அன்பை உயிரில் பொருத்து

2017 கனடா உதயன் பல்சுவைக் கலை விழாவில், சாலமன் பாப்பையா பட்டிமன்றங்கள் வளர்த்தெடுத்த திரு. ராஜா தலைமையில் ஒரு பட்டிமன்றம் டொராண்டோவில் நிகழ்ந்தது. சிறந்த வாழ்க்கைத் துணைக்குத் தேவை அன்பா அறிவா என்பதே தலைப்பு. அன்பு என்ற அணியில் நின்று நான் வழக்காடினேன். அதன் முத்தாய்ப்பாய்பிற்காக நான் எழுதி வாசித்த கவிதையே இது.


கண்திறந்த போதிலும்
காட்சியற்றுப் போகலாம்
பொன்னிறைத்த வீட்டிலும்
புன்னகைக்க மறக்கலாம்

விண்ணொளிரும் மீன்களும்
விழுந்தெரிந்தே போகலாம்
அன்பிருக்கும் வாழ்வுதனில்
இன்பமின்றிப் போகுமா

தரமில்லாத நாவினால்
தகரும் உறவுப் பாலமே
அறமில்லாத அறிவினால்
அழியும் உலகம் யாவுமே

ஒருவர் உயிரில் ஒருவராய்
இருவர் வாழ வேண்டுமா
அறிவைத் தூர நிறுத்து - உயர்
அன்பை உயிரில் பொருத்து


No comments: