தடங்கள் மாறும் சின்னவரே 

நண்பர்கள் அதிகம் கொண்ட காலம் என்றால் அது பள்ளிப்பருவம்தான். அதன் பின்னர் கல்லூரிக் காலங்கள். என் அத்தனை நண்பர்கள் மீதும் எனக்கு அன்புண்டு பாசமுண்டு அக்கறையுண்டு. திசைமாறும் நண்பர்களைக் கண்டால் வேதனை எழும் ஆனால் கோபம் வராது. அறிவுரை வழங்குவதற்குத் தகுதி என்ன? வயதா அறிவா? இந்த அறிவுரைக் கவிதைக்குக் காரணம் இரண்டுமே இல்லை, என் அன்பு மட்டும்தான். அறிவுரை கூறும் கவிதைகளை நான் நூலாய் வெளியிடுவதைத் தவிர்ப்பேன். ஆனாலும் இதை இடுகிறேன் என்றால் அதற்கும் காரணம் அதே அன்புதான், உயர்வான நட்பன்பு.


அலைமேல் தவறிய துரும்புகளாய்
ஆசைக் கரைகள் சேரும்வரை
தலைகால் புரியாத் தத்தளிப்பில்
தடங்கள் மாறும் சின்னவரே


நீதியும் நியாயமும் தின்றுவிட்டு
நித்திரை என்பதும் வருவதில்லை
ஆசைகள் இல்லா இதயமில்லை
ஆசைகள் இன்றிச் சுகமுமில்லை


செதுக்கிய ஆசைகள் சந்தோசம்
செதுக்கா ஆசைகள் சிறைவாசம்
புதுப்புது ஆசைகள் பூக்கவிடு
பொசுங்கிய ஆசையைத் தூக்கிலிடு


எட்டாக் கிளைக்கும் திட்டமிடு
எட்டிய கனிகளை முத்தமிடு
வெட்டிப் போனதை விட்டுவிடு
எட்டிப் புதியதைத் தொட்டுவிடு

  
கெட்டவை மிஞ்சிய கூடுகளில்
கொட்டுந் தேளே குடியிருக்கும்
ஒட்டிய வயிறு வெந்தாலும்
உண்ண விசமும் தொடுவாயா


நல்லதை அறியும் மனம் வேண்டும்
நல்லதைச் சுவைக்கும் நாவேண்டும்
நல்லதும் கெட்டதும் நம்மோடு
நல்லதைக் கொண்டே சுகம்தேடு

No comments: