ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல



அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட பாட்டி மாறிவிட்டாள். நாலு எழுத்துப் படித்தால்தானே நல்லது கெட்டது தெரியும், புருசனைத் தெரிஞ்சிக்கவாவது படிப்பு வேணாமா என்கிறாள் இன்று.

ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு அலைகிறேன் என்ற தாய் மாறிவிட்டாள். ஒண்டியா நின்னாலும் எல்லாத்தையும் காப்பாத்தற வக்கு வேணும் அடங்கிப்போகவும் தெரியணும் அடக்கவும் தெரியணும் இணையா நின்னாத்தானே அது குடும்பம் என்கிறாள் இன்று.

இந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்தாலும் கணினிப் பட்டப்படிப்பில் பல்கலைக்கழகம் கண்டாலும்
கைக்கெட்டிய தூரத்தில் பல நிறுவனங்களின் நிர்வாகப் பதவிகளே காத்துக்கிடந்தாலும் உனக்கு அடிமையாய் வரக் காத்திருக்கிறேன் என்கிறாள் மகள்.

காதல் என்பது வாலிப மனங்களில் தவறாகத்தான் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. காதல் என்பது புனிதமான அர்பணிப்புதான் அதில் சந்தேகமே இல்லை ஆனால் ஒருவரை இன்னொருவருக்கு அடிமையாய் அர்ப்பணிப்பது அல்ல. இருவரும் சேர்ந்து தங்களைக் காதலுக்கு அர்ப்பணிப்பது.

அப்படி அர்ப்பணிப்பவர்கள்தான் ஒருவரை ஒருவர் உயர்வாய் மதித்து நடப்பர் ஒருவரை ஒருவர் ஓயாது உயர்த்தி வாழ்வர். கண்ணுக்குள் வைத்துக் காப்பேன் என்று வீட்டுக்குள் வைத்து பட்டும் பவளமும் தந்து கிளிப்பிள்ளை ஆக்கமாட்டார்கள்.

மணமகளின் இடது கையை மணமகனின் வலது கையில் ஒப்படைக்க மணமகனின் இடது கை மணமகளின் வலதுகையில் ஒப்படைக்கவேண்டும். அதுதான் வாழ்க்கை. மற்றதெல்லாம் திருமணம் என்ற பெயரில் உறுதி செய்யப்படும் அடிமைத்தனங்கள்.

தூக்கிச் சுமப்பதல்ல வாழ்க்கை. இணையாகக் கைகோப்பதும், கைகோக்கும் வலுவினை தன் துணைக்குத் தானே உருவாக்கித் தருவதும்தான் வாழ்க்கை. ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல

11 comments:

Anonymous said...

காதலைப் பற்றியும், இயற்கையான இல்லற வாழ்வினைப் பற்றியும் ஒரு அருமையான சிந்தனை. எப்படி வாழ வேண்டுமென்பது அருமையாக விளக்க்கப் பட்டிருக்கிறது.


//மணமகளின் இடது கையை
மணமகனின் வலது கையில்
ஒப்படைக்க
மணமகனின் இடது கை
மணமகளின் வலதுகையில்
ஒப்படைக்கப்படவேண்டும்
அதுதான் வாழ்க்கை//

வைர வரிகள்

அன்புடன் ..... சீனா

Anonymous said...

காதல் என்பது
வாலிப மனங்களில்
தவறாகத்தான்
புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது

காதல் என்பது
புனிதமான அர்பணிப்புதான்
அதில் சந்தேகமே இல்லை

ஆனால்
ஒருவரை இன்னொருவருக்கு
அடிமையாய் அர்ப்பணிப்பது அல்ல
இருவரும் சேர்ந்து தங்களைக்
காதலுக்கு அர்ப்பணிப்பது

அப்படி
அர்ப்பணிப்பவர்கள்தான்
ஒருவரை ஒருவர்
உயர்வாய் மதித்து நடப்பர்
ஒருவரை ஒருவர்
ஓயாது உயர்த்தி வாழ்வர்

அருமையான நிதர்சனமான வரிகள் ஆசான்
--

அன்புடன்
சிவா...

Anonymous said...

mr.pukaree...ithuvarai ungkal eluthakalai naan paditthathillai(amma ivaru padikalainaalum...)
but intha kavithai ..kavithai enpatha... vupadesam or...nijam...sathiyamanavaikal..
vunarnthu anupavithu eluthapattavi enpathaa..
ellaam nijam..
nalla elakkanam.. kaathalin arumai or ippadithaan entu sollapattirukirathu... ayyaa nantaga irukirathu..paaraattu..
100 Marks

Anonymous said...

காதல் பற்றியும் உறவு பற்றியும் உன்னதமான சிந்தனைப் பகிர்வுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

Anonymous said...

அன்புள்ள நண்ப,

வலைப்பூ வலம்வந்தேன். கலைப்பாக் கவிஞனுக்குச் சுவைஞர்கள் சூட்டிய
தலைப்பாக்களையும் கண்டு உவந்தேன். வாழ்த்துக்கள்!

- வி. கந்தவனம்

Anonymous said...

>தூக்கிச் சுமப்பதல்ல
வாழ்க்கை
....

ஆஹா..

அற்புதமான மிகவும் பொருள்பொதிந்த
வரிகள்.
வாழ்த்துகள் நண்பா.
நட்புடன்,
புதியமாதவி.

வேந்தன் அரசு said...

நீங்க சொல்லுறது சரிதான்

ஆனாலும் என் காதலிக்கு நான் அடிமையாகவே ஆசைபடுகிறேன்
அவர் கடைக்கண் பார்வையில் விண்ணையும் சாடுவேன்.
அன்பு கொண்டோருக்கு அடிமையாவது தனி சுகம்

(வேறு படம் தேர்ந்து இருக்கலாம்)

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

சாந்தி said...

ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல


ம். அழகா சொல்லப்பட்டிருக்கு

பூங்குழலி said...

சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல

நச்சென்று சொன்னீர்கள் புகாரி ...எல்லோர் மனதிலும் பதிக்கப்படவேண்டிய சொற்கள்

சீனா said...

உண்மை உண்மை புகாரி

சுய கவுரவம் என்பது காக்கப்பட வேண்டும் - யாரையும் யாரும் நம்பி இருக்கக் கூடாது

விட்டுக்கொடுப்பது வேறு அடிமையாவது வேறு

நன்றாகச் செல்கிறது எண்ண ஓட்டங்கள்

நல்வாழ்த்துகள் புகாரி

அன்புடன் மலிக்கா said...

காதலென்பது கன்னியதிற்குறியது
அதை
கசக்கிப்பிழியாமல் காப்பது நல்லது.

//தூக்கிச் சுமப்பதல்ல வாழ்க்கை. இணையாகக் கைகோப்பதும், கைகோக்கும் வலுவினை தன் துணைக்குத் தானே உருவாக்கித் தருவதும்தான் வாழ்க்கை. ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல//

நல்ல அறிவுரை
பாரட்டுக்கள்