அன்புடன் நான்

என்
தோகையையே
நான் விரிக்காதவன்

என்
நகங்களையே
நான் அணியாதவன்

ஏமாளியல்லன்
இதயம் உள்ளவன்
கோமாளியல்லன்
கருணை உள்ளவன்

மனிதநேயத்தோடு
நின்றால் கேலி

பித்தலாட்டத்தோடு
நின்றால் கைதட்டல்

உலகம் வினோதமானது
ஆனால்
நான் நானாக இருத்தல்தான்
எனக்கு இயல்பானது
இதய சுகமானது

v   

அன்புடன் நான்

கட்டிவைத்த
கரையில்லா வெள்ளம் 

எந்நாளும் நீரோடும் 
உயிர் நதி 

காலவாய்க் கொட்டுகளுக்குக்
கட்டுப்படாத தேனீ 

வெட்டிப்பேச்சு         
விரும்பாத வேங்கை

எதற்கும்
வெட்கமின்றி ஒளிவதில்லை 
கருத்தோடு நெருப்பெரியும்
காட்டுத்தீ 

விழி பார்த்து 
உள்மொழி காணும்
தேடல்

தூற்றி வெறுப்போர்க்கும்
விளக்கம் நெய்யும்
தறி

ரசனையெனும் 
அமுதக்கடலில் மிதப்பு
 
அதில் துடிப்புகளின் 
துடுப்புகளாய் அலைவு

பொய்கேட்டுத் 
தீயாகும் ரத்தம்

விரோதிக்கும் அன்பளித்து 
வாக்களிக்கும் நெஞ்சம்

v   

அன்புடன் நான்

னக்குள்
எரியும் நெருப்பை
திரியில் ஏற்றும்
எரிமலை

புழுக்கள்
நிறைந்த பூமியைச்
சலிக்கத் தெரிந்த
சல்லடை

அனுபவ
ரத்தம் திரித்து
பாலாய்ச் சுரக்கும்
மார்பு

மொழியின்
வேர்கள் உலுக்கிப்
பூக்கள் கொட்டும்
காம்பு

உணர்வின்
விரல்கள் விரித்து
உழலும் உயிர்க்கு
மருந்து

நிலவும்
வாழ்க்கை வழக்கில்
தலைமுறை கடந்த
தீர்ப்பு

மறுக்கும்
தரையை மிதித்துப்
பறக்கத் தெரிந்த
சிறகு

v   

அன்புடன் நான்

கருணை அன்பு
கணக்கற்றுப் பொங்கும்
கணங்களில்

கலை இலக்கியச்
சுகமடிகளில்
கண்மூடித் துடிக்கும்
பொழுதுகளில்

இரக்கமெனும் ஈகைநதி
இதயம் நிறைத்துப் பாயும்
பொழுதுகளில்….

நெகிழ்கிறேன் நெகிழ்கிறேன்
நெகிழ்ந்துடைந்தே வழிந்துயர்கிறேன்

நெகிழ்ந்து
என்
விழிமணிகளை
உதிர்த்து
நான்
மெல்ல அழும்
பொழுதுகளில்தான்
ஈடற்ற இதய சுகத்தை
இன்னும் வேண்டும்
என்ற
ஏக்கத்தோடு அனுபவிக்கிறேன்

No comments: