***14

வெட்கப்பட நேரமின்றி

சின்ன அலைகளின் முத்து நீர் விழுங்கி
முத்தமிடும் தென்றலை
எட்டி எட்டிப் பார்த்து
தெளிந்த நீரில் நீந்தித் திரியும்
சின்னஞ்சிறு தங்கமீனை
செதிள்கள் பெயர்ந்து சுக்குநூறாக
கருங்கல்லின் சொறசொறப்பில்
முன்னும் பின்னும் அழுந்தத் தேய்க்கும்
ராட்சச இறும்புக் கரங்களாய்தான்
ஒவ்வோர் உயிருக்கும்
வாழ்க்கை இங்கே அறிமுகமாகிறது

இதை
இப்படியாய் வகுத்துக்கொண்ட
நாம்
அதன் கோரத்தில் சிக்கிக்கொண்டு
வெறுமனே வெட்டியாய்
விதியே என்று
சுழன்றுகொண்டிருக்கிறோமா
வெட்கப்படவும் நேரமின்றி?

7 comments:

சீதாம்மா said...

வெட்கப்பட நேரமின்றி என்றல்ல
வேதனைத் தீயில் வேகும் நெஞ்சத்துடன்
வீழ்ந்து கிடக்கின்றோம்
வாழ்ந்து கொண்டிருக்கவில்லை

Unknown said...

அதற்குக் காரணமும் நாம்தான் என்பதால் நாம் வெட்கப்படத்தானே வேண்டும் சீதாம்மா?

சாந்தி said...

வெறுமனே வெட்டியாய்
விதியே என்று சுழன்றுகொண்டிருக்கிறோமா
வெட்கப்பட நேரமின்றி!

வெட்கப்பட்டால் இன்னும் வேதனையாக இருந்திடுமோ என்ற பயமாய் இருக்கும்.

பூங்குழலி said...

பெரும்பாலானோர் அப்படிதான் வாழ்கிறோம் புகாரி ..ஆனால் வேறு விதமாக வாழ அனைவருக்கும் வாய்ப்பதில்லை ...விருப்பமிருந்தாலும் .அதானால் தேய்க்கப்படுவதில் முதலில் வலி இருந்தாலும் பிறகு அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது என்று பழகிக் கொள்கிறோம்

Unknown said...

பூங்குழலி,

வாழ்க்கை வெறுமனே சமாளிப்பா? நாம் வாழ வேண்டாமா?

நாம்தானே வாழ்க்கையை வகுத்தோம். நம்மால் மாற்றமுடியாதா?

அன்புடன் புகாரி

துரை said...

வாழ்க்கையின் அவலத்தை இதைவிட சிறப்பாக இதுவரை எனக்கு அறிமுகப்படுத்தியதில்லை
திகைக்கவைக்கும் காட்சியாய் கண்முன் விரிகிறது

சீனா said...

அன்பின் புகாரி

இயலாமைதான் காரணம் புகாரி - என்ன செய்வது

கவிதை அருமை

நல்வாழ்த்துகள் புகாரி