23

சில நொடிகளில் உடைந்துபோனால்
அது மழைக்கால நீர்க்குமிழி

சில மணிகளில் கரைந்துபோனால்
அது பாலைவன மணல்மேடு

சில நாட்களில் உதிர்ந்துபோனால்
அது மொட்டவிழ்த்த மல்லிகை

சில மாதங்களில் வற்றிப்போனால்
அது வசந்தகால வாய்க்கால்

சில வருடங்களில் சிதைந்துபோனால்
அது வாலிபத்தின் வனப்பு

சில யுகங்களில் மறைந்துபோனால்
அது தொலைதூர நட்சத்திரம்

தீர்ந்தே போகாத ஒன்று உண்டெனில்
அது நீ தரும் பிரிவுத்துயர்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

vasu balaji said...

/தீர்ந்தே போகாத ஒன்று உண்டெனில்
அது நீ தரும் பிரிவுத்துயர்/

அருமைங்க புகாரி.

சீனா said...

அன்பின் புகாரி

அருமை அருமை கவிதை அருமை

இருப்பினும் தீர்ந்தே போகாத ஒன்று கிடையாது - பிரிவு மாறி நட்பாகலாம் - அல்லது துயரம் மறந்து போகலாம்

யுகங்கள் கடந்து மறையும் தொலைதூர நடசத்திரங்களை விடவா - பிரிவுத் துயர் தீராமல் இருக்கும் -

கவிஞனின் கற்பனை வளம் - இன்பிஃனிட்டி என்பதே - துயரத்திற்கு தீர்வே இல்லை என்பது.

படைக்கப்பட்டவை எல்லாம் ஒரு நாள் அழியும்

இதுதான் உண்மை

நல்வாழ்த்துகள்

பிரசாத் said...

நல்ல நயமான கவிதை...

ஆனால் நான் உங்கள் கருத்திலிருந்து மாறுபட்டிருக்கிறேன். கடைசி வரியில்
மட்டும். (இங்கு நீங்கள் இப்பிரிவை எந்த அர்த்தத்தில் தந்தீர்கள் என்று
தெரியாது. மரணமா அல்ல வேறொருவனுக்கு மனையாக செல்வதா. எப்படி இருந்தாலும்)
மனதில் வாழ்க்கை நடத்தும் காதலியானவள் உடலளவில் பிரிந்தாலும் உங்கள்
உள்ளத்தில் தானே இருக்கிறாள்... அங்கு பிரிவு உடலுக்கே அன்றி
உள்ளத்திற்கு அல்ல... மனதார ஒருவளுடன் வாழ ஆரம்பித்தால் பிரிவு என்பதை
சொல்ல இயலாது. இது என்னைப் பொறுத்த வரை மட்டுமே...

Unknown said...

அன்பின் பிரசாத்,

இதைக் காதல் பிரிவு என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உங்களால் பிரியவே முடியாத ஒரு உறவின் நட்பின் உயிரின் பிரிவாகவும் எண்ணிப்பாருங்கள்.

பிரிவை உடல் பிரிவு என்றும் நினைக்காதீர்கள். எண்ணங்களால் பிரிவு, நம்பிக்கையால் பிரிவு, உணர்வுகளால் பிரிவு, உயிரால் பிரிவு என்று எதை வேண்டுமோ உங்கள் நிலைக்கேற்ப எடுத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன் புகாரி