தேவதையிடம் பத்து வரங்கள் - தொடர்பதிவு


இன்று தேவதை உங்கள்முன் தோன்றி பத்து வரங்கள் தருவதாக் கூறினால் என்ன வரங்கள் கேட்பீர்கள். இப்படி ஒரு தொடர்பதிவில் கலந்துகொள்ள எனக்கு ஓர் அழைப்பு வந்தது.

என்னை அழைத்த கவிநட்புக்கு முதலில் என் நன்றி. தொடர்பதிவுகள் நட்பின் அடையாளங்களுள் ஒன்றுதான். ஆகவே அதை வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

ஒருவரின் ஆசைகளைக் கேட்டறிவது இன்னொருவருக்குச் சுவாரசியமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதுவும் அந்த ஒருவர் தனக்குப் பிடித்தமானவர் என்றால் சொல்லவே வேண்டாம். அதைக் கேட்பதே இவரின் முதல் ஆசையாக இருக்கும்.

புத்தரிடம் பத்து ஆசைகள் என்னவென்று கேட்டால் அவர் தேவதையைப் பார்த்து, உயிர்களெல்லாம் ஆசைகளை அழித்து வாழவேண்டும் என்ற தன் ஆசையைப் பத்துமுறை சொல்வார். அதையே அவர் சித்தார்த்தனாக இருந்தபோது கேட்டிருந்தால் என்ன சொல்லி இருப்பார்? ஆசைகள் நிமிடங்கள் தோறும் நிறம் மாறக்கூடியவையே.

இன்றைய ஆசைகள் நாளைக்கு ஒன்றுமற்றவையாக ஆகலாம். நாளை நாம் கொள்ளப் போகும் ஆசை இன்று நம் விருப்பத்திலேயே இல்லாததாக இருக்கலாம். மனிதன் பிறந்த நாள்முதல் இறக்கும் நாள் வரை ஒரே ஆசையைக் கொண்டிருப்பதில்லை.

நம்மிடம் நம் உள் மனம் சொல்லும் ரகசிய ஆசைகள்தான் நம் கனவுகள். சில நேரம் கனவுகள் பயங்கரமானதாக இருக்கும். ஒரு சிங்கம் நம்மைத் துரத்த நாம் எதுவும் செய்யமுடியாமல் செயலற்று நிற்பதுபோல் கொடிய கனவு வரும். அது வேறொன்றுமில்லை. நம் ஆசைகள் நிறைவேறாதோ என்ற நம் உள் மனதின் பயம்தான் அது.

ஆடை இல்லாதவன் அரைமனிதன் என்பார்கள். ஆசை இல்லாதவன் மனிதனே இல்லை என்று சொல்லலாம். ஆசைகளே ஒருவனின் ரசனைகள். ரசனைகள் இல்லாவிட்டால் அவன் எதையுமே ரசிக்க முடியாது. எதையுமே ரசிக்காதவன் ஒரு ஜடம். அவனுக்கு வாழ்க்கையே இல்லை.

வாழ்வதற்காகத்தான் நாம் மண்ணில் பிறந்திருக்கிறோம். பின் ஆசையை ஒழி என்றால் என்ன பொருள். பேராசைப் படாதே என்றுதான் பொருள். கிட்டாதாயின் வெட்டென மற என்றும் பொருள். அது உன்னையும் பிறரையும் வாழவைக்கும் என்று பொருள்.

ஆதலாம் உயிர்களே நாம் ஆசைப்படுவோம். என் கவிதைமனம் சொல்லும் என் ஆசைகளை நான் இங்கே பட்டியல் இடப்போகிறேன். அவற்றை எந்த தேவதையும் வந்து நிறைவேற்றித் தரமாட்டாள்.
ஆனால் அவற்றை நானே நிறைவேற்றுவேன். என் எண்ணங்கள் நிறைவேற்றித் தரும். என் எழுத்துக்கள் நிறைவேற்றித்தரும்.

என்னை நேசிப்போர் என் ஆசைகளையும் நேசிப்பர். அவர்கள் நேசிக்கும் ஆசைகளாய் என் ஆசைகள் ஆகும்போது, நிறைவேறுவது நிக்ழக்கூடியதுதானே. ஊர் கூடித் தேரிழுத்தால் தேருக்கு வேறு வழியுண்டா?

இதோ என் ஆசைகள்:

1. எல்லைக் கோடுகள் அழிந்திடணும். அதையென் சின்னக் காலால் அழித்திடணும். உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்.

2. காற்றில் அலையும் பறவைகளாய் மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும் சிறுமை கட்டுகள் அறுந்து விழவேண்டும்.

3. அழியும் அகிலம் தொடவேண்டும். எங்கும் அன்புப் பயிர்கள் நடவேண்டும். வஞ்சம் அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்.

4. காலை எழுந்து பறந்திடணும். பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும். அந்தி கவிதை ஒன்று எழுதிடணும்.

5. காணும் உயிரைத் தழுவிடணும். அன்புக் கவியால் கைகள் குலுக்கிடணும். உள்ளக் கனவைக் கேட்டு களித்திடணும்.

6. மதங்கள் யாவும் இணைந்திடணும். செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும். தெய்வம் மனிதம் கண்டு தொழுதிடணும்

7. தமிழே பேரண்டத்தின் மொழியாக ஆக வேண்டும். ஒவ்வோர் உயிரும் இதய வாசம் சொட்டும் கவிதைகள் எழுதவேண்டும்.

8. புத்தம் புதிதாகப் பிறக்க வேண்டும் செத்த விலங்கோடும் அன்பு வேண்டும் யுத்தம் இல்லாத பூமி வேண்டும்

9. ஏக்கமும் துக்கமும் மனதின் இடுக்குகளிலிருந்தும் உடைந்து தூள் தூள் ஆகவேண்டும்

10. வரம் தரும் தேவதையே நீ என் தேவதையை என்னிடம் தரும் தேவதையாக வேண்டும்


என்று நான் எழுதினால் “வந்துட்டாய்ங்கய்யா வந்துட்டாய்ங்க” என்று வடிவேலு வந்துவிடுவார் என்பதால் என் தத்துப்பித்துப் பத்து ஆசைகள் கீழே.

தமிழர்கள் இரண்டு விசயங்களைத் தமிழ்த் திரைப்படங்களில் விரும்புவார்கள். ஒன்று கதையின் பிரதான பாத்திரத்தின் முக்கியமான கதைக் காட்சிகள் இன்னொன்று இடையிடையே வந்து லூட்டியடிக்கும் வடிவேலுத்தனங்கள். ஆகவே ஆசைகளும் இருவேறு பட்டியலில் பிரியவே செய்யும் என்பதால் இதோ என் இரண்டாம் பத்து ஆசைகள்:

1. எப்படியாவது ஒரு பத்து ஆசைகளை யோசிக்க வேண்டும்

2. யோசித்த பத்து ஆசைகளையும் மறக்காமல் எழுதிவிடவேண்டும்

3. எழுதிய பத்தும் வாசிப்பவர்களுக்குச் சுவையாக இருக்க வேண்டும்

4. எழுதி முடித்ததும் ஒரு நாலுபேரைக் கண்டுபிடிக்க வேண்டும்

5. அந்த நாலுபேரும் பத்துப் பத்து ஆசைகள் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்

6. அவர்களின் பத்துத்பத்து ஆசைகளையும் எழுத அவர்கள் சம்மதிக்க வேண்டும்

7. சம்மதித்தவர்கள் விடு ஜூட் சொல்லிவிடாமல் அக்கறையாய் அமர்ந்து எழுதவேண்டும்

8. எழுதி முடித்ததும் அவர்களும் நாலு நாலு பேர்களைக் கண்டு பிடிக்க வேண்டும்

9. கண்டுபிடித்தவர்கள் ஏற்கனவே மாட்டிக்கொண்டவர்களாய் இருக்கக்கூடாது

10. வெட்டியாய் ஆசைகளைக் கேட்டுவிட்டு ஒன்றுமே செய்யாத தேவதையே உன்னை ராஜபக்சேவிடம் பிடித்துக் கொடுத்துவிடவேண்டும்.

அடுத்தது நான் அழைக்கும் நால்வர்:

இந்த என் இடுகையை வாசித்துக் கருத்துச் சொல்லும் பதிவர் இதுவரை இந்தத் தொடர் பதிவில் சிக்காதவராய் இருந்தால் முதலில் கருத்துச் சொல்லும் நால்வர் மட்டும் என் அழைப்பினை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அட வித்யாசமான ஆசைகள்...

ஆயிஷா said...

ஹா......ஹா........ஹா.......
நான் வரல்லப்பா இந்த ஆட்டத்துக்கு.
அன்புடன் ஆயிஷா

மயூ மனோ (Mayoo Mano) said...

உங்கள் ஆசைகள் உங்கள் கவிதைகளைப் போலவே தனித்துவமாக இருக்கின்றன. ஊர் கூடித் தேர் இழுக்கையிலே என் கையும் பயன்பட்டால் மகிழ்வேன். தேவதை நிறைவேற்றுதோ இல்லையோ, உங்கள் எழுத்து நிறைவேற்றும். உண்மைதான்.

சிவா said...

எனக்கு அந்த பிரச்சனை இல்லை ஆசான் .. என்னை சுற்றி ஒரு தேவதைகளா என்ன ... :)