
தமிழ் இலக்கியத் தோட்டம் 2001ம் ஆண்டு டொராண்டோ - கனடாவில் தொடங்கிய ஆண்டிலிருந்து நான் அதன் இயல் விருது விழாவிற்குத் தவறாமல் சென்றுவருவதை மனநிறைவானச் செயலாகச் செய்துவருகிறேன். அன்போடு எனக்கு அழைப்பிதழ் அனுப்புவதை ஒருபோதும் இலக்கியத் தோட்டக் காவலர் அ.முத்துலிங்கம் அவர்கள் மறந்ததில்லை. நன்றி முத்துசார்.
இந்த ஆண்டின் சில சிறப்புகளைச் சொல்லியே ஆகவேண்டும்.
1. இதுவரை பல்கலைக்கழகம் மற்றும் விடுதி மண்டபங்களில் நடத்திவந்த இயல் விருது விழா, இம்முறை அழகிய விருந்து மாளிகையில் அமர்க்களமாய் நடந்தது. புதுமையாக அனைவருக்கும் இரவு உணவும் வழங்கப்பட்டது. தொலைதூர விமானப் பயணத்தில் தரப்படும் உணவைப் போலத் தரமானதாக அது இருந்தது. சுகமாக நண்பர்களுடன் அமர்ந்து இனிதாக அனைத்து உரைகளையும் கேட்க முடிந்தது. ஆக மொத்தத்தில் முன்பெல்லா விருது விழாக்களையும் விட இம்முறை கூடுதல் வசதி கொண்டதாக இருந்தது.

3. சேலைகட்டி வந்து செந்தமிழ் பேசிய சுவிசர்லாந்து ஈவ்லின் என்ற பெண்மணிக்கு மொழியாக்க விருது வழங்கப்பட்டது. பச்சைச் சேலையில் வெள்ளைப் புறாவாக வந்து ஆங்கிலக் கலப்பே இல்லாமல் தமிழ் பேசியதைப் பாராட்டத்தான் வேண்டும். தமிழ்ச் சிறுகதைகளை ஜெர்மன் மொழியில் ஆக்கித் தந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். தமிழைப் பிறமொழி நாவின் வழியே கேட்பதைக் காட்டிலும் இனியது குழலும் இல்லை யாழும் இல்லை.

5. இளம் மாணவிகளிடையே தமிழை ஊக்குவிக்கும் விதமாக, மேடையேறும் தகுதியுடைய பள்ளி மாணவிகளை அவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி விருது பெறுவோர் பற்றிய முன்னுரைகளை வழங்கச் செய்தது புலம்பெயர்ந்த நாடுகளில் இளைய தலைமுறையினரிடையே தமிழ் வளர்ச்சிக்கான பாராட்டுக்குரிய பணி என்பதில் ஐயமில்லை.

மொழியாக்கங்கள் கட்டுரைகள் என்று இருபதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளார். கவிஞர் சேரன் இயல்விருது பற்றி அருமையான அறிமுகமும் விளக்கமும் கொடுத்துப் பேசினார். அப்படிப் பேசும்போது, ஒரு பெரிய கவிஞனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது கிடைப்பது இதுவே முதல் முறை என்றார். ஆனால் முதல் இயல்விருதே ஒரு பெரிய கவிஞர் சுந்தரராமசாமி அவர்களுக்குத்தானே வழங்கப்பட்டது என்று நான் நினைத்தேன். இவ்வேளையில் பசுவைய்யா என்ற புனைபெயரில் சுந்தரராமசாமியின் புகழ்பெற்ற கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது, உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு
அடுத்து நா. சுகுமாரனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. நான் கவிஞரின் மொழிபெயர்பான பாப்லோ நெருதா கவிதைகளை வாசித்திருக்கிறேன். ஆனால் இது மொழியாக்கக் கவிதையல்ல.
அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்
கவிஞர் சேரனையும் குறிப்பிட்டதால் அவரின் கவிதை ஒன்றையும் இங்கே பகிர்வதுதான் சரி என்று படுகிறது. இதோ சேரனின் கவிதை ஒன்று:
அம்மா அழாதே
நின் காற்சிலம்பிடை இருந்து தெறித்தது
முத்துக்கள் அல்ல
மணிகளும் அல்ல
குருதி என்பதை உணர்கிற பாணிடியன்
இங்கு இல்லை

எப்படி இத்தனை பெரியதொரு கொடையை அள்ளிக்கொடுத்தீர்கள்?
முத்துலிங்கம் சொன்னாரே, திருஞானசம்பந்தம் சொன்னாரே அதுபோன்ற தொரு மனோ நிலையில்தான்!
உங்களுக்குத் தமிழ் தெரியுமா? தமிழில் உரையாடுவீர்களா?
தெரியும்!
பிறகு ஏன் மேடையில் ஒரு சொல்லும் தமிழில் சொல்லவில்லை?
நான் தமிழில் பேசத் தொடங்கி இருந்தால் என்னால் இப்படிச் சில நிமிடங்களிலேயே கீழே இறங்கி இருக்க முடியாது. அரைமணி நேரமாவது எடுக்க வேண்டி வந்திருக்கும் என்பதால்தான்!
எப்படி வந்தது இத்தனைத் தமிழ்ப்பற்று?
தாய் மொழியையும் தாய் மண்ணையும் விட்டு நான் நாற்பதாண்டுகளுக்கு முன்பே இங்கு வந்துவிட்டேன். தமிழுக்காக நான் எதையும் செய்யவில்லை என்ற ஏக்கம் எனக்குள் பெருகிக் கிடக்கிறது. தமிழ் உலகமெல்லாம் நிறையவேண்டும், புலம்பெயர்ந்தாலும் தமிழர்களெல்லாம் தமிழோடு வாழவேண்டும்!
8. நான் அன்புடன் என்ற ஒரு கூகுள் குழுமத்தைச் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் தொடங்கி நடத்தி வந்தேன். அங்கே கணித்தமிழ் பயின்றவர்களும், தமிழ்க் கவிதை பயின்றவர்களும் ஏராளம். அதில் முக்கியமான ஒரு கவிஞர் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ரிஷான் செரீப். அன்புடன் அவர் கவிதைகளுக்குத் தளம் தந்தது உயர்வுக்கு விமரிசனங்களைத் தந்தது. நேற்று அவர் பெயர் இறுதி மணித்துளிகள் என்கிற மொழியாக்க நூலுக்கு அறிவிக்கப் பட்டபோது பெரிதும் மகிழ்ந்தேன். அவர் ஏன் விழாவுக்கு வரவில்லை என்று வருத்தப்பட்டேன்.
9. புனைகதைக்கான விருது பெற்ற சயந்தன், கவிதைக்கான விருது பெற்ற சங்கர ராம சுப்ரமணியன், கணினிச் சாதனைக்காக விருதுபெற்ற சீனிவாசன், இலக்கியச் சாதனை சிறப்பு விருது பெற்ற டேவில் சுல்மான் மற்றும் இரா. இளங்குமரன், மாணவ உதவித்தொகை விருதுபெற்ற சோபிகா சத்தியசீலன் ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
கவிஞர் சங்கர சுப்ரமணியனின் கவிதை ஒன்று:
தெலைபேசியில் உள்ள எண்காட்டியில்
எண்கள் நடுங்குவதை
முதல் முறையாய் பார்க்கிறீர்களா.
உங்கள் அழைப்புமணியின் ரீங்காரம்
இதவரை செல்லாத நிலவுகளின்
சுவர்களுக்குள்
ஊடுருவுவதை உணர்கிறீர்களா.
நீங்கள் அழைக்கும் நபர்
சற்றுமுன் இறந்தவராய் இருக்கக்கூடும்.
பெருமைகொள் தமிழா என்று தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவை செய்யும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பான இப்பணியை வாழ்த்திப் பாராட்டுவோம்.
அன்புடன் புகாரி
ஜூன் 19ம் 2017, டொராண்டோ, கனடா
1 comment:
அருமை
செலவில்லாமல் ,அழைப்பில்லாமல் .நேரில் வந்து கலந்துரையாடல் கொண்ட மகிழ்வு .சிறப்பான படங்கள் மற்றும் விவரமான சிறந்த கவிதை நடை ஓட்டங்கள் மனதை மகிழ வைக்கின்றன
காலம் வரும் அன்புடன் புகாரியை கனடாவில் சந்தித்து நினைத்ததெல்லாம் பேசி மகிழ்வதற்கும்
ஒரத்தநாடு .அதிரை ,முத்துப்பேட்டை ,பட்டுக்கோட்டை உணவுகளை டொராண்டாவில் உண்டு மகிழ்வதற்கு
அன்புடன்
Post a Comment