கவிதையில் கருத்து எண்ணத்தில் கருக்கொண்டாலும் ஓசை நயம் அமைவது எப்படி? சில நுணுக்கங்களைப் பகிர்வீர்களா?

விற்பனர்க்கும் அற்புதமே
       முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
       சுற்றுலக முற்றுகையே
வெற்றிநிறை கற்றறிவே
       நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணை பெற்றுயர
      பற்றுகிறேன் நற்றமிழே

நான் எழுதிய பல தமிழ்த்தாய் வாழ்த்துக்களுள் இக்கவிதையும் ஒன்று.

உலகக் கவிதைகளை எல்லாம் ஓர் அலசலுக்கு உட்படுத்தினால், சந்தம் என்ற செழுமையில் தமிழ்க் கவிதைகள் நிச்சயம் தலையாயதாய் நிற்கும். வேறு எம்மொழியிலும் இசைகூட்டி எழுதுவதில்லை என்று பொருளல்ல. எல்லோரும் பூக்களைக் கோக்கிறார்கள் என்றால் தமிழ் பூந்தோட்டங்களையே கோக்கும் அளவுக்கு யாப்பிலக்கணச் செழுமைகளைக் கொண்டது.

எதுகை, மோனை, அசை, சீர், தளை, அடி, தொடை, அணிகள் என்று போய்க்கொண்டே இருக்கும், செம்மையாக வகுக்கப்பட்டு இசையை அழகாக வளமாகக் கவிதைகளுக்குள் கொண்டுவந்து சேர்க்கும்.

கவிதை எழுத வருகிறேன் என்று ஆர்வமாக வந்தவர்கள், இந்த யாப்பிலக்கணத்தின் கடுமையான விதிகளைக் கேட்டு, முயன்று தலைதெறிக்க ஓடி இருக்கிறார்கள். ஏனெனில் அதுவல்ல தமிழ்க் கவிதைகளை அணுகும் முறை.

இலக்கியம்தான் முதலில் வந்தது அதன் பின்னரே இலக்கணம் வந்தது.

முந்தாநாள் படைக்கப்பட்ட இசை கூட்டிய கவிதைகளுக்கு இலக்கணம் வகுத்து அப்படியான கவிதைகளை இப்படி எழுதவேண்டும் என்றான் நேற்றைய தமிழன்.

ஆனால் அந்த சந்தம் எப்படிக் கைகூடும். அது இசைமீதான நம் ரசனையைப் பொருத்தது. இசைகூட்டிய கவிதைகளை ரசிக்க ரசிக்க அந்த இசை நம் நெஞ்சில் வந்து தங்கிவிடும். பின் அந்த இசையை உள்வாங்கிக்கொண்டு நாம் கவிதை எழுதத் தொடங்கினால் அது தானே இயல்பாய் வந்துவிடும்.

சித்திரமாம் கைப்பழக்கம் செந்தமிழாம் நாப்பழக்கம் என்பது போல, பழக்கமும் கைகொடுக்கும்.

கவிதையை எழுதி முடித்ததும் பின் அதை எடுத்து வைத்துக்கொண்டு யாப்பிலக்கணத்தைச் சரிபார்த்தால் போதும். அநேகமாக யாப்பிலக்கணம் அதில் சரியாகவே அமைந்திருக்கும் என்பது ஓர் ஆச்சரியம்.

ஆனால் நான் அப்படி யாப்பிலக்கணத்தைச் சரிபார்ப்பதில்லை. என் நெஞ்சில் உள்ள இசைக்கு இயைந்ததாய் இருந்தால் மட்டும் போதும் அப்படியே விட்டுவிடுவேன். ஆகவேதான் என்னிடம் நான் எழுதிய ஒரு கவிதையைக் காட்டி இது வெண்பாவா என்றவருக்கு இல்லை இது என்பா நண்பா என்றேன்.

பழைய பா வகைகளைத் தாண்டி என்னால் புதிய பா வகைகளைப் படைக்க முடிவது என் இந்த இயல்பால்தான். அதைப் புலவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் காத்திருப்பதில்லை. என் கவிதையை நான் எழுதிச் சென்றுகொண்டே இருக்கிறேன்.

ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து
வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

நான் யாப்பிலக்கணத்தைச் சரிபார்க்காத ஓர் இசைக்கவிதையின் முதல் நான்கு அடிகள்தாம் இவை.

No comments: