ஓர் இஸ்லாமியன் வணக்கம்  என்று முகமன் கூறலாமா?

வணக்கம் என்ற சொல் ஒருவருக்கு ஒருவர் அன்பு தருவது, இன்முக இணக்கம் தருவது, உரிய மரியாதை தருவது என்று தொடங்கி பல அர்த்தங்களைக் கொண்டது.

ஒரு 90 வயது முதியவர் ஒரு 5 வயது சிறுவனிடம் வணக்கம் என்று சொல்கிறார். அதற்கு என்ன பொருள்?

முதியவர் சிறுவனுக்கு அன்பு தருகிறார், இன்முக இணக்கம் தருகிறார், உரிய மரியாதை தருகிறார்.

சிலருக்குத் தோன்றும் சிறுவனுக்கு ஏன் மரியாதை?

உலகின் சிறந்த பண்பாடே எல்லோருக்கும் எல்லோரும் மரியாதை தருவதுதான். யாரும் கீழானவரும் இல்லை யாரும் மேலானவரும் இல்லை.

இதைத்தான் ’பெரியோரை வியத்தலும் இலமே தம்மிற் சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று தமிழ்ப்பண்பாடும் சொல்கிறது, சகோதரத்துவம் என்று இஸ்லாமும் சொல்கிறது.

ஒரு மாணவன் ஆசிரியருக்கு வணக்கம் சொல்கிறான் . ஓர் ஆசிரியர் மாணவனுக்கு வணக்கம் சொல்கிறார்.

ஒரு அரசியல் தலைவர் மக்கள்முன் வந்து வணக்கம் என்று சொல்கிறார்.  மக்கள் அரசியல் தலைவருக்கு வணக்கம் சொல்கிறார்கள்.

ஒரு குடிமகம் குடியரசுத் தலைவருக்கு வணக்கம் சொல்கிறான். அந்தக் குடியரசுத் தலைவரும் அந்தச் சாதாரண குடிமகனுக்கு வணக்கம் சொல்கிறார்.

இங்கெல்லாம் பரிமாறிக்கொள்ளப்படுவது அன்பும் இணக்கமும் மரியாதையும்தானேயன்றி  தொழுதல், வழிபடுதல் அல்ல என்று பெரிய விளக்கங்களைக் கூறிப் புரியவைக்க வேண்டிய அவசியமே இல்லை.

தமிழ் மிகவும் சொல்வளம் மிக்க மொழி. வணக்கம் என்ற சொல்லுக்குத் தமிழில் பலபொருள்கள் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டிருந்தாலும் இவை மட்டுமே என்று சொல்லிவிடமுடியாத அளவுக்குத் தமிழ் வளமை நிறைந்த மொழி.

அன்பு பரிமாறல்
இணக்கம் பேணுதல்
உரிய மரியாதை தருதல்
போற்றுதல்
வாழ்த்துதல்
வரவேற்றல்
நன்றி உரைத்தல்

இவை பயன்படுத்தும் இடத்திற்கேற்ப மாறிவரும்.

பலருக்கும் ஆங்கிலத்தை உதாரணமாகச் சொன்னால் சட்டென்று விளங்கிவிடும். love என்பது நான்கே எழுத்துச் சொல்தான். ஆனால் இதன் பொருள் இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

I love you என்று...

தாய் மகனிடம் சொல்கிறாள்
மகன் தந்தையிடம் சொல்கிறான்
சகோதரன் சகோதரனிடம் சொல்கிறான்
நண்பன் நண்பனிடம் சொல்கிறான்
காதலன் காதலியிடம் சொல்கிறான்
கணவன் மனைவியிடம் சொல்கிறான்
ஆசிரியன் மாணவனிடம் சொல்கிறான்
மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான்
ரசிகன் கலைஞனிடம் சொல்கிறான்
கலைஞன் ரசிகனிடம் சொல்கிறான்
பக்தன் கடவுளிடம் சொல்கிறான்

இன்னும் யார் யாரோ யார் யாரிடமோ சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரே பொருள்தான் என்று எவரும் சொல்லமாட்டார்.

இப்படியான love என்ற சொல்லுக்கு இணையான அல்லது அதனினும் மேம்பட்டத் தமிழ்ச் சொல்தான்  வணக்கம்.

வணக்கம் என்ற சொல் மனிதருக்கு மனிதர் சொல்லும் முகமனாக பயன்படும்போது, வணங்குதல் என்ற சொல் இறைவனை மட்டுமே வணங்குவதற்கு உரியதாய் ஆகிவிடுகிறது குறிப்பாக இஸ்லாத்தில்.

என் தந்தையை நான் வணங்கிவிட்டு வருகிறேன் என்று ஒரு இஸ்லாமியன் சொல்ல மாட்டான். ஏனெனில் பெற்றோரைத் தெய்வமாகக் காண்பது இஸ்லாத்தில் இல்லை.

என் ஆசானை நான் வணங்கிவிட்டுவருகிறேன் என்று ஒரு இஸ்லாமியன் சொல்லமாட்டான் பதிலாக என் ஆசானுக்கு வணக்கம் சொல்லி நலம் விசாரித்துவிட்டு வருகிறேன் என்று சொல்வான். ஏனெனில் ஆசானைத் தெய்வமாகக் காண்பது இஸ்லாத்தில் இல்லை.

வணங்குதல் என்பது இறைவனைத் தொழுதல் அல்லது வழிபடுதல். அந்த வழிபாட்டில்

நான் உன்னைப் படைத்தவனல்லன்
நீதான் என்னைப் படைத்தவன்

நான் உனக்கு அருள் தருபவனல்லன்
நீதான் எனக்கு அருள் தரவல்லவன்

நான் தேவைகள் உள்ளவன்
நீயோ தேவைகள் அற்றவன்

நான் இறப்பினைக் கொண்டவன்
நீயோ இறப்பே இல்லாதவன்

நான் மனிதன்
நீ இறைவன்

போன்ற அறிதல்களே இருக்கும்.

ஆகவே சிரம்தாழ்த்தி நெற்றி மண்ணில் பதிய இறைவா உன்னை நான் வணங்குகிறேன்

இவ்வாறான வணங்குதலை நானே உனக்குச் செய்கிறேன் நீ எனக்குச் செய்வதில்லை

ஒரு கற்பனைக்கு இப்படி வைத்துக்கொள்வோம். இறைவன் நேரில் வந்துவிட்டான்.

இறைவா நான் உன்னை வணங்குகிறேன் என்று ஒருவன் நெற்றியைத் தரையில் முத்தமிடச் செய்கிறான். இறைவன் என்ன செய்வான்?

தானும் அந்த மனிதனிடம், மனிதா நான் உன்னை வணங்குகிறேன் என்று தன் நெற்றியைத் தரையில் முத்தமிடச் செய்து கிடப்பானா?

கற்பனையிலும் கூட இது ஏற்புடையதாய் இல்லை அல்லவா? ஆகவே வணக்கத்தையும் வணங்குதலையும் ஒன்றென எவராலும் கொள்ளமுடியாது.

இஸ்லாமிய சகோதரர்கள் பிற இஸ்லாமிய சகோதரர்களைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்கிறார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் அன்பும் அமைதியும் நிறைக என்று பொருள். சாந்தியும் சமாதானமும் உண்டாகுக என்று பொருள்.

அப்படியான அஸ்ஸலாமு அலைக்கும் என்ற முகமனை இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே இஸ்லாமியர் சொல்லலாம். இறை நம்பிக்கையே இல்லாதவரிடமும்கூட சொல்லலாம்.

இஸ்லாமியர் அல்லாத ஒருவரைச் சந்திக்கும்போது அவரிடம் அஸ்ஸலாமு அலைக்கும்  என்று சொல்வது மிகவும் நல்லது. அது இஸ்லாத்தின் மீதுள்ள புரிதல்களை உலகெங்கும் வளர்க்கும்.

அதோடு மனிதகுலம் அனைத்தும் சாந்தி சமாதனத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணுவது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று. அதை ஓர் இஸ்லாமியன் செய்யத்தானே வேண்டும்?

பொருளையும் பயன்பாட்டையும் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால் யாதொரு குழப்பமும் வராது.

வணக்கம் என்று முகமன் கூறும் மாற்றுமதத்தவருக்கு நிச்சயமாக வணக்கம் என்று பதில் சொல்லலாம், அல்லது அவர்களை நோக்கி நாம் வணக்கம் என்று கூறி நம் உரையாடலைத் தொடங்கலாம்.

இதனால் நாம் ஏதும் இறைவனுக்கு இணைவைத்துவிட்டோமோ என்று ஐயம் கொள்ளத் தேவையில்லை.

வணக்கம் என்று சொல்வது வணங்குவது இல்லை, தொழுவது இல்லை, வழிபடுதல் இல்லை, இணைவைப்பது இல்லை என்பது தெளிவானதாக இருந்தாலும், ஒருவருக்கு அவரின் மன இயல்பு காரணமாக, வணக்கம் என்று மறுமொழி சொல்வது  சங்கடம் தருவதாக இருந்தால், பிறர் வணக்கம் என்று சொல்லும்போது, தமிழிலேயே வேறு ஏதேனும் நல்ல வார்த்தையைச் சொல்லலாம்.

உதாரணமாக, ‘மகிழ்ச்சி’, ‘சந்தோசம்’, ‘நலம்பெருக’, ’இனிதாகுக’, ‘வாழ்க’, ‘வளர்க’, ’வாழ்க வளமுடன்’, ‘அருள் நிறைக’, 'அன்பு வளர்க’, ’இன்பம் நிறைக’, ’இனிமை பொங்குக’ என்று எதையாவது மென்மையான முறையில் கூறலாம். அல்லது அலைக்கும் அஸ்ஸலாம் என்றும் சொல்லலாம்.

ஓர் இஸ்லாமியன் வணக்கம் என்று சொல்லும்போது அவனுக்கு ஓர் ஐயமும் சங்கடமும் வருவதற்கு மிக அழுத்தமான காரணம் உண்டு.

இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படை நம்பிக்கை என்னவென்றால் ‘வணங்குதலுக்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை’ என்பதுதான்.

அதாவது இஸ்லாம் மனிதர்களை இறைவனாகப் பார்க்காது. குருவை இறைவனாக எண்ணி வணங்காது. பெற்றோரை கடவுள்களாக்கித் தொழாது. தலைவர்களைத் தெய்வங்களாக்கி  வழிபடாது.

ஒரு சொல்லில் சொல்வதென்றால் இறைவனுக்கு இணைவக்கவே வைக்காது.

எப்போது ஓர் இஸ்லாமியன் இறைவனுக்கு இணை வைக்கிறானோ அப்போது அவன் இஸ்லாத்தைவிட்டே வெளியேறுகிறான் என்றாகிவிடும்.

ஆகவே வணக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் நாம் எங்கே இணைவைத்துவிடும் கொடும் பாவத்தைச் செய்துவிடுவோமோ என்று ஓர் இஸ்லாமியன் அஞ்சுகிறான்.

ஆகையால் அவனது சங்கடத்தை மாற்று மதத்தினர் தவறாக எண்ணுதல் கூடாது.

அதுபோலவே, ஓர் இஸ்லாமியனும் வணக்கம் என்று மணிதர்களிடம் சொல்வதால் அவன் இறைவனுக்கு இணைவைத்துவிட்டான் என்று அச்சங்கொள்ளத் தேவையில்லை.

தாய் மண்ணே வணக்கம் என்றால் தாய் மண்ணை நான் நேசிக்கிறேன் என்றுதான் பொருள். தாய் மண் என்பது இறைவன் என்று பொருள் அல்ல.

வணக்கம் என்று சொல்வது வேறு, இறைவனை வணங்குதல் என்னும் தொழுகை என்பது வேறு  என்கிற வேறுபாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளும் முகமாகத்தான் இறைவனை வணங்குதலைத் தமிழில் தொழுகை என்றும் மனிதர்களுக்கு முகமன் கூறுவதை வணக்கம் என்றும் அன்றே அழகாக வரையறுத்துக் குழப்பத்தை நீக்கி இருக்கிறார்கள் இஸ்லாத்தை நன்கு அறிந்த தமிழ் அறிஞர்கள்.

அன்புடன் புகாரி



No comments: