ஜெயபாரதனைப்போல அறிவியல் எழுதும் இன்னொருவர் தமிழில் இல்லை

ஜெயபாரதனைப்போல அறிவியல் எழுதும் இன்னொருவர் தமிழில் இல்லை

ஏறக்குறைய பதினைந்து வருடங்கள் இருக்கும்

நான் என் குடும்பத்தோடு
270 கிலோமீட்டர் தூரம் வாகனம் ஓட்டிக்கொண்டு
கின்கார்டைனிலுள்ள ஜெயபாரதன் வீட்டிற்குச் சென்றேன்

அவரோடு சில தினங்கள் தங்கி நட்பைப் கொண்டாடிவிட்டு
அந்த ஆனந்த நினைவுகளோடு டொராண்டோ வந்துசேர்ந்தேன்
என்றும் எங்கள் நெஞ்சில் பசுமையாய் நிற்கும்
ஓர் அருமையான பயணம் அது

ஜெயபாரதன் தனியேதான் இருந்தார் ஆனால் தனியே இருக்கவில்லை

வீடுநிறைந்த புத்தங்கள் தோட்டம் நிறைந்த செடிகொடிகள்

ஜெயபாரதன் ஒரு விஞ்ஞானிமட்டுமல்ல
கருவேப்பிலைச் செடியை வெகு சிறப்பாகக்
கனடாவில் வளர்க்கும் தேர்ந்த விவசாயியும்கூட

ஜெயபாரதனின் துணைவியார்
மகள்வீட்டிற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்

மகள்கள் இருவரும் வெள்ளையரை மணந்துகொண்டு
மூத்தவர் ஹாலிபாக்ஸிலும் இளையவர் டொராண்டோவிலும்
குழந்தைகளோடு மகிழ்ச்சியாய் வாழ்வதாகச் சொன்னார்

என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்று
தலைப்புகளை வாசித்து முடிக்கவே எனக்கு நேரம் போதவில்லை

அவற்றுள் பெரும்பாலானாவை தமிழ் நூல்கள்
சற்றே குறைந்த எண்ணிக்கையில் ஏனையவை ஆங்கில நூல்கள்

இலக்கியமும் விஞ்ஞானமும் இரண்டறக் கலந்து
புத்தக அலமாரிகளில் நீக்கமற நிறைந்திருந்தன

ஸ்காட்சிஷ் மக்கள் குடியேறி வாழும் கின்கார்டின் ஓர் அழகிய கிராமம்
அதன் அத்தனை அழகும் ஏரிக்கரைகளில் ததும்பி வழிந்தன

ஓரிடமும் மீதம் வைக்காமல் எங்களை அழைத்துச் சென்று
காட்டிமகிழ்ந்தார் விருந்தோம்பலிலும் சிறந்த ஜெயபாரதன்

இன்று அவர் வயது 84
தன் உடல்நலம் முன்புபோலில்லாமல் குன்றிவருவதாகவும்
உடலுழைப்புகள் குறைந்துவிட்டதாகவும்
வாசிப்பும் எழுத்தும் அதிகரித்துவிட்டதாகவும் சொன்னார்

விழுத்தெழுக என் தேசம் என்ற கவிதைநூல் படைத்திருப்பதாகவும்
வழமைபோல் அதற்கும் என் அணிந்துரை வேண்டும் என்றும்
அன்போடு கேட்டுக்கொண்டார்

நானோ விடுப்பில் தமிழகம் சென்றுவிட்டேன்
இம்முறை இயலாது என்னால் காலதாமதப்படுத்திவிடாமல்
நூலை அச்சிடுங்கள் உங்களின் அடுத்த நூலுக்கு
அணிந்துரை தருகிறேன் என்றேன்

ஆனால் அவரோ என்னை விடுவதாயில்லை
எல்லாம் முடிந்த பின்னும் பதிப்பகத்தார் இறுதி தினம் குறிப்பிட்டு
அதுவும் முடிந்தபின்னும் எனக்காகக் காத்திருப்பதாகவும்
கனடாக் கவிஞரின் அணிந்துரையின்றி நூல் வெளிவராது என்றும்
கராராகச் சொல்லிவிட்டார்

நான் இன்னும் நூலை வாசிக்கவே இல்லை
வாசிப்பேன் ஆனாலும் அதை வாசிக்காமலேயே
எனக்கொரு நீண்ட அணிந்துரை தந்துவிடமுடியும்

அது வேறு எழுத்தாளர்களுக்கோ கவிஞர்களுக்கோ
இயலாததாகவே இருக்கும்

ஏனெனில் அவரை நேரில் சந்தித்து
நெருக்கமாய்க் கண்டுணரும் நற்சூழலைப் பெற்றவன் நான்

யாரிந்த ஜெயபாரதன் என்றால்
அவரின் அறிவியல் கட்டுரைகளைச் சொல்வார்கள் சிலர்
அவரின் கவிதைகளைச் சொல்வார்கள் சிலர்
அவரின் கருத்தாடல்களைச் சொல்வார்கள் சிலர்
நானோ அவரையே யாரென்று சொல்ல வருகிறேன்

இந்த வயதிலும் ஓய்வென்று ஓய்ந்துவிடாமல்
தமிழுக்காக உழைக்கும் பெரிய மனிதருக்கு
என்போன்ற சிறியவன் அணிந்துரை தருவது சரியல்ல
ஆனால் என்னிடமும் அணிந்துரை கேடுப் பெறுவதுதான்
ஜெயபாரதனின் உயர்பண்புகளுள் ஒன்று

அவராகட்டும் அவரின் அறிவாகட்டும்
அவரின் விருந்தோம்பலாகட்டும் அவரின் மரியாதையாகட்டும்
அல்லது அவரின் கலையும் பண்பாடுமாகட்டும்
எல்லாமே தனியுயரத்தைத் தாவிப்பிடித்தவை

டொராண்டோ வாருங்கள் வந்து என்னோடு ஒருவாரமேனும்
தங்கிச் செல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறென் உங்களை என்று
அன்புடன் அழைத்தேன்

அவ்வளவு தூரமெல்லாம் வாகனம் ஓட்டுவது
இயலுவதில்லை புகாரி என்று அன்போடு மறுத்தார்
சரி நான் வருகிறேன் விரைவில் என்று வாக்குக் கொடுத்தேன்

இந்த வயதிலும் அவர் எழுதுகிறார் என்பதே ஒரு கவிதை

ஆயினும் அவரின் இந்தக் கவிதை நூலையும் வாசித்து
கருத்தெழுதாவிட்டால் இந்த அணிந்துரை நிறைவடையாதல்லவா
கூடவே பொருளற்றதாகவும் ஆகக் கூடுமில்லையா

ஆகையினாலேயே கவிதை நூலை வாசித்து முடித்தேன்
இடையிடையே நான் முடிச்சுகள் இட்டுவைத்தவற்றை
இங்கே கொஞ்சம் அவிழ்த்து வைக்கிறேன்

எல்லாம் சொல்லிவிட்டால் நீங்கள் பின்
எதைபின் வாசித்து நேசிக்கப் போகிறீர்கள்

இக்கவிநூலின் தொடக்கத்தில் அவரின் அதீத பற்றுகாரணமாக
இந்திய நாட்டிற்கு தேசிய கீதம் எழுதியிருக்கிறார்
தமிழ் நாட்டிற்கு வாழ்த்துப்பாடல் அமைத்திருக்கிறார்
தமிழ்த் தாய்க்கு வாழ்த்துக் கவிதை கட்டியிருக்கிறார்
கனடிய தேசிய கீதத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
கனடிய தேசத்திற்கு வாழ்த்துப்பா பாடி இருக்கிறார்

இவற்றுக்காக மட்டுமே இந்த நூல் தனியே பாராட்டப்பட வேண்டும்

போதி மரம் தேடி என்ற கவிதையில்

படித்தேன் தெரு விளக்கில்
விடிய விடிய விழித்து
படிக்க வேண்டா வற்றை
படிக்கத் தேவை யானவை எல்லாம்
பட்டப் படிப்பில் இல்லை
படித்தேன், படித்தேன் தேர்வுக்காக
உயர்ந்த மதிப்பெண் வாங்கினேன்
வாழ்வில் கிடைத்தது பெரிய பூஜியம்

பாடத்திட்டத்தின் அவலத்தை எத்தனை அழுத்தமாய்
அனுபவத்தில் தோய்த்துச் சொல்கிறார் பாருங்கள்

பூரண சுதந்திரம் யாருக்கு என்ற கவிதையில்

மசூதியை இரவிலே தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவகாளிச் சுதந்திரம்
பூரண சுதந்திர நாட்டில்
மதம் பிடித்த யானைகள்
மனித நேயத்தை மிதிக்கும்.
சுதந்திர நாட்டில்
மதக் கோலத் திருவிழா 
கும்ப மேளா !

சுதந்திரம் எப்படிக் கெட்டுச் குட்டிச்சுவராய்ப் போனது என்பதை
காட்சியமைபோடும் உண்மைச் சம்பவங்களின் அணிவகுப்போடும்
சொல்வது சிறப்பல்லவா?

தொடுவானம் என்ற கவிதையில்

தோல்விக்குப் பின்
கற்றது
கால்பந் தளவு !
வெற்றி பெற்ற பின்
கற்றது
கடுகு அளவு !

தோல்விதான் ஆசான் என்பதை எத்தனை அழகாகச் சொல்கிறார்கள் பாருங்கள்

அணு, அகிலம், சக்தி என்ற கவிதையில்

பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
பொரி உருண்டை ஒன்று
பரமாணுக் களாகி,
துணுக்காகி அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகித்
துண்டுக் கோள்கள் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகிப் பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகித்
சீராகிச் சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாசபந்த ஈர்ப்பில்
அணைத்து
அம்மானை ஆடினாள் என்
அன்னை !

தன் அறிவியல் அறிவையும் மெய்ஞான அறிவையும்
இணைத்துக் கலந்து இவர் வடிக்கும் கவிதைகள் வித்தியாசமானவை
பலருக்கும் எழுத இயலாதவை என்றும் சொல்லலாமல்லவா?

ஜெயபாரதன் நூறாண்டுகள் தாண்டி நோய்நொடியின்றி வாழவேண்டும்
அவரின் அறிவியல் கட்டுரைகளால் தமிழுலகை
மேலும் மேலும் மூழ்கடித்தவண்ணமாய் இருக்க வேண்டும்

நானறிந்து ஜெயபாரதனைப்போல அறிவியல் கட்டுடைகளை
நாளெல்லாம் பொழுதெல்லாம் எழுதும் இன்னொருவர் தமிழில் இல்லை

நான் ஜெயபாரதனை பாராட்டுகிறேன் ஒரு கவிஞனாய்
நான் ஜெயபாரதனுக்கு நன்றி சொல்கிறேன் ஒரு தமிழனாய்

உறுதியாகத் தமிழ்த்தாய் பூரிப்பாள் பொங்கி நிற்பாள்
அறிவியல் தமிழெடுத்து தினம் தினம் என்னை நீ
ஆராதிக்கிறாயே என்று

வெற்றி வாழ்க்கை வாழ்கிறீர்கள் ஜெயபாரதன்
எந்நாளும் அழிவே இல்லை உங்களுக்கு

அன்புடன்
கவிஞர் புகாரி
அக்டோபர் 2018, கனடா










No comments: