரை - எல்லோருக்கும் சேவியரை பிடித்திருக்கிறது


இலையுதிர்கால இளமாலைப் பொழுதுகளில், மெல்லிய காற்றின் மிருதுவான தொடுதல்களில், இருப்பைத் துறந்து மிக இயல்பாய் நிலத்தை முத்தமிட வரும் வண்ண வண்ண வசீகர இலைகளாய் சேவியர் கவிதைகள்.

ஒவ்வோர் இலையிலும் அனுபவ நரம்புகளின் அழகிய ஊர்வலம், மனிதர்களை நேசிக்கும் உயர்ந்த உணர்வுகளின் கோட்டோ வியங்களாய்.

எல்லோருக்கும் மழை பிடிப்பதில்லை என்று கவிதைக் குடை விரிக்கும் சேவியரை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.

"தவற விட்ட பத்துகாசு போலத்தான்
என் கவிதைகளும்"

என்று தன் கவிதைகளுக்கு கவிதையாலேயே ஒரு முன்னுரை வழங்குகிறார் சேவியர் ஓர் கவிதையில். பிறகு...

"தேவைப்படும் பாத்திரம் தேடி வருமென்றே
காத்திருக்கின்றன என் கவிதைகள்"

என்று அழகாக ஓர் அணிந்துரையையும் அவரே வழங்கிவிடுகிறார். இனி நான் என்ன எழுதுவது?

ஏராளமான வெள்ளிப் பாத்திரங்களில் தாராளமாகவே விழும் பொற்காசுகளாய் மின்னுகின்றன சேவியரின் பல கவிதைகள் என்பதை என் பங்குக்கு நானும் சொல்லத்தானே வேண்டும். சொல்லுகிறேன்... சொல்லுகிறேன்...

"இலட்சியமில்லாமலேயே
வாய்த்திருக்கிறது கவிதை"

என்கிறார் இன்னொரு கவிதையில். அப்படி இலட்சியமில்லாமலேயே வாய்க்கப் பெற்ற இவரின் கவிதைகள், மனிதநேயம் என்ற முதன்மை இலட்சியத்தை நோக்கி அக்கறை நடைபோடுவதை அனேகமாக அனைத்துக் கவிதைகளிலுமே காணலாம்.

"யார் வீட்டுக் கஷ்டத்தையோ கைப்பிடி அளவு
குறைத்திருக்கிறேன் என்றே அமைதி கொள்ளும் மனசு"

என்று தன் பொருளை இழந்தபோது பிறர் நலனுக்காய் தன் ஏமாற்றத்தையும் கருணையோடு ரசிக்கும் கவிஞர்,

"வழக்கம் போலவே இந்த முறையும்
எதிர்பார்த்து ஏமாந்தேன். கவிதை பேசும் சகபயணியை"

என்று கவிதைகளில் மூழ்காத கட்டாந்தரை மனங்களைக் கண்டுமட்டும் ஏகமாய் ஏமாறுகிறார். எது கவிஞனை உண்மையாய் ஏமாற்றுகிறது என்பதை அறியும்போதே ஆனந்த வெள்ளம் வழிகின்றது இதய ஓடைகளில்.

"எப்போதும் தோன்றியதே இல்லை
அவருக்கும் ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப"

என்று தபால்காரரைப் பார்த்து ஒரு கவிதையில் சொல்வதைப்போல் தொகுப்பெங்கும் பல பொன்மனப் பார்வைகள்...

"முக்கியமற்றதாய் தோன்றும் நிகழ்வுகளின் கூட்டுத் தொகையில்
வாங்க முடிகிறது முக்கியமான சில இலட்சியங்களை"

என்பது போன்ற நறுக்கென்ற வாழ்க்கைத் தத்துவங்கள்

"காதலுக்காக நழுவ விட்ட கணங்களை இறுகப் பிடித்திருந்தால்
ஒருவேளை முற்றத்தில் பூத்திருக்கக் கூடும் சில காதல்கள்"

என்று காதலைச் சொல்லும்போதும்,

"மூன்று வார மழையில் தெருவோரப் பிள்ளையார்
ஆல மர அழுக்குகளோடு கவனிப்பாரற்று"

என்று பக்தியைச் சொல்லும்போதும், கச்சிதமாய்த் தேன் எச்சமிட்டிருக்கின்றன இவரின் கவிதைகள்.

"அவன் கந்தலாடைக் கன்னிக்கு
பத்து பைசா பிச்சையிடும்போது கவனித்தேன்.
அவன் பார்வையை"

போன்ற தேள் தீண்டல்கள்...

"கிடைக்காத ஒரு கவளச் சோறு
உயிரைத் தின்று சடலம் துப்பும் போது
அரசு விளம்பரம் சிரிக்கும்.
கருத்தடைச் சாதனம் இலவசம்"

போன்ற சுளீர் சொடுக்குகள்...

"கழுதைக்கு முன்னால் குச்சியில் கட்டி நீட்டப்படும்
உணவு பற்றி பள்ளிக் கூட வயதில் எதுவும் புரியவில்லை.
தேர்தல்கள் தான் தீர்த்து வைக்கின்றன சந்தேகங்களை"

போன்ற அரசியல் சிதறு தேங்காய்கள்...

"உடைந்து வழியும் நிலவை
கிழியாத இலையில் ஏந்திப் பிடித்திருக்கும் பனைமரம்"

"நீ பற்றவைக்கும் பார்வைகளை என் மீது உரசிப் போடாமல்
புறக்கணிக்கும் போதெல்லாம் எரிந்து போகிறேன்".

"நடுக்கூடத்தில் நாற்காலியில்
குட்டி மரணம் போடுபவனை"

போன்ற ரசனை மேயும் நயங்கள்...

"நீளமான கருப்புக் கூந்தலோடு யாரேனும் நடந்தால்
சிரிக்கக் கூடும் எதிர்கால வீதிகள்"

போன்ற வளரும் நவீனத்தில் அழியும் அழகை எடுத்து வீசும் கவிதை மூச்சுகள்...

"முன்பெல்லாம் பத்து மைல் என்றாலே
பதட்டப் படாமல் நடந்து சென்றனராம்.
இப்போது அது இல்லை, அதனால் தானோ என்னவோ,
ஆயுளிலும் தரப்படுகிறது ஐம்பது சதம் தள்ளுபடி".

மூளையை மட்டுமே நடக்கவிடும் நவீனயுகத்தில் ஆயுள் கேள்விக்குறிதான். கிழியும் உடலை மருத்துவத்தால் தைத்துத் தைத்து கந்தலாய் ஒரு வாழ்க்கை என்பதை இந்தக் கவிதை சொல்லாமல் சொல்வது எத்தனை உச்சம்.

பல கவிதைகளில் கடைசி வரிகளில் ஒளித்துவைத்திருக்கிறார் கன்னிவெடிகளை. அவற்றை நம் கண்கள் மிதித்ததும் வெடித்துச் சிதறி வாசிப்பு வெறுமைகளைக் கொன்றுபோட்டுவிட்டு, எண்ணங்களில் மத்தாப்பு கொளுத்திவிடுகின்றன.

"நூறு ரூபாய்க்குக் கேட்டிருக்கலாமோ ?"

ஏமாற்று உலகில் மன நிறைவென்பது கிடைக்காத ஒன்று என்பதை இந்தக் கேள்வி ஒரு திடமான பதிலாகவல்லவா தருகிறது.

"ஒரு முள்ளுக்காய் எப்படி வெறுக்க முடிந்தது
உன்னால் அத்தனை மலர்களையும்?"

அறுபட்ட இதயத்தின் வேதனையை எப்படி அருமையாய்ச் சொல்கிறார் பார்த்தீர்களா?

தனக்கு, தாரம் வரும் 'கல்யாணக் கணக்குகள்' கவிதையில் பொருளாதார விளையாட்டு, மைதானம் காண்கிறது. 'அனுமதிக்கப் படாதவைகள்' கவிதை யோசித்துப் பார்க்காத நம் நடைமுறை தவறுகளில் நெருப்புக்குச்சி உரசுகிறது. காதலை எப்படியெப்படியெல்லாமோ சொல்லிவிட்டார்கள் ஓர் அறுந்த செருப்பாகப் பார்க்கும் 'காதல்' என்ற கவிதை இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளுள் வித்தியாசமானது.

"இப்போதெல்லாம் வருவதில்லை ஆத்தா.
மகாலட்சுமியின் மகளுக்கு
அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கிறதாம்."

போன்ற குட்டிக்கவிதைகளில் சகட்டுமேனிக்குக் கொட்டிவைத்திருக்கிறார் அழுத்தமான உணர்வு வேட்டுகளை.

"என் மனைவிக்கு ரசனையில்லையென்று நான் சொல்லும்போது,
என் புருஷனுக்கு பொறுப்பே இல்லை என்பாள் மனைவி."

இந்தக் கவிதை எதைச் சொல்கிறது? பார்க்கும் வேறு வேறு கோணங்களையா? இருவேறு இதயங்களின் திருமணக் கோளாறுகளையா? எல்லோருக்கும் பார்வைகள் உண்டு என்பதைதா? ஒன்றை வைத்துக்கொண்டு இன்னொன்றை கோட்டைவிட்டுவிடாதே என்ற தத்துவத்தையா? குறைகூறும்முன் உன் குறையைக்கொஞ்சம் பார் என்பதையா? சகிப்புத்தன்மையே வாழ்க்கை என்பதையா? இன்னும் என்னென்ன விசயங்கள் இந்தப் பொடிக் கவிதையில் மூடிக்கிடக்கின்றன?

அதுதான் கவிதை. அப்படித்தான் கவிதை இருக்கவேண்டும். அப்படித்தான் கவிதைகள் நம் செழுமையான மரபிலும் வளமாக விளைந்திருக்கின்றன. கவிஞன் காலத்துக்கு ஏற்ப கவிதையின் நடையை மாற்றுகிறான் ஆனால் கவிதைகள் என்னவோ அப்படியே உயரத்தில்தான் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கின்றன. யாரும் கவிதையை கீழே விழச் செய்துவிடமுடியாது. விழுவதும் விழப்போவதும் எப்போதும் கவிதை என்ற பெயரில் குவித்துப் போடும் குப்பைகளும் குவிக்கும் 'கண்டிருந்த' வான்கோழிகளும்தான்.

"ரசனையை விலை நிர்ணயிப்பதில்லை என்பதை
மழலைதான் முதலில் கண்டு கொள்கிறது."

இப்படி எளிமை எளிமை எளிமையிலும் எளிமை. அவற்றுள் இனிமை இனிமை இனிமையிலும் இனிமை. இவைதாம் சேவியரின் கவிதைகள். வாசகனைத் தன்னோடு கட்டியணைத்து கவிதை காட்டுவதில் எப்போதுமே வெற்றிகாண்கிறார் சேவியர்.

"சிப்பி பிடிக்காது என்பதற்காய்
முத்தை நிராகரிக்கும் உன் முட்டாள் தனம்"

உயர்வான எழுத்துலகிலும் இப்படியான துர்நாற்ற அவலங்கள் தூய்மைப் படுத்தப்பட வேண்டும். கவிஞன் தன் மனச்சிப்பிக்குள் வந்துவிழும் உணர்வுகளை வளர்த்தெடுத்து முத்துக்களாய் உருவாக்குவதும், அவை வக்கற்ற வெற்று ஓடுகளின் வயிற்றெரிச்சல்களை வாரிக்கொள்வதும் வாடிக்கைதான். அவற்றை ஓர் எதுகை மோனையால் தூக்கி ஓர் ஓரமாய் எறிந்துவிட்டு நடக்கத் தெரிந்தவன்தான் நல்ல கவிஞன்.

சேவியர், வெற்றி நடையையே தன் நடையாக்கிக்கொண்டவர்.

இனிப்பாக இதயம் பேசும் சேவியர் கவிதைகள் மேலும் இறுக்கமாக விளைந்து என்றென்றும் நிலைத்து வாழ என் வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி
ஜனவரி 2005

குறள் 0005


அருளும் இறைவனின்
அனைத்துப் பெருமைகளையும்
அறிந்தே வாழ்வோரிடம்
அளவிலாத் துயர் தரும்
அறியாமைச் செயல்கள்
எட்டியே நிற்கும்
எப்போதும்



இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 5

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

* பிப் 19, 2003

குறள் 0384 அறனிழுக்கா தல்லவை நீக்கி


கற்றறிந்த அறவழி காப்பதில்
கணப்பொழுதும் தவறிழைத்து விடாமலும்
வன்முறை தீவிரவாதம் போன்ற
அறமற்ற அநீதிகள் ஏதும்
தன் ஆட்சியில் நிகழாமலும்
வீரம் மிகக்கொண்டும்
மானம் பெரிதெனப் போற்றியும்
நாடாள்பவனே
நல்லதோர் அரசனாவான்






அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 384

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

குறள் 0004 வேண்டுதல் வேண்டாமை இலான்அடி


விருப்பற்றோனும்
துளியும் வெறுப்பற்றோனும்
ஆகிய நிகரற்றோன் திருவடிகளை
தினம் பற்றும் மனங்களை
ஒருக்கிலும் பற்றாது துயரம்



வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 4

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

* பிப் 19, 2003

குறள் 0383 தூங்காமை கல்வி துணிவுடைமை


காரியம் ஆற்றுவதில்
கணப்பொழுதும் கண்ணயராமை
யாவும் பகுத்தறியும் உயர்தரக் கல்வி
எந்நாளும் எதையும் தாங்கும் இதயம்
இம்மூன்றும்
மண்ணாளும் மன்னரிடம்
நீங்காமல் நிறைந்திருக்கும்
சிறப்புத் தகுதிகளாம்






தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 383

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

நகமும் நாட்டிம் ஆடிடும் நாட்டியப் பேரொளி கண்டேன்


அருங்கலை மாமயில் நடிகை பத்மினியோடு ஒரு சந்திப்பு
ஜனவரி 11, 2003 டொராண்டோ , கனடா.


ஒரு நேர்காணலுக்காக நான் அவரிடம் சென்றிருக்கவில்லை. நேர்காணலின் எந்த நுணுக்கமும் எனக்குத் தெரியாது. துண்டுக் காகிதமோ எப்போதும் ஞாபகமாய் எடுத்துச் செல்லும் என் பேனாவோ அப்போது என்னிடம் இருக்கவில்லை. ஆனால், அவரைப் பார்த்தபோது வந்த பரவசத்தால் என் மனப் புல்வெளிகளில் மிக இயல்பாய்ப் பூத்த சின்னச் சின்ன மூக்குத்தி மலர்க் கேள்விகளை ஆர்வம் மணக்க மணக்கக் கேட்டுவைத்தேன். அவரிடமிருந்து வந்த பதில்களும் இயல்பு ஒளிரும் வெள்ளை ரோஜாக்களாய்ப் பூத்துப் பூத்து மனம் நிறைத்தன.

வார இறுதியின் முதல் நாள் எனக்கு. சனிக்கிழமையின் நெட்டிமுறிக்கும் பிற்பொழுது. கனடா உதயன் ஆசிரியருக்கு ஒரு வணக்கம் சொல்ல அவர் அலுவலகத்தை நான் எட்டிப்பார்த்தபோது, "நல்ல சமயத்தில் வந்தீர்கள் புகாரி, நாட்டியப் பேரொளி பத்மினியைச் சந்திக்கப் போகிறேன். நீங்களும் வாருங்களேன், பேசிக்கொண்டே போவோம்" என்று நட்போடு அழைத்தார். அதுவரை அந்தப் பேரொளியை நான் நேரில் தரிசித்ததில்லை என்பதாலும் அவர்மீது கொண்ட அபிமானத்தாலும் மனம் பூம்பூம் மாடாய்ச் சலங்கைகட்டித் தலையாட்ட உடனே ம்ம்ம்ம் சொன்னேன்

கண்கள் கொண்டாட நான் அவரைச் சந்தித்ததும், காதுகள் கொண்டாட நான் அவருடன் உரையாடியதும், ஆச்சரியங்கள் கொண்டாட நான் அவரை நேரில் அறிந்ததும், மனம் திண்டாட நான் அவரிடமிருந்து விடைபெற்றதும் தித்திப்பு நிகழ்வுகள்.

திரும்பும் வழியில், "கவிதைகளே எழுதுகிறீர்களே கவிஞரே, இதையே ஒரு நேர்காணலாய் நினைத்துக் கொண்டு ஏன் ஒரு கட்டுரை எழுதக்கூடாது என்று தூண்டில் வீசினார் உதயன் ஆசிரியர். அவரிடம் மறுத்துப் பழக்கமில்லாத நான், சரி என்று ஒரு கெண்டை மீனாய்க் கணித்திரைக் கரைகளில் எழுத்துக்கள் சிதறத் துள்ளினேன்.

உரையாடியபோது எந்தக் குறிப்பும் எடுத்துக் கொள்ளாததால், கணினி மொழிகள் திருடிக்கொண்ட என் ஞாபகங்களுடன் கயிறிழுக்கும் போட்டியில் இறங்கவேண்டியதாயிற்று.

அக்கறையாய்த் தயார் செய்த நறுக்குக் கேள்விகளோடு சென்றிருந்தால் அசத்தியிருக்கலாமே என்ற நெருடல், நிலவுப் பாதையில் மேகம் குறுக்கிடுவதைப் போல கறுப்பாய் நீண்டாலும், இதுதானே இயல்பு இதுதானே வித்தியாசம் இதுதானே அழகு என்று மனம் சமாதானம் கொண்டது.

ஜனவரி 17, 2003 உதயன் வார இதழில் வெளியான என் முதல் திடீர்ச் சந்திப்பு. சுருக்கமாக இருக்கட்டுமே என்று நான் சில தகவல்களை மட்டுமே தந்துவிட்டு பெரும்பாலான கேள்வி பதில்களை அவசியமற்றவை என்று நீக்கிவிட்டேன்.

நகமும் நாட்டியம் ஆடிடும்
நாட்டியப் பேரொளி கண்டேன்
அகமும் அவிழ்ந்தே பறந்திட
அருங்கலை மாமயில் கண்டேன்

முகமும் முற்றிய சொல்லும்
முழுதாய்ப் பொழிந்தது பரதம்
சிகரம் தாண்டிய நர்த்தகி
சிந்தை சிதைத்த பத்மினி

திரைக்குள் விருந்தாய் வந்தவர்
தேனும் பாலும் தந்தவர்
நரைக்குள் மூழ்கிய போதிலும்
நாட்டிய ராணியாய் வாழ்பவர்

கரைகள் இல்லாக் கலைகளில்
கலைமா மணியும் வென்றவர்
வரையா ஓவியம் போலவே
வாழ்கிறார் வாழ்வார் என்றுமே


அது ஓர் இனிய பனி மாலைப் பொழுது. வீதிகளெங்கும் இயற்கை வெண்பட்டுக் கம்பளம் விரித்திருந்தது. வீடுகளோ வெண்ணையில் நனைந்த பன்னீர்ச் சொம்புகளாய்ப் பேரழகினுள் மூழ்கி மிளிர்ந்தன.

உதயன் ஆசிரியர் லோகன் அவர்களோடு, உதயன் கனடா தமிழ் வார ஏட்டின் சார்பாக நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களைச் சந்திக்கச் சென்றேன். முதல் சந்திப்பு.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் இல்லத்தில் அந்த நாட்டியக் கால்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன.

நான் பிறந்தபோது இவர் சலங்கை ஒலி என் அழுகையை நிறுத்தியிருக்கிறது. நான் வளர்ந்த போது இவர் நடிப்பும் நாட்டியமும் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன. ஆயினும், நான் இன்றுதான் முதன் முதலில் அருங்கலை மாமயில் பத்மினியைச் சந்திக்கிறேன். இதுவரை சந்திக்காத துரதிர்ஷ்டத்தை, இப்போது சந்தித்த அதிர்ஷ்டம் விழுங்கி விருந்தாக்கிக்கொண்டது.

நாட்டிய ராணி பத்மினியைப் பற்றி நான் எந்தத் தமிழருக்கும் அறிமுகம் செய்யத் தேவையில்லை என்றாலும், பதின்வயதினரும் அறியும் வண்ணம் ஓரிரு வார்த்தைகள் சொல்வதே சரி என்று படுகிறது.

எம்.ஜி.ஆர். - சிவாஜி காலத்தில், தன் நாட்டியத்தாலும் அழகிய நடிப்பாலும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த மிகச் சில கதாநாயகிகளுள் இவரும் ஒருவர். சிவாஜி கணேசனோடு மட்டும் 60 படங்களுக்கு மேல் நடித்து, ஒப்பற்ற இணையாய் உலா வந்தவர். எம். ஜி. ஆரோடும், ஜெமினி கணேசனோடும் பல படங்கள் அற்புதமாய்ச் செய்தவர். 1952 தொடங்கி இன்றுவரை, ஐந்து மொழிகளில் மொத்தம் 250 படங்களுக்கும் மேல் நடித்தவர்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் காதல் இளவரசன் கமலஹாசனை ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் அவரின் கனவு என்ன என்று கேட்டபோது, 'அந்தக் கால பத்மினியோடு ஒரே ஒரு பாடல் காட்சியிலாவது ஜோடியாக நடிக்கவேண்டும்' என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன். அத்தனைக் கவர்ச்சியான தோற்றமும் நாட்டியமும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்று கனவுக்கன்னியாய்த் திகழ்ந்தவர் நடிகை பத்மினி.

'வணக்கம்' என்று அன்போடு வரவேற்ற பத்மினியைக் காண எங்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. முதுமை தன் அடையாளத்தை அவரிடம் பதித்துவிட்டிருந்தபோதும், கணீர் குரலும், அயராத கையசைவுகளும், கூர்ந்த பார்வையும், அத்தனைச் சுருக்கங்களையும் மீறிக்கொண்டு நின்ற பேரழகும், எனக்குள் ஒரு கேள்வியைக் கேட்கத்தூண்டியது.

'உங்கள் வயதென்ன?'

'வயதை யாரும் சொல்லமாட்டார்கள். ஆனால் நான் அப்படியல்ல. என் வயதைச் சொல்லுவேன். அதற்கு முன் நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். எனக்கு என்ன வயதிருக்கும்?'

'பதினாறு' என்றேன் நான் பரவசப் படபடப்போடு.

'எழுபது' என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

அவர் தேகத்தில்தான் முதுமை தெரிகிறதேயொழிய, அவர் வார்த்தைகளில், திடீர் என்று பாவத்தோடு பாடும் பாட்டில், மின்னல் வேகத்தில் வீசும் கையசைவில், நடையில், ஞாபக சக்தியில் வயது பதினாறாகத்தான் நிலைத்து நிற்கிறது.

இவரைப் பலரும் நினைவு கூர்வது 'தில்லானா மோகனாம்பாள்' என்றுதான். அது ஒரு காலத்தால் அழியாத காவியம். சிவாஜியும் இவரும் அதில் நடித்திருக்க மாட்டார்கள். அப்படியே வாழ்ந்திருப்பார்கள்.

தன் நான்காம் வயதிலிருந்தே கேரள நாட்டின் கதகளி நடனத்தைப் பயின்றவர். ஒன்பதாம் வயதில் பரத நாட்டியம் கற்றார். பத்தாம் வயதில் அரங்கேற்றமே கண்டுவிட்டார்.

1974ம் வருடம் முதல், அமெரிக்காவில்தான் வாழ்கிறார். இதுவரை 82 மாணவிகளுக்கு அரங்கேற்றமும், நாற்பதாயிரம் மேடை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தியிருப்பதாகக் கூறினார்.

கதகளி, குச்சுபிடி, கதக், போன்ற இந்தியாவின் பல்வகை மாகாணங்களின் நடனங்களிலெல்லாம் பரதமே மிகவும் பழமையானது என்று பெருமையோடு கூறினார். தான் கற்றதும் கையாள்வதும் தஞ்சாவூர் பாணி என்றும் கூறினார்.இப்போது பெருமிதம் என் முகத்திலும்.
'அன்று முதல் இன்றுவரை உங்களுக்கு எத்தனையோ பாராட்டுகள் கிடைத்திருக்கும், அவை அத்தனையிலும் மிக உயர்வானதாய் தாங்கள் எதனைக் கருதுகிறீர்கள்' என் ஆர்வம் இப்படி ஒரு கேள்வியாய்த் திரிந்தது.

'சிவாஜி கணேசன் அவர்களின் பாராட்டுகள். ஒவ்வொரு படத்திற்கும் பாராட்டுவார். ஒவ்வொரு அசைவுக்கும் பாராட்டுவார்.' கண்கள் விரிய, ஆனந்தப் புன்னகையோடும், அவர் இன்று இல்லையே என்ற வருத்தத்தோடும், அந்த நடிப்புச் சக்கரவர்த்தியை நினைவுகூர்ந்து அவர் கூறும் போது எங்களுக்கும் புல்லரித்தது.

'சிவாஜி, நல்ல வேட்டைக்காரர். ஒரு நாள் திரைக்காட்சி எடுத்துக் கொண்டிருப்பதற்கு இடையில் கிடைத்த நேரத்தில், ஒரு முயலை வேட்டையாடி பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்' என்றவர், சிவாஜியோடு தனக்கு மிகவும் நல்ல நட்பு இருந்தது என்று பெருமையோடு சொன்னார். அதையும் தாண்டி புனிதமானது இருந்ததாய் அவர் விழிகள் மொழிந்தன.

'பணம்' என்ற படம்தான் சிவாஜி கணேசனோடு அவர் நடித்த முதல் படமாம். 1950ல் வெளிவந்த 'மணமகள்' தான் இவர் நடித்த முதல் படமாம்.

எம்.ஜி.ஆர். அவர்களின் தர்ம குணத்தையும், கம்பீரமான தோற்றத்தையும், தங்க நிறத்தையும் புகழ்ந்தார்.

'ஈழத் தமிழர்களுக்கு, நாட்டியத்தில் நல்ல ஈடுபாடு இருக்கிறது. ஆர்வத்தோடு கற்றுக் கொள்கிறார்கள். பல முறை நான் இங்கே நாட்டிய அரங்கேற்றத்திற்கு வந்திருக்கிறேன். இனியும் வருவேன்' என்று கணகள் மலர்ந்தார்.

நாட்டியப் பேரொளி, அருங்கலை மாமயில், நாட்டிய ராணி, கலைமாமணி (இரண்டு முறை) என்று இவர் பெற்ற பட்டங்களும் பாராட்டுக்களும் பெரிதாகவே நீளும். இவர் ஞாபக சக்தியைப் பற்றி கூறியே தீரவேண்டும். ஒரு விசயமும் விடாமல், தன் எழுபதாவது வயதிலும் பட்டுப்பட்டென்று ஒவ்வொன்றாய் எடுத்து விடுகிறார்.

வைஜெயந்தி மாலாவோடு 'சாதுர்யம் பேசாதடி... என் சலங்கைக்குப் பதில் சொல்லடி!' என்று போட்டி போட்டுக்கொண்டு நடனமாடும் பாடல்தான் சினிமா உலகத்திலேயே மிக நீளமான பாடல் என்று கூறி அதன் வெற்றியை நினைவுகூர்ந்தார். இவர் ஆண்வேடமிட்டு மஞ்சுளாவை மனைவியாக்கி நடித்திருக்கிறாராம், ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கிறாராம்.

'ப என்னும் முதல் எழுத்து பாவம், ர என்னும் இரண்டாம் எழுத்து ராகம். த என்னும் மூன்றாம் எழுத்து தாளம்' என்று துவங்கி பரதம் பற்றி பல விசயங்களையும் பகிர்ந்து மகிழ்ந்தார்.

'இந்த எழுபதாம் வயதிலும், இளமைத் துடுக்கோடு இருக்கும் ரகசியம் என்ன?' என்ற வழக்கமான கேள்வியையும் கேட்டுவைத்தேன்.

'நடனம்' என்று சட்டென்று பதில் வந்தது. கனடா இளசுகள் இதைக் கொஞ்சம் கேட்டு நடந்தால்/நடனமாடினால் என்றும் இளமையோடு வாழலாமே?

'நாளை அரங்கேற்றத்தில் சந்திப்போம்' என்று நாங்கள் விடைபெற்றுக் கொண்டபோது, மனம் நிறைவாகவும் குதூகலத்தோடும் இருந்ததை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம்.

அரங்கேற்றம் மிக அற்புதமாக நடந்தது. எதிர்பார்த்ததைவிட இரு மடங்கு மக்கள் குவிந்ததும் அரங்கத்தின் வெளி வாயிலை ஆறு மணிக்கே இழுத்து மூடிவிட்டார்கள். அதிசயமாய் இந்தக் குளிரிலும் வெளி வாசலிலேயே காத்திருந்தவர்கள் அங்கே பலர். விரக்தியோடு திரும்பியவர்களும் அதில் சிலர்.

உலக நாட்டியப் பேரொளி மேலும் பல்லாண்டுகள் இளமையோடு வாழ உதயன் சார்பாக என் நல் வாழ்த்துக்கள்.

கவிஞர் சேவியரின் 'நில் நிதானி காதலி' - என் பார்வையில்


கடல் பரப்பில் மென் காற்றாய்ப் புறப்பட்டு நீரை அள்ளி நிதானமாய்த் தெளித்து நிலம் விழுந்து ஈரம் விதைக்கும் சுகமான அலைகள் சேவியர் கவிதைகள்.

இவர் காதல் கவிதை எழுதும்போது அந்த அலைகள் குழைந்து நெளிந்து நாணப்படுவதும் ரகசியமாய்க் கரைகளை முத்தமிட்டு குதூகலிப்பதும் பரவசம் பரப்பும் வாசனையாய் இருக்கிறது

காதல் கவிதை எழுத என்ன வேண்டும்?

வயதா
அனுபவமா
இல்லை மனதா?

அடுப்பில் விழுந்த சுள்ளிகளாய்த் துடிக்கும் பதின்வயது, காதலை ஓர் அவசர கதியில் கிறுக்கி வைக்கலாம்.

பருவப் பெண்ணின் காந்தப் பூவிழியின் சிராய்ப்புகளில் சட்டென்று காயப்பட்டு வளரும் கிளர்ச்சிக் காதல் அனுபவமில்லாப் பொங்கலைப் பொங்கிவைக்கலாம்.

அட... இதுவரை நினைத்திருந்ததல்ல, இதுவரை கண்டு அனுபவித்ததும் அல்ல. இப்போது, இந்த நொடி அனுபவிப்பதுதான் காதல் என்று ஓர் ஆத்ம தாலட்டைப் பெறும் உள்ளம் எப்போது ஒரு காதலனுக்கு வருகிறது?

முத்தெடுக்க முக்குளிக்கும்போது, எத்தனையாவது முக்குளிப்பில் வலம்புரியோடும் வண்ண முத்தோடும் காதல், வெற்றி பெறுகிறது?

சேவியருக்கு அப்படி ஓர் வெற்றி தொடும் விரல் முளைத்துவிட்டது போலும். இதை நான் சொல்லவில்லை. அவரின் கவிதைகள் கிசுகிசுக்கின்றன.


காதல் என்பது பூவைப் போல
பூப்பதே அதன் வெற்றி


என்று தன் முன்னுரையிலேயே இதய மொட்டுகளை உடைக்கத் துவங்கிவிடுகிறார். ஓர் காதல் சூழலை மெல்லிய வெதுவெதுப்போடு அரங்கேற்றிவிடுகிறார்.

பிறகென்ன, இவரின் சின்னச் சின்னக் காதல் கவிதைக் குறுங்காட்டுக்குள் புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட இதயத்தோடு ஊர்ந்து செல்ல இனி நாமெல்லாம் தயார்தான்.


நீ சிரிக்க வேண்டும் என்பதற்காகவே
நான்
பேசியதுண்டு
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்


இப்படி இயல்புக்கு எந்த வர்ணமும் பூசாத எளிய கவிதைகள் மெல்லிய உணர்வுகளைத் துல்லியமாய்த் தூவிச் செல்கின்றன அந்தி நேரச் சிட்டுக் குருவிகளின் சிறகடிப்புகளைப் போல.


ஒரு
நெருப்பு நதியாய்
நடந்து செல்கிறாய்
சுடருக்காய்
நான்
மெழுகுக் கால்களோடு
காத்திருக்கிறேன்


உருகியே தீருவேன் என்று முடிவெடுத்துவிட்ட இதயத் துடிப்புக் காதல் உணர்வுகள் இந்தக் கவிதைக்குள் காத்திருக்கிறது வாசகனை வளைத்துப் போட்டுக்கொள்ள.


கண்மணி
கொஞ்சம் பேசவேண்டும்
ஒரு யுகம் தருவாயா?


இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்பார்கள் காதலர்கள் எப்போதும். அந்த இன்னும் கொஞ்சம் என்ற கெஞ்சல் ஒரு துளிப் பொழுதும் முடிவுறுவதே இல்லை. எந்நாளும் உலர்ந்துவிடாத காதல் இதயத்தின் வெதுவெதுப்பான ஈரநிலை அது. ஒரு யுகம் பேசினாலே ஒரு நொடி பேசியதாய்ப் படும் உண்மைக் காதலர்களுக்கு. இவரோ ஒரு யுகம் கேட்கிறார். அப்படியென்றால் அதற்குள் எத்தனை யுகங்களைப் பதுங்கி வைக்கிறார் இவர். இந்த உணர்வுகள்தான் காதலின் வேர்களை அடையாளம் காட்டும் மெய் காட்டிகள்.

இருள் பொழியத் துவங்கும் இளம் அந்தியில் நான் அந்த தேவதையைப் பார்த்ததும் எனக்குள் பட்டெனப் பற்றிக் கொண்டுவிட்டது தெய்வீகக் காதல் என்று சிலர் சிலாகிக்கக் கேட்டிருக்கலாம் அநேகமாக எல்லோரும். ஆனால் சேவியர் என்ன சொல்கிறார் பாருங்கள்


எப்போதும் உன்
கூந்தல் ரோஜா அழகாய்த் தெரியும்
ஒருநாள்
அது அழகின்றித் தெரிந்தது
அது தான்
உன் மீதான என் காதல்
பிறந்த் நாள்


இங்கே ஒரு நட்பு காதலாய் மலர்ந்திருக்கிறது என்ற உண்மை அப்பட்டமாய்ப் பதுங்கிக் கிடப்பது தெரிகிறதல்லவா? நட்பு காதலாய் மலரும்போது அந்தக் காதலில்தான் எத்தனை உறுதி உறுதிசெய்யப்படுகிறது.

ஓர் ஆண் எதற்காகவும் அழுவதே இல்லை. ஆனால் அவனது காதலி அவனை எத்தனை எளிதாய் அழவைத்துவிடுகிறாள்?


அழுகையின் போதுதான்
பிறந்த குழந்தை
தன்னை நிரூபிக்கிறது
நீ
உன்னை நிரூபிக்க
என்னை மீண்டும் அழ வைக்கிறாய்


முதல் முத்தம் உண்மையில் இனிப்பானதுதானா? என்ன நடந்தது என்ற எந்தத் தெளிவையும் தராத அந்த முத்தத்தை எதனோடு எப்படி ஒப்பிடுவது. சேவியர் தன் வியப்பில் அதை கண்டுகொள்ளப் பார்க்கிறார் இப்படி


உன்
முதல் முத்தத்தின்
சுருங்கிய வடிவம் தான்
சுவர்க்கமா?


ஆமாம் சொர்க்கத்தைப் பற்றியும் யாருக்கும் எந்தத் தெளிவும் தெளிவாக இல்லைதானே.

காதல் கண்ணடி பட்டுச் செத்துவிடுமா? அல்லது அப்படிச் சாவது ஒருக்கிலும் காதலாகாது என்று உறுதியாய் வாதிடுபவர்தான் நல்ல காதலன் காதலியா? இருப்பினும், அப்படி கண்ணடி பட்டு காயப்பட்டுவிடுகிறதோ என்று அவ்வப்போது தோன்றாமலும் இல்லையல்லவா சிற்சில அதிசோகப் பொழுதுகளில். அதை அப்டியே சேவியர் ஒப்புக்கொள்ள வருகிறாராரோ இந்தக் கவிதையின் மூலம்


அணையும்முன்
தீ பிரகாசமாய் எரியுமாய்
பயமாய் இருக்கிறது
கொஞ்சம் மெதுவாகவே காதலிப்போம்


குறைவாகக் கிடைத்தாலும் பரவாயில்லை. அது நின்றுபோகாமல் இருந்தால் சரி என்ற சமாதானத்துக்கு வரும் சேவியர் இழப்பின் நரகத்தில் முன்பே சாவகாசமாய்த் தங்கி அனுபவித்திருக்கிறான் இதன் கதாநாயகன் என்று மறைமுகமாய்த் தெரிவித்துவிடுகிறார்.

எப்போதும் முரண்பாடுகளில் ஒரு மயக்கம் உண்டு எனக்கு. இவர் தரும் முரண்பாட்டைக் கொஞ்சம் பார்ப்போமா?


ஒத்தடம்
காயம்தருமென்பதை
உன்
உதடுகள்தானடி
உறுதிப்படுத்தின


புதுக்கவிதைப் படகும் காதல் ஓடமும் பல நேரங்களில் ஒன்றாய்த்தான் நீந்துகின்றன. இலக்கணப் படுதாக்களை இயற்கையான அழகு முகத்தின்முன் இட்டுக்கொள்ளாத அவற்றின் வீரியத்தை எளிமையாகச் சொல்லிச் செல்கின்றது சேவியரின் இந்தக் கவிதை


இலக்கணம் கற்காமல்
தலைகாட்டுகின்றன
ஆசைகள்


காதல் என்பது பெரும்பாலும் பெண்களின் பரிசீலனையில்தான் இருப்பதாகப் படுகிறது பல ஆண்களுக்கு. அதைத்தான் கவிஞரும் இப்படிச் சொல்கிறாரோ.


ஏனோ தெரியவில்லை
விலக்க விலக்க
விரல் நீட்டும் மழலையாய்
உன்னை நோக்கியே
நீள்கின்றன
என் காதல் கரங்கள்


இதைக் கொஞ்சம் பாருங்கள். எத்தனை பெரிய உண்மையை மிக எளிய வரிகளில் இனிமையாய்ச் சொல்லிப் போகிறார் சேவியர்.


இத்தனை முறை
சுக்கு நூறாய் வெடித்த பின்னும்
மீண்டும் மீண்டும்
முருங்கை மரம் ஏறும்
விக்கிரமாதித்திய வேதாளமாகிறது
என் காதல்


சோகத்தைச் சொல்வதிலும் சுகமாகச் சொல்வது கவிஞர்களின் தனித் திறமைதான். அதற்கான சான்றாக இக்கவிதை


கிடைத்ததில் பிடித்தது
உன் நினைவுகள்
கிடைக்காததில் பிடித்தது
நீ


கீழுள்ள கவிதையை வாசித்ததும், எனக்குள் சிரிப்புப் பட்டாம்பூச்சுகள் சிறகடித்துவிட்டன. இதன் வேதனையின் ஆழத்தை அவமதித்திச் சிரித்தது தவறுதான் கவிஞரே. பொறுத்தருள்க.


யாராரோ ஏதேதோ
சொன்னார்கள்
காதலைப் பற்றி
எல்லாமே தவறானதாய் இருந்தது
நீ
விலகிய பின் தான்
சட்டென்று எல்லாமே
'சரி' யென்றானது


ஒரு காதலி ஏன் காதலனை விட்டு விலகுகிறாள் என்ற காரணம் மர்மமானது. காதலனுக்கும் காதலிக்கும் மட்டுமல்லாமல் அந்தக் காதலுக்கும் கூட அது விளங்காத புதிர்தான்.

சரி, இப்படியே நான் நீட்டிக்கொண்டே போனால் எப்படி? வாசகர்கள் வாசித்து மகிழ மீதத்தை அப்படியே விட்டுவைப்பதுதானே சரி.

பெட்டிக் கடைகளில் கண்களைக் குறிவைத்துத் தொங்கும் சட்டைப்பை நாவல்களின் அட்டைப்படங்களுடன் போட்டியிடும் கவர்ச்சியான அட்டைப்படம். ஆனால், அதன் உள்ளே இருப்பதோ சுத்த நெய்யினாய் சுடப்பட்ட தித்திப்புப் பலகாரங்கள். இதன் முரண்பாடு என்னை முட்டியது உண்மைதான்.

கவிதைகள் மனதில் ஒட்டியதைப் போல, இத் தொகுப்பின் தலைப்பும்கூட ஏனோ என்னிடம் ஒட்டவே இல்லை.

ஆயினும், இந்த முகப்பூச்சுகளைத்தாண்டி உள்ளே இருக்கும் கவிதையின் அழகு என்னை விழி துளிர்க்க வைத்ததென்னவோ நயாகராவில் ஆனந்தமாய் விழுந்து உயர்ந்து எழும் நீரைப்போல் நிசமானது.

இன்னும் ஆழமும் அழுத்தமும் சேரப்பெறின் சேவியரின் கவிதைகள் சென்று சேருமிடம் என்னவோ நட்சத்திர உச்சத்தில்தான் என்பதில் எனக்கு நடுப்பகல் இருட்டளவும் ஐயமில்லை.

குறள் 0382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம்


பகைமை கண்டு அஞ்சாத நெஞ்சுரம்
கொடுத்துக் கொடுத்துச் சிவக்கும் கரங்கள்
அறம் போற்றும் தெளிந்த நல் அறிவு
சிகரம் தொடும் தளராத ஊக்கம்
இவை நான்கும்
சிறந்ததோர் ஆட்சியாளனின்
இயல்புகளாம்






அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 382

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

கண்ணதாசன் பாடல்கள் - எந்த ஊர் என்றவனே



கண்ணதாசனின் திரையிசைப்பாடல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை. அவர் எழுதிய சிலேடைப் பாடல்கள் பல. அதில் ஒன்றுதான் இந்த எந்த ஊர் என்றவனே என்ற பாடல். தமிழ்நாட்டையே தன் பாடல்களால் உண்டு இல்லை என்று ஆக்கியவர் கண்ணதாசன். இவர் பாடலைக் கேட்டுவிட்டு காதலென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் காதலிக்கத் தொடங்கினர். இதுதான் உறவு இதுதான் வாழ்க்கை என்று உறுதி செய்துகொண்டார்கள். நிலையாமையின் தத்துவத்தில் நிலைபெற்றனர்.

இலக்கியத்தை அப்படியே ஒரு சொட்டும் சிந்தாமல் ரசித்துப் பருகி அதை சொற்பத் தமிழறிவே உள்ள சாதாரண தமிழர்களுக்கும் சுவையோடு பரிமாறுவதில் கண்ணதாசனுக்கு நிகர் இன்னொருவர் உண்டு. ஆச்சரியமாய் இருக்கிறதா? ஆம் அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் முத்தையா. சிறுகூடல் பட்டியில் பிறந்தவர். அதிகம் பள்ளிப்படிப்பு இல்லாதவர். ஆனால் வாழ்க்கையின் சாரத்தை துளித் துளியாய் அனுபவித்தவர்.

அவரின் பொழுதுபோக்கு மதுவா மாதுவா என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் இரு பக்கப் பேச்சாளர்களும் நிச்சயம் வெல்வர். முத்தையா விட்டு வைக்காதது எதுவுமில்லை. மது மாது மட்டுமல்ல போதைமருந்து பழக்கமும் உண்டு அவருக்கு. சூதாட்டம் அரசியல் கடவுளே இல்லை என்று பகுத்தறிவில் சிலநாள் பின் நெகிழ்ந்த ஆன்மீக மதப்பற்று என்று வாழ்வின் பின்நாள் என்று அனைத்தினுள்ளும் தன்னைக் கரைத்தார். அனுபவிக்க அனுபவிக்க அவர் ஞானியானார். ஞானியாக ஞானியாக தத்துவக் கவிதைகளும் தரமான பாடல்களுமாக எழுதிக் குவித்தார். சித்தரானார்.

அழுவதில் ஆனந்தம் கண்டவர் முத்தையா. நாளெல்லாம் அழுதார். அழுது அழுது இந்த உலகம் மனிதர்களுக்கு ஏன் சொர்க்கமாக மட்டுமே இல்லை என்று கோபம் கொண்டார். தன் வாழ்க்கை மண்ணில் காணும் சொர்க்கத்தை நோக்கியதாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று எதையெல்லாம் தனக்காகச் செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்தார். ஆனால் அவர் யாருக்கும் ஒரு தீங்கும் விளைவித்ததே இல்லை. எல்லோர் மனங்களிலும் அன்போடும் மதிப்போடும் வாழ்ந்தார்.

தன் தவறுகளை தவறுகள் என்று தைரியமாக ஒப்புக்கொண்டு உலகுக்கே சொன்ன ஒரே கவிஞர் முத்தையா மட்டும்தான். வாழ்வின் தத்துவங்களை மிக எளிமையாக எழுதும்போது முத்தையாவைப்போல் மிக மிக உயரத்தில் நின்ற இன்னொரு கவிஞன் கிடையவே கிடையாது. அந்தக் கவிஞர் வேறு யாருமல்ல கண்ணதாசனேதான். ஆமாம் கண்ணதாசனின் இயற்பெயர்தான் முத்தையா.

சுமார் எட்டுப் பத்திரிகைகள் நடத்தி தமிழர்களோடு இலக்கியம் பேசியவர். அவர் பிறந்ததென்னவோ இந்துமதம்தான். ஆனால் எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்த நவீன சித்தர் அவர். ஏசு காவியம் பாடினார். இஸ்லாமிய கீதம் இசைத்தார். புத்தனைப் புகழ்ந்தார். அவர் எந்த நல்லதையும் போற்றாமல் விட்டதில்லை.

சாகித்ய அகாதமி அவரைத் தேடிவந்து கௌரவித்ததில் ஏதும் ஆச்சரியம் இருக்கமுடியுமா சொல்லுங்கள். அத்திக்காய் காய் காய், பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத் துடித்தேன் உனைத்தேன் என நான் நினைத்தேன் என்பதுபோல கண்ணதாசன் எழுதிய இலக்கியத் தரம் மிக்க சிலேடைப் பாடல்கள் அதிகம். அதில் ஊர் ஊர் என்று வர்ணித்தே அவர் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் பாடலாய்த் தந்தது அற்புதம்.

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்!

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா!


இதுதான் முழுப்பாடலும் இனி ஒவ்வொரு வரியாகப் பார்ப்போம்.

*

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா


அது ஓர் அழகான கிராமத்தின் மரங்கள் வரவேற்கும் வீதி. நம் கதாநாயகன் இளமை அழகு நிரம்பித் ததும்பி வழியும் ஒரு வாலிபன். துக்கத்தைத் தன் முகத்தில் மேட்டூர் அணை வெள்ளமாய்த் தேக்கிவைத்து மனம்போன போக்கில் வெறுமையின் தாலாட்டுக்கு ஏற்ப மெல்ல நடந்துவருகிறான்.

அவன் யாரென்று அறியாத அந்த ஊர்வாசி ஒருவன் அவனிடம் விசாரிக்கிறான். இன்றைய நகரம் போலல்ல அன்றைய கிராம வாழ்க்கை. ஓர் ஊரில் ஒருவன் புதியதாய் வந்தால் அந்த ஊர் சிறுவர்களுக்கும் தெரிந்துவிடும் இவன் புதியவனென்று. தம்பி நீ எந்த ஊருப்பா என்று சட்டென்று வினவும் வெகுளித்தனமும் கொண்டவர்கள் அவர்கள். சில நேரம் அதில் விவகாரமும் இருக்கும். அது அந்தக் கிராமத்துக்கான பாதுகாப்பு.

அந்தக் கேள்விக்குப் பதிலாக, நம் கதாநாயகன் சொல்கிறான் இப்படி. என்னை எந்த ஊர் என்றவனே, நான் இருந்த ஊரைச் சொல்லவா? நான் இருந்த ஊர் எது? என் தாயின் கருவறை. ஆம் நான் முதன் முதலில் இந்த உலகில் வந்து இருந்த ஊர் என் தாயின் கருவறைதான். அங்கேதான் நான் பத்துமாதங்கள் வளர்ந்தேன் வாழ்ந்தேன். அதற்கு வாடகை நான் தரவில்லை. என்றால் அந்த ஊர் எனக்குச் சொந்த ஊரா?

அது என் சொந்தம் சொந்தம் என்றுதான் பிதற்றுகிறேன் என்றாலும் அந்த ஊரில் அதன் பின் வந்து குடியேறியவர்கள் இருக்கிறார்கள். பின் அவர்களுக்கும் அது சொந்தமாகி விடவில்லை. அந்த ஊர் எப்படி சொந்த ஊர் ஆகும்? நான் அங்கே வாடகை தராமல் குடிஇருந்தேன் அவ்வளவுதான். அதுதான் உண்மை. ஆனால் அந்த ஊரை நீயும் அறிவாய். ஏனெனில் நீகூட அந்த ஊரில்தானே பத்துமாதம் தங்கி இருந்தாய் என்கிறான்.

அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா?

*


உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

அடடா இங்கே கண்ணதாசன் தன் பாடலை அறிவியல் தளத்துக்கு அப்படியே எடுத்துச் செல்கிறார் பாருங்கள். உடலூரில் வாழ்ந்திருந்தேன் என்கிறான் அந்தப் புதியவன். உடலூரில் வாழ்ந்திருந்தேன் என்றால் என்ன பொருள்? ஆணிடம் விந்தாகவும் பெண்ணிடம் கருமுட்டையாகவும் நான் ஆரம்பத்தில் வாழ்ந்திருந்தேன் என்கிறான்.

அதோடு நின்றானா? உறவூரில் மிதந்திருந்தேன் என்கிறான் அடுத்த வரியில். இங்கேதான் காதல் வந்து தன் விளையாட்டின் முக்கியமான காரியத்தைச் செய்கிறது. ஆணின் உடலிலும் பெண்ணின் உடலிலும் தனித்தனியாகத்தான் இருந்தேன், ஆனால் காதல் என்ற உறவினால் நான் மிதக்கத் தொடங்கினேன். அப்படியே மிதந்து மிதந்து கருவூரில் குடி புகுந்தேன் என்கிறான். அதாவது தாயின் கருவறையில் நான் கருவாக உருவாகிவிட்டேன் என்கிறான். ஊர் என்ற சொல்லை வைத்து கண்ணதாசன் ஆடும் இந்த விளையாட்டு

சுவாரசியமானதல்லவா?

சரி உடல் என்ற ஊரிலிருந்து புறப்பட்டு உறவு என்ற ஊரில் மிதந்து கரு என்ற ஊரும் வந்தாகிவிட்டது. இனி அடுத்தது எந்த ஊர்? கருவூரிலிருந்து மண்ணூரில் விழுந்துவிட்டேன் என்கிறான் அந்த வாலிபன். கரு என்பது பத்துமாதம் வளர்ந்து பின் இந்த மண்ணில் அதாவது இந்த உலகில் வந்து குழந்தையாய்ப்

பிறந்துவிடுகிறதல்லவா. அதைத்தான் சொல்கிறான் அவன். எத்தனை இலக்கிய முத்துக்கள் இந்த கண்ணதாசன் சிலேடைப் பாடல்களில்?

ஓ அப்படியா மிகுந்த சுவாரசியமாய் இருக்கிறதே உன் கதை. சபாஷ்! சரி சரி மீதக் கதையையும் சொல். இன்னும் எத்தனை ஊர்களில் சுற்றித் திருந்தாய் என்கிறான் அந்த ஊர்க்காரன் கதை கேட்கும் ஆவலில்.

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்!

வயிற்றுக்குள் வைத்துக் கனவுக்குள் மிதந்தவள் பிள்ளையாய்ப் பெற்றெடுத்ததும் என் தாய் என்னைக் கண்ணுக்குக் கண்ணாக வைத்திருந்தாள் என்பதை எப்படி அழகாகச் சொல்கிறான் அவன். கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் - தன் தாயின் கண்ணுக்குள்ளேயே மணியைப்போல அவன் தவழ்ந்த நாட்களைவிட இனிமையான நாட்கள் வேறேதும் இருக்க முடியுமா?

அந்தத் தாயின் கையணைவில் அவன் வளர்கிறான். கையூரில் வளர்ந்திருந்தேன். மக்களே இது மீளாது மக்களே. இந்த உலக வாழ்வின் உண்மையான இன்பம் இதுதான். ஒரு தாயின் கைகளுக்குள் இருந்து அவளையே உலகமாய்க் கொண்டு வளர்வது. அவள் கீழே இறக்கிவிட்டதும் நம் இன்பங்களெல்லாம் எங்கோ ஓடிவிடுகின்றன. கங்காரு பை இருப்பதால் தன் குட்டியைச் சுமக்கிறது. ஆனால் நம் தமிழ்ப்பெண்கள் கை விட்டுக் கீழே இறக்கிவிடும் மனம் இல்லாமல் பாசத்தோடு கொஞ்சிக் கொஞ்சி சுமக்கிறார்கள்.

பிறகென்ன குழந்தை வளர்ந்து நடக்கத் தொடங்குகிறது. காலூரில் நடந்து வந்தேன் என்கிறான் இதை. அதாவது வெறுமனே காற்றை உதைத்துக்கொண்டிருந்த கால்கள் இப்போது நடக்கும் நிலைக்கு வளர்ந்து விடுகின்றன. அப்படியே நடந்து நடந்து வளர்ந்து வளர்ந்து காளையாக ஆகிவிடுகிறான். அதாவது வாலிபனாக ஆகிவிடுகிறான். அதைத்தான் கவிஞர் காளையூர் வந்துவிட்டேன் என்று இலக்கிய நயத்தோடும் ஊர் என்ற சிலேடையை விடாமலும் சொல்கிறார்.

ம்ம்ம்... சரி அப்புறம்?

*


வேலூரைப் பார்த்து விட்டேன்

விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!


வாலிபன் என்று ஆகிவிட்டால் நீங்கள் வலை விரிக்கப்பட்டிருக்கிறீர்கள். யாருக்கான வலை எப்படியான வலை என்பதெல்லாம் வலை விரித்தவர்களுக்கேகூட தெரிவதில்லை. ஊரெல்லாம் பெண்கள். பெண்கள் எல்லோரும் வெறும் கண்களோடு மட்டுமே அலைவதுபோல் தெரியும்.

கால்கள் எங்கே கைகள் எங்கே உடம்புதான் எங்கே என்று தெரியாது அவர்களுக்கு. வள்ளுவன் சொல்லும் உயிர் தின்னும் கண்கள் மட்டும் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும். அதில் அகப்படாமல் தப்பிக்கும் வாலிபனுக்கு வாலிபன் என்று பெயரில்லை.

பெண்களைப் பூக்கள் என்பார்கள். ஆண்களைத்தான் வண்டுகள் என்பார்கள். ஆனால் இந்தக் கண்களைப் பார்த்தால் அந்த நியதி சற்றே மாறிப்போகும். கண்கள் இரண்டும் வண்டுகளாய் கனவுகளிலும் ரீங்கரித்துச் சுற்றிச் சுற்றி வரும். அவள் ஒருமுறைதான் பார்த்திருப்பாள் ஆனால் அது ஓராயிரம் முறை பார்த்ததைப்போல வாலிபன் கிறங்கிப்போவான். தூக்கம் கெட்டு பொடி விழுங்கிய ஓணானைப்போல ஆவான்.

பெண்ணின் ஒவ்வொரு கண்ணும் கூர்மையான வேலைப் போல் வந்து தாக்கும். வாலிபனின் சிந்தனையைத் தகர்க்கும். ஆமாம் வாலிபன் என்று ஆகிவிட்டாலே இந்தப் பெண்களிடமிருந்து தப்பிப்பது என்பது ஓடுமீன் ஓட உறுமீனுக்காகக் காத்திருந்த கொக்கிடமிருந்து தப்பிப்பதைவிட கடினமானது.

அவர்கள் வேல் பாய்ச்சும் விழிகளை எதிர்கொண்டே தீரவேண்டும். இப்ப்படியாய் பல வேல் பாய்ச்சும் விழியுடைய பெண்களைக் கண்டபின் ஒரு பெண்ணிடம் மட்டும் மனம் அப்படியே ஒட்டிக்கொண்டுவிடுவது ஆச்சரியம்தான். அதுதான் காதல்.

அந்தக் காதலில் அப்படியே தன்னை மறந்து கலந்துவிடுகிறான் அவன். அதைத்தான் வேலூரைப் பார்த்துவிட்டேன் விழியூரில் கலந்துவிட்டேன் என்கிறான். பல பெண்களின் வேல் விழிகளைக் கண்டு தித்திப்பாய்க் காயப்பட்டு திசைதெரியாமல் அலைந்தவன் ஒருத்தியின் விழியில் மட்டும் ஒன்றிக் கலந்துவிட்டானாம்.

வேலூரைப் பார்த்துவிட்டு காதல் கன்னியின் விழியூரில் கலந்து சிக்கிக்கொண்டவன் அடுத்த கட்டமாக, பருவத்தின் மேன்மையை உணர்கிறான். அது படுத்தும் பாட்டில் வாழ்வைக் காண்கிறான். அது பாலூறுவதாக இனிமையாக இருக்கிறது.

பருவங்களிலெல்லாம் தாண்டிவரமுடியாமல் நம்மைச் சிக்க வைக்கும் பருவம் வாலிபப்பருவம்தானே? அந்தப் பருவத்தில் பசியில்லை உறக்கமில்லை. ஆனால் அந்தப் பருவம்தான் மிகவும் பிடித்திருக்கிறது.

இருக்காதா பின்னே காதலி கிடைத்துவிட்டால் இந்த உலகில் வேறென்ன வேண்டும்? பால் மட்டுமா ஊறும் உயிரும் ஊர்ந்து வேறு உலகத்தில் சுற்றித் திருயுமே. அப்படிப் பாலூரும் பருவம் தன் தாய் மடியில் பெற்ற இன்பத்தை மீண்டும் தருவதாக அமைவதுபோல சுகமாக இருக்கும்.

அப்படியே அதில் குடிபுகுந்து நிரந்தரம் ஆகிவிடுகிறான் வாலிபன். அதைவிட்டு விலகவோ அதை வெறுக்கவோ அவனால் அதன்பின் எப்போதும் இயலுவதே இல்லை. அதுவே அவனின் நிரந்திரப் பட்டினமாய் ஆகிவிடுகிறது.

இங்கே கண்ணதாசன் ஏன் பட்டினம் என்கிறார் இந்தப் பருவத்தை என்று நாம் கவனிக்க வேண்டும். பட்டினம் என்பது கிராமத்துக்காரர்களின் கனவு. ஒரு வாழ்க்கைத் தரத்துக்கான மேன்மை நிலை. காதலி கிடைத்து அவளுடன் பருவத்தைப் பாலூறக் காண்பதைவிட மேன்மை வேறேது. உலகின் மிக உயர்ந்த நகரத்தில் குடிபுகுவதைப்போல வாலிபன் மகிழ்கிறான்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இதுவரை கதாநாயகன் பல ஊர்களில் குடியிருந்தாலும் அதையெல்லாம் நிரந்தரம் என்று அவன் நினைக்கவில்லை சொல்லவில்லை. இந்தக் காதலியோடு காதலில் கவிழ்ந்து உலகையையே வெற்றிகண்ட இந்த ஊரைத்தான் நிரந்தரமாக தான் தங்கும் இடமாக கூறுகிறான் கதாநாயகன். அதனாலேயே அதைப் பட்டினம் என்கிறான்.

”ஓ... அப்புறம்... அப்புறம்.... சொல்லு... சொல்லு...” என்று அவசரப்படுத்துகிறான் அந்தக் கிராமத்தான் கதாநாயகனிடம்.


*

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடியேறி நிரந்தரம் என்று அந்த வாலிபன் நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால்... நிலைமை அப்படியே இருந்துவிடுவதில்லை

என்பதுதானே பலரும் கண்ட கசப்பான உண்மை. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசனே அதற்கும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

இந்தப் பெண்களை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. காதல் கனியும்முன் சுத்திச்சுத்தி வந்துவிட்டு காதல் கனிந்தபின் சே... இவ்வளவுதானா என்பதுபோல

விலகிவிடுவார்களோ? அவர்களுக்கே வெளிச்சம். அந்த மர்மம் எவருக்கும் விளங்குவதில்லை. எவருக்கும் என்றால் ஆண்களுக்கு மட்டுமல்ல அந்தப் பெண்களுக்கே விளங்குவதில்லை. இது ஒரு வகையான வேடிக்கை இல்லையா?

தன் காதலூரை (காதல் ஊரை) சுற்றிக் காட்டி குடியமர்த்திக்கொண்ட காதலி சரி போதும் போதும் போய்த் தொலை என்று அவனை திக்குத் தெரியாத காட்டூரில் விட்டுவிட்டு

அவனை மறந்து போயே போய் விடுகிறாள். பாவம் வாலிபன். என்ன செய்வான்? எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று கண்ணீரோடு

பாடவேண்டியதுதான். வேறென்ன செய்யமுடியும்?

சுகமான பாலூறும் பட்டினத்திலிருந்து வேதனை முட்களே நிரம்பியிருக்கும் காட்டூரில் விடப்படுகிறான் பாடலின் கதாநாயகன். காட்டூர் என்றாலே அங்கே எந்த அமைதியோ நிம்மதியோ கிடையாது என்பதைச் சொல்லித் தெரியவேண்டிய அவசியமே இல்லை. அங்கே வீடில்லை உறவில்லை எந்த சுகமும் இல்லை எல்லாமே காணாமல் போன விச முட்களடர்ந்த கொடிய காடு அது.

காதல் தோல்வி தருகின்றன வலிக்கு நிகரான வலி இந்த உலகில் கிடையவே கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். அதனால்தான் பாலைத்திணையில் பாடல்கள் அதிகம். இன்றைய திரைப்படங்களிலும் தொட்டதெற்கெல்லாம் ”போகாதே போகாதே நீ இருந்தால் நானிருப்பேன் நீ பிரிந்தால் நான் இறப்பேன்” என்று அழுவாச்சி பாடல்களே அதிகம்.

கன்னியூரில் அதாவது அந்தக் கன்னிக்குள், கன்னியின் மனதுக்குள் அழகாகக் குடியேறி இருந்தான் வாலிபன். புதிதாய்ப் பிறந்தவனைப்போல அவன் ஆனான். ஆனால் அந்தக் கன்னியோ அவனை சுத்தமாய் மறந்தவுடன், மறந்து அவனை விட்டு மறைந்தவுடன் அவன் துக்கம், சோகம், கண்ணிர், அழுகை என்ற மாபெரும் உப்புக் கடலூரில் விழுந்துவிடுகிறான். அதாவது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகக் கொட்டிக் கொட்டி அப்படியே கடலாகி. அந்த கடலுக்குள் அவனே விழுந்துவிடுகிறான்.

அப்புறம்?

*


பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!


பிறகென்ன? காதல் தோல்வி என்ற ஒன்று போதாதா கனவுகளையே வாழ்க்கையாய்க் கொண்ட, எந்தக் கபடமும் அறியாத இளைஞனுக்கு. நொறுங்கிச் சிதறிவிடமாட்டானா

அவளையே பிரதிபளித்த அவனது கண்ணாடி இதயம் உடைந்து தூள் தூளாக.

வாழ்வே படு ஆழமான துக்கங்கள் மட்டுமே நிறைந்த பள்ளமாகிவிடுகிறது அவனுக்கு. அந்த அதலபாதாள பள்ளத்தில் இவனைத் தள்ளிவிட்டுவிட்டு கண்ணீர் கடலுக்குள் இவனை மூழ்கடித்துவிட்டுவிட்டு அவள் மட்டும் எந்தக் கவலையோ வருத்தமோ இல்லாமல் முன்பை விட மகிழ்ச்சியாய் உயர்ந்த இடத்தில் ஏறிக்கொண்டு வாழ்வைச் சுவைக்கிறாள் என்று புலம்புகின்றான்.

கொடும் துயரம் என்ற பள்ளத்தூரில் இவனைத் பரிதவிக்கவிட்டுவிட்டு உயர் வாழ்வு என்ற மேட்டூரின் கீழே கூட இல்லை மேலேறி (மேலே ஏறி) நின்று கொள்கிறாள் அவள்.

காதல் தோல்வி என்பது பெண்ணுக்கு மட்டும் கிடையாதோ என்று அவன் கலங்குகிறான் துடிக்கிறான் துவள்கிறான். காதல் என்பது ஆணின் ஆயுளை அழிக்கும்

எமனாகத்தான் இருக்கிறது என்று் உறுதியாக நம்புகின்றான்.

இவன் வாழ்வை அழித்துவிட்டு அவள் மட்டும் எந்த மனத்துயரும் இல்லாமல் புதிய வாழ்வைத் தேடிக்கொண்டு மேட்டீரின் மேலேறி நின்று கொண்டால் இவன் என்னதான்

செய்வான்? அவள் இவனை மறந்ததுபோலவே இவன் அவளை மறந்து விலகி புதிய வாழ்வைத் தேடுவதுதானே சரி. பாடலின் நாயகன் என்ன செய்யப் போகிறான்?

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா!


அவள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் என் காதல் புனிதமானது. இந்த உலக வாழ்க்கை என்பது துக்கங்களே நிறம்பிய கீழ்மையானதுதான். அதில் உயர்வானதே

காதல் என்ற புனிதம் ஒன்றுமட்டும்தான்.

இந்தக் கீழூரில் வாழ்வதற்கு கிளியைப் போல மொழி பேசும் என் காதலி இல்லை. அவள் இல்லாமல் எனக்கு எதுவுமே இல்லை. எனவே நான் என் மரணத்திற்காகக்

காத்திருக்கிறேன். மரணம் என்ற அந்த மேலூருக்குப் போவதற்கு இன்னும் எனக்கு வேளை வரவில்லையே என்றுதான் நான் இப்படி ஊர் ஊராய்

அலைந்துகொண்டிருக்கிறேன். அங்கே போய்ச் சேரத்தான் நடந்துகொண்டே இருக்கிறேன் என்று தன் கதையை முடிக்கிறான் காதலிலே தோல்வியுற்ற அந்த வாலியன்.

இந்தச் சூழலை எத்தனை அற்புதமாய் தன் சிலேடைப் பாடல் மூலம் பாடுகிறார் கண்ணதாசன் பார்த்தீர்களா? ஆச்சரியமாய் இல்லை? எங்கே எல்லோரும் கண்ணதாசனுக்கு ஒரு பாராட்டு மடல் எழுதுங்கள் பார்க்கலாம்.

- கவிஞர் புகாரி

குறள் 0381 படைகுடி கூழமைச்சு நட்பரண்


வெற்றி முழங்கும் வீரர் படை
பண்பு மாறா உயர் மக்கள்
குறைந்தழியாச் செல்வச் செழுமை
அறிவால் நிறைந்த அமைச்சரவை
அசைக்க முடியா அயல்நாட்டு நட்புறவு
உறுதிமிக்க உள்நாட்டுக் காவல்
இவை ஆறும் நிறைவாய்க் கொண்டதே
ஆண் சிங்கத்துக்கு நிகரான
அரசாங்கம்

*

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசு ளேறு


*

2 பொருட்பால் - 1 அரசியல் - 39 இறைமாட்சி - குறள் 381

*

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

குறள் 0003 மலர்மிசை ஏகினான் மாணடி


பூப்போன்ற நெஞ்சங்களில்
பொழுதும் குடியிருக்கும்
புனிதனின் அடிதொட்டே
நாளெல்லாம் தொழுகின்ற
நல்லோர்கள் யாவரும்
நிலைபெற்ற புகழ்பெற்று
நெடுங்காலம் வாழ்வார்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 3

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

* பிப் 17, 2003

குறள் 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்


இதென்ன முரண்பாடு
பெண்மையெனும்
மென்மை அழகை
பரிபூரணமாய்க்
கொண்டிருக்கிறாள் இவள்
ஆனால்
இவள் கண்களோ
காண்போரின்
உயிர் உண்ணும்
தோற்றத்தையல்லவா
கொண்டிருக்கின்றன

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1084

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

மல்லிகை வாடிடுமே என்று
மனைவியைத் தொடாதிருக்கலாமா
மனைவி வாடிடுவாளேயென்று
மல்லிகையைத் தொடாதிருக்கலாமா
என்று தவித்த கனத்த பொழுதுகள்
எனக்கு ஏராளம் ஏராளம்

நிறைமாத நெடுங் கூந்தலாய்
தள்ளாடும் மல்லிகையோடு வரும்போது
எனக்கென் மனைவி தெரிவதே இல்லை

வெள்ளை வெள்ளை விழிகளை
வாசம் உதிரச் சிமிட்டும்
மல்லியொளியழகே தெள்ளெனத் தெரியும்

வடிவெழிற் நிலவுப் பெண்களே
நீங்கள் மல்லிகையை அள்ளிச்சூடி
இலைப் படகுகளாய்
மெல்ல மிதந்து வரும்போதும்
கடையிமை முடியளவும் நானுங்களைக்
கண்ணுயர்த்திக் காண்பதே இல்லை

என் மல்லிகையின் அழகைத்தான்
மந்தகாச உதிர்வோடு
உள்ளுறிஞ்சி உணர்வெழ நிற்பேன்

முத்தமிழ் வளர்த்த மதுரையில் மலரும்
மயக்கு மல்லிவாசம்
எனக்கு இங்கிருந்தே வீசுகிறதென்றால்
நீங்கள் தாராளமாய் நம்பலாம்

எனக்கும் மல்லிகைக்கும் இருக்கும் பந்தம்
அந்த மல்லிகைக்கே
தெரியுமோ தெரியாதோ வென்ற
ஐயமுண்டெனக்கு

வாடிய மலரையும்
கீழெறிந்ததில்லை நான்
சருகான நிலையிலும்
இறுகணைத்தேதான் உருகுவேன்

எனக்குக்
காதலியுண்டா இல்லையா
என்ற சில்லறைக் கேள்வியை
அப்படியே கிள்ளிப் பின்வையுங்கள்

என் நாசிக்கு மட்டுமே தனியே ஒரு
தொடர் ஜென்மக் காதலியுண்டு
அதை வந்து கேளுங்கள்
அவள்தான் என் மல்லிகை

கண்டு நுகர்ந்த நாள்முதலாய்
அவள் வாசமடி மட்டுமே கிடந்தும்
துளியின் துளியளவும்
எனக்கு அலுங்கவே இல்லை

மல்லிகையை அள்ளியென்
மார்மீது மழையாய்ப் பொழிந்துவிட்டு
என் சொத்துக்கள் மொத்தத்தையும்
எவரும் சட்டென எழுதி
எடுத்துச் சென்றுவிடலாம்

மல்லிகையை அவிழ்த்து
என் மீசைமேல் கிடத்திவிட்டு
அந்த உயிர் மயக்கப் பொழுதில்
என் மூச்சையும் நிறுத்திப் போட்டுவிடலாம்

மல்லிகை எனக்கொரு
மலரல்ல மலரல்ல
வாசமாய் என் தேகத்திற்கு
வெளியில் உலவும்
என் உயிர்தான் உயிர்தான்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

குறள் 0002 கற்றதனால் ஆய பயனென்கொல்


ஆயிரமாய்
கல்வி கற்றறிந்தே
நல்ல காவியம் செய்தாலும்
அனைத்தும் அறிந்தவன்
பாதம் பணிந்திடும்
பண்பைப் பெறாதிருப்பின்
கற்றவை முற்றிலும்
வீணென்று அறிவீர்
வேறேது பயனுமில்லை

*

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனில்


*

1 அறத்துப்பால் - 1 பாயிரவியல் - 1 கடவுள் வாழ்த்து - குறள் 2

*

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

* பிப் 16, 2003
மனமே மனமே

ஒடிந்து ஒடிந்து
விழுந்தாய்

எடுத்து எடுத்து
நிறுத்தினேன்

மனமே
நீ
மீண்டும் மீண்டும்
ஒடிந்து ஒடிந்தே
விழுந்தாய்

எடுத்து நிறுத்தும்
கவலையைக் கைவிட்டு
சனியனே என்று
மறந்தே போனேன்

ஒடியாத
வானமானாய்
அன்றுதொட்டு
நீ
ஒடிந்து விழும்
இதயங்களுக்கெல்லாம்
மயிலிறகு பொழியும்
கர்ப்பம் தரித்தாய்

பூட்டும் சாவியும்
நீதான் நீதான்
மனமே மனமே
ஓரினமாய்ச் சேருமோ

தாய்மை என்னும்
அதி உன்னதப் பொக்கிசத்தைப்
பேறாய்ப் பெற்றவள் பெண்

இரு அமுத சுரபிகளை
அவளின் உடலிலேயே
பெரும் கொடையாகக் கொடுத்து
தன் ரத்தத்தை அமுதாக்கிப் பருகத்தரும்
மேன்மையைக் கொடுத்தான்
இறைவன்

மிருதுவான பஞ்சு மேனியையும்
பரிவும் கருணையும் மிக்க
அற்புத இதயத்தையும் அவளுக்குக் கொடுத்து
சிறு தொடுதலிலும்
இனிய குரல்வழி பொழியும்
ஓரிரு வார்த்தைகளிலுமே
சொர்க்கத்தையே ஆறுதலாய்ப் பொழியும்
மந்திரத்தைத் தந்தான் இறைவன்

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கோ
அவனிழைத்த ஆகப்பெரிய
துயர் யாதெனில்
தாய்மை எனும் பொக்கிசமோ
தந்தை எனும் கம்பீரமோ
தரப்படாத அவலம்தான்