இந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல கவிதைகள் எழுதப் போறீங்க?

நல்லா கவிதை எழுதறீங்க. கற்பனை வளம் எழுத்து நடை எல்லாமே அமோகமா இருக்கு. ஆனால், இந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல கவிதைகள் எழுதப் போறீங்க?

அநேகமாய் ஒவ்வொரு கவிஞனும் இந்த வரிகளால் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் வலைவீசிப் பிடிக்கப்பட்டிருப்பான்.

பலருக்கும் ரோஜா தோட்டங்களைப் பிடிப்பதில்லையோ சுண்டைக்காய் பயிரிடுங்கள் என்று
சட்டென்று சொல்லிவிடுகிறார்களே என்று தோன்றும். ஆனால் ரோஜாத் தோட்டங்களில் புகுந்து வெளிவராமல் உருண்டு புரள்பவர்களின் முதன்மையானவர்கள் இவர்களாகத்தான் இருபார்கள்.

கவிஞன் ஒரு வினோதமான தாவரம். இந்தத் தாவரத்தில் ரோஜாக்களும் மல்லிகைகளும் பூக்கும். ஆப்பிள்களும் முந்திரிகளும் பழுக்கும். நெல்மணியும் கோதுமையும் விளையும். வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் என்று எதுவேண்டுமோ காய்க்கும். சில சமயம் கோழி முட்டை ஆட்டுக்கால் சூப்கூட கிடைக்கலாம்.

வெண்டைக்காய் மட்டுமே காய்த்தால்தான் நல்ல தாவரம் என்று கவிதைத் தாவரங்களிடம் எவரும் சட்டம் போடக்கூடாது. அவற்றை அவற்றின் இயல்பிலேயே விட்டால்தான், காய்ப்பவையும் பூப்பவையும் சிலிர்ப்புகள் உதிர்ப்பனவாய் அமையும்.

தாவரத்தை ஊசிகளால் குத்திக் காயப்படுத்தினாலோ ரம்பங்களால் அறுத்து கோடுகள் கிழித்தாலோ, விளைவு நன்றாக இருக்காது. சீக்கிரமே பட்டுப்போய் கீழே விழுந்துவிடவும்
வாய்ப்புகள் உண்டு.

ஆனாலும் உண்மையான தாவரங்கள் இந்தக் கல்லெறிகளுக்கெல்லாம் கட்டுப்படாமல், தன் விருப்பம்போல் வாரிவழங்கி புசிப்போரைக் குவித்து நிலைத்துவிடும்.

கவிஞன் அப்படிப்பட்ட ஒரு தாவரம்!

3 comments:

பாச மலர் / Paasa Malar said...

சில ரசிகர்களின் சில பார்வைகள்...

பூங்குழலி said...

ஏன் ?காதல் கவிதைகள் நல்ல கவிதைகள் இல்லையா ?

>>>>பலருக்கும் ரோஜா தோட்டங்களைப் பிடிப்பதில்லையோ சுண்டைக்காய் பயிரிடுங்கள் என்று
சட்டென்று சொல்லிவிடுகிறார்களே என்று தோன்றும். ஆனால் ரோஜாத் தோட்டங்களில் புகுந்து வெளிவராமல் உருண்டு புரள்பவர்களின் முதன்மையானவர்கள் இவர்களாகத்தான் இருபார்கள்.<<<<

:)))))))))


>>>>கவிஞன் ஒரு வினோதமான தாவரம். இந்தத் தாவரத்தில் ரோஜாக்களும் மல்லிகைகளும் பூக்கும். ஆப்பிள்களும் முந்திரிகளும் பழுக்கும். நெல்மணியும் கோதுமையும் விளையும். வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் என்று எதுவேண்டுமோ காய்க்கும். சில சமயம் கோழி முட்டை ஆட்டுக்கால் சூப்கூட கிடைக்கலாம்.<<<<

அதிசயமான செடி தான்

>>>வெண்டைக்காய் மட்டுமே காய்த்தால்தான் நல்ல தாவரம் என்று கவிதைத் தாவரங்களிடம் எவரும் சட்டம் போடக்கூடாது.<<<<

ரொம்ப சரி

ஒருவேளை வெறும் சுண்டைக்காயை மட்டுமே காய்த்துக் கொண்டிருந்து விடுமோ என்று அஞ்சுவார்களோ என்னமோ ?

>>>>தாவரத்தை ஊசிகளால் குத்திக் காயப்படுத்தினாலோ ரம்பங்களால் அறுத்து கோடுகள் கிழித்தாலோ, விளைவு நன்றாக இருக்காது. சீக்கிரமே பட்டுப்போய் கீழே விழுந்துவிடவும்
வாய்ப்புகள் உண்டு.<<<<

சரிதான்

>>>ஆனாலும் உண்மையான தாவரங்கள் இந்தக் கல்லெறிகளுக்கெல்லாம் கட்டுப்படாமல், தன் விருப்பம்போல் வாரிவழங்கி புசிப்போரைக் குவித்து நிலைத்துவிடும்.<<<

ஏன் புகாரி ?பட்டு போய்விட்டால் நிஜ கவிஞன் இல்லாமல் ஆகிவிடுமா ?

சீனா said...

அன்புடன் அன்பர்களே

விவாதம் சூடு பிடித்துப் பல்வேறு சிந்தனைகள் வருகின்றன

கவிஞன் என்பவன் மற்றவர்களுக்காக எழுதுவதில்லை. அவனுக்குப் பிடித்தவற்றை - அவனுள் எழும் எண்னங்களை - அவனது மன நிலையினை கவிதையாகப் படைக்கிறான். அவை படைக்கப்ப்டும் விதம் வெண்பா - குறும்பா - பாடல் - எனப் பலவகையாகிறது. அவன் எழுதும் கவிதைகள் மற்றவர்களுக்கும் பிடிக்கும் பொழுது அவனுக்கு ரசிகர்கள் கூட்டம் வருகிறது. அவ்வளவுதான்.

மற்றவர்களுக்காக கவிதைகள் எழுதுவது - காசுக்காக எழுதும் திரைப்படல் பாடல்களாக இருக்கும்.

கவிஞனை வெண்பா எழுதுக எனக் கட்டாயப்படுத்தக் கூடாது. வெண்பா எழுத இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். தமிழறிவு அதிகம் இல்லாதவர்கள் எழுத முடியாது. க்விஞர்கள் விரும்பினால் வெண்பாவும் எழுதட்டும் குறும்பாவும் எழுதட்டும். யார் யாருக்கு என்ன வேண்டுமோ அவரவர்கள் வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளட்ட்டும்.