நீடூரலி அண்ணா, என் பெயருக்கான விளக்கத்தை ஒருவருக்கு நான் எழுதினேன்.அதை அப்படியே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். 

ஹசன் புஹாரி என்று பலரும் என் பெயரை எழுதுகிறார்கள்.
இப்போது நீங்கள் ஹசன் என்று எழுதி இருக்கிறீர்கள். என் பெயரை மீண்டும் ஒருமுறை இச்சபையில் கூறுகிறேன். என் பெயர் புகாரி, என் தந்தையின் பெயர் அசன்பாவா.

புகாரி என்பதை புஹாரி என்றுதான் நானும் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் இடையில் வரும் க என்ற எழுத்து,  ஹ என்ற ஓசையையே பெறும் என்பதால் புகாரி என்று எழுதுகிறேன்.

ஹ ஜ ஷ ஸ போன்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் அல்ல. சமஸ்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட எழுத்துமுறை. அந்த எழுத்துக்களின் பெயர் கிரந்தம்.

நான் ஒரு தமிழ்ப்பற்றாளன், ஆனால் வெறியன் அல்ல. ஆகவே அவசியமான இடங்களில் மட்டுமேகிரந்தம் பயன்படுத்துவேன்.

புகாரி என்பது சரியாகவே உச்சரிக்கப்படும் வகையில் அமைந்திருப்பதால் அப்படியே பயன்படுத்துகிறேன்.
ஹசன்பாவா என்பதுதான் என் தந்தையின் பெயர். எனக்கு விபரம் தெரியும் முன்பே
அவர் உயிரை விட்டுவிட்டார். ஊரில் மிகுந்த செல்வாக்குடையவர். அவர் பெயர் அசன்பாவா என்றுதான் பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிவாசல் போன்ற
கல்வெட்டுகளிலும் இருக்கின்றது.

அவரின் தமிழ்ப்பற்று எனக்குத் தெரியாது. அவரை அப்படி எழுதவைத்தவர் யார் என்றும் தெரியாது. ஆனால் அவர் அசன்பாவா என்று தன் பெயரை எழுதி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அவரின் தமிழ்ப்பற்று பிடித்திருக்கிறது. எனக்கான தமிழ் மூலமும் அவராகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொள்ளப் பிடிக்கிறது.

ஆகவே அவர் பெயரை அப்படியே பயன்படுத்துகிறேன். இனி என் பெயரைச் சொல்லி அழைப்பதும், என் தந்தைப் பெயரைச் சொல்லி அழைப்பதும், உங்கள் விருப்பம் எனக்கு ஆட்சேபனை இல்லை.

நான் கனடா வந்ததும் என் பெயர் இப்படித்தான் மாறிவிட்டது
முதல் பெயர்: அசன்
இடைப்பெயர்: பாவா
குடும்பப்பெயர்: புகாரி
இது இந்தியாவில் எடுத்த என் கடவுச்சீட்டில்-பாஸ்போர்ட்டில் உள்ள என் பெயரின் காரணமாக அமையப்பெற்றது.

என்னை அலுவலகத்தில் ”அசான்” என்றும் ஓசைகூட்டி அழைக்கிறார்கள். சில அலுவலகங்களில் புகாரி என்றும் அழைத்ததுண்டு. இரண்டும் எனக்கு பழகிவிட்டது.
தமிழ் வட்டத்தில் இளையவர்கள் மரியாதை காரணாம
ஆசான் என்றும் அழைப்பார்கள்.
 
ஆனால் நான் என் அனைத்து மடல்களிலும் கீழே உள்ளதுபோலத்தான் கையொப்பம் இட்டுத்தான் நிறைவு செய்வேன்.

அன்புடன் புகாரி

1 comment:

mohamedali jinnah said...

மிக்க நன்றி அண்ணா தங்கள் விளக்கத்திற்கு
நான் முஹம்மது அலி என்று எழுதாமல் முகம்மது அலி என எழுதுவதில் தவறு இல்லை என நினைக்கின்றேன்
அன்புடன்
முகம்மது அலி