நலமா என்றான்
இல்லை
நலமாக இருக்கிறேன்
என்றேன்

அடடா
என் இயல்பான கேள்விக்கே
இப்படி ஓர்
அதிநவீன கவிதையா
என்று சிலிர்த்தான்


அப்படியா
என்றேன்

ஓகோ
தெரியாதவனைப் போல
என்னைச் சோதிக்கிறாயா

அதிநவீன கவிதைகளைச்
சரியாய்ப்
புரிந்துகொள்ள
பயிற்சி வேண்டும்
என்று எனக்குத் தெரியும்

என்னைப் பாமரன்
என்று நினைத்து
பம்மாத்து காட்ட வேண்டாம்

அதிநவீன கவிஞர்கள்
தங்கள் படைப்புகளுக்குப்
பொருள் சொல்லமாட்டார்கள்

அவர்கள்
ஆக்கப் பிறந்தவர்கள்
ஆக்கியவற்றை விளக்கப்
பிறந்தவர்கள் அல்லர்

எனக்குப் புரிந்த பொருளை
ஒரு வாசனாய்ச் சொல்கிறேன்
சரியாக இருக்கிறதா
என்றும் சொல்லவேண்டாம்
மௌனமாய்
நகர்ந்தாலே போதும்
நான்
புரிந்துகொண்டுவிடுவேன்

அதிநவீனக்
கவிதைகளை மட்டுமல்ல
அதிநவீனக்
கவிஞர்களையும்
எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்
என்று எனக்கு
நன்றாகத் தெரியும்

இதோ
உன் கவிதையின்
ஆழ்பொருள்

நலமா என்றேன் நான்
இல்லை என்றாய் நீ
ஏனெனில்
நான் நினைக்கும் நலத்தில்
நீ இல்லை

அதோடு நில்லாமல்
தொடர்ந்து
நலமாக இருக்கிறேன்
என்றாய் நீ

ஏனெனில்
இது
நீ நினைக்கும் நலம்

உன்
நல அகராதிப்படியான
நலம்

என்
அகராதிப்படியான
நலம் இல்லை

அடடா
எத்தனை ஆழம்
உன் கவிதையில்
என்று வியந்தான்

விருதுதர
என் முகவரிக்கு வராதே
ஆம்
என் முகவரிக்கு வா
என்றேன்


அடுத்தும்
ஓர்
அற்புதக் கவிதையா
என்ற அதிர்ச்சியில்
உறைந்தே நின்றான்

அன்புடன் புகாரி

No comments: